Sunday, March 27, 2011

Our Moms always rock

ஒரு மாதம் அம்மா வீட்டில். வருடம் இப்படி ஒரு மாதம் கிடைத்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால் எப்போதும் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டுமெனவா பிரார்தித்துக் கொள்ள முடியும்.. ஒவ்வொரு பயணமும் தூக்க முடிந்த பெரு மூட்டையளவு அனுபவங்களைத் தருகிறது. அவைகளுக்கு இப்பயணத்திலும் குறைவில்லை.

இப்பயணத்தின் எதிர்பாரா சந்திப்பு கவிஞர் நேசமித்திரனுடனானது. "ஹலோ, சொல்லுங்ண்ணே..” என அவர் பேசிப் பார்க்கையில் அவர் எழுத்தையும் பேச்சையும் இணைத்துப் பார்த்து வரும் மிரட்சி முதன்முறை பார்க்கும் யாருக்கும் வருவதுண்டு. அப்படி ஒரு எளிமையான நட்பான மனிதர். பதிவ நண்பர் சிவாவையும், கூடவே தோழியையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு நேசமித்ரனுடன் ஆண்டாள் கோவிலடைந்தோம்.

நான் நடை பயின்றதே ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் எனலாம். தடுக்கி விழுந்தால் கோவிலென ஆண்டாள் கோவில் என் வீட்டு முற்றமாயிருந்த காலமுண்டு. நேராகப் போய் ஆண்டாளின் அழகில் மயங்கி எழுந்து வருவதே பெருங்காரியம். ஆனால் அழகு ஆண்டாளிடம் மட்டுமல்ல, அக்கோவிலின் ஒவ்வொரு தூணிலுமென சொல்லிக் கற்றுத் தந்தார் கவிஞர்.

அவர் சொல்லச் சொல்ல இத்தனை நாளாய் இவையெதையும் கண்டுணராத குற்றவுணர்ச்சியும், அவர் சொல்லும் விஷயங்களின் ஆழமும் புதுமையும் அவை மீதான சிறுபிள்ளைத் தனமான சந்தேகங்களுமென ஒரு கலக்கல் மாலை அனுபவம்.

முதன் முறையாக கற்சிற்பங்களின் அழகில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லயித்திருந்தேன். ஒவ்வொரு விஷயத்திலுமிருக்கிற கற்றலை அவர் மூலமறிய முடிந்தது. மதுரை சாயலில் பேசிக்கொண்டேயிருக்கையில் இலக்கியம் பேசுகிறார்; கவிதை கிறுக்குகிறார். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் கவிதையுடன் எவ்வளவு நேரம் வாழ முடியும். இவரின் ஒவ்வொரு வினாடியும் கவிதையுடனேயே ஆரம்பித்து முடிகிறது. கொஞ்சம் மிரட்சியுடனும் அதிக மரியாதையுடனுமே அவர் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னை விட அதிகமான ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிவா அடுத்து ஒரு நாள் முழுக்கக் கவிஞர் பற்றியும் அவரிடம் விவாதித்த விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். (கவிஞன்யா!)
*************************************************************************************************************

ஏற்கனவே யோகிக்கும் எனக்கும் புத்தக அலமாரியால் வரும் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தடிமனான என்சைக்ளோபீடியாக்களும், டெக்ஸ்டைல் மற்றும் ஐடி ரெஃபெரென்ஸ் புத்தகங்களும் அவற்றின் பரிமாணங்களையொத்த நாவல்களுமென ஆறடுக்கு அலமாரியின் நான்கடுக்குகளை எடுத்துக் கொண்டு விட்டார். மீதியிருக்கும் என் இரு அடுக்குகளிலும் அவ்வப்போது வாடகைக்கு அவர் புத்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை எடுத்து த்ரோபால் விளையாடுவது என் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இனி அது முடியாதெனும் அளவுக்கு அவ்வடுக்குகளை நிறைக்க புத்தகங்களை ஊரிலிருந்து வாரி வந்துள்ளேன். நான் வாங்கிய புத்தகங்கள் போதாதென நண்பர்களிடமிருந்தும் பரிசாகப் புத்தகங்கள். மொத்தம் பதினைந்து கிலோவுக்கு. இனி யோகி ஒரு துண்டு காகிதம் வைக்க வேண்டுமென்றாலும் கூட இடமில்லை.
(வழக்கம் போல வாங்கிட்டு வந்தாச்சு. வாசிக்கறது எப்போதுன்னு தான் தெரியல..)

*************************************************************************************************************

சென்னை - எனக்கு மிகப் பிடித்த ஊர். காரணம் இதுதானெனக் குறிப்பிட்டுச் சொல்ல சிறுவயதிலிருந்து தெரியவில்லை. எல்லோருமாய் குடும்பத்துடன் மஹாபலிபுரம் போனோம். அங்கே இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 ரூபாயெனவும், வெளிநாட்டவருக்கு 250 ரூபாயெனவும் எழுதப்பட்டிருந்தது. நான் பார்த்த வரையில் இம்மாதிரியான கட்டண வித்தியாசம் எல்லா இந்திய நகரங்களிலும் உள்ளது.
உடனிருந்த அங்கிள் டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டார்..
“ஏங்க, நமக்கு மட்டும் 10 ரூபா.. வெளிநாட்டுக்காரங்களுக்கு 250?”
பதில் சொன்னவர் தெரியாதென சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அவர் சொன்ன பதில்...

“ஏன்னா அவங்க வெளிநாட்டுக்காரங்க”
”போயாங்......” மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

*************************************************************************************************************

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல் பதிவுலகம் அதிக உற்சாகத்துடனும், சுவாரஸ்யப் பதிவுகளுடனும் இனி எப்போதிருக்கும் என்ற ஏக்கமும் கேள்வியும் தொக்கி நிற்கின்றன. ஒரு வேளை பதிவுலகம் அப்படியே தானிருக்கு, நான் தான் எழுதலையோங்கற கேள்வியும் அடிக்கடி வந்து போகுது. ரெண்டும் தான்னும் தோணுது. ஏன்.. ஏன்... அப்படின்னு கேள்வி உள்ளுக்குள்ள எக்கோ ஆகறதுக்கு முன்னாடி வாசிப்பு அதிகரிக்கையில் எழுத்து குறையுமெனும் தர்க்கமும் வருது. இல்ல, யஹூ, ஆர்குட், ஃபேஸ்புக் மாதிரி ப்ளாகும் சீசனல் தானான்னும் தெரியல. இருந்தாலும் அடிக்கடி நிகழும் பதிவர் சந்திப்புகளும், வாசித்த புத்தகங்கள் மனதிற்குள் ஏற்படுத்தும் தாக்கமும் ப்ளாகை இன்னும் கொஞ்ச நாட்கள் கொண்டு போகுமெனத் தோன்றுகிறது. (எழுதாம இருக்கற சோம்பேறித்தனத்துக்கு என்னெல்லாம் சாக்கு..)

*************************************************************************************************************

மெயிலில் ரசித்தது:

2011 வேர்ல்ட் கப்பை இந்திய அணி 100% நிச்சயம் ஜெயிக்கும். ஏன்னா...


















virenderR shewag
sachin tendulk
Ar
yuvra
J singh
gaut
Am gambhir
yusuf patha
N
ms dhon
I
virat
Kohli
harbh
Ajan singh
zaheer kha
N
s sreesan
Th
r as
Hwin

(எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க :) )

*************************************************************************************************************

அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கையில் தங்கை என்ன செய்கிறாளெனக் கேட்டேன்.
அம்மாவின் பதில் “அவ சங்கீத பரம்பரைல இருந்து வந்திருக்காள்ல. அதனால காலைல எழுந்ததுல இருந்து காலேஜ் போற வரை டிவி அல்லது சிடி ப்ளேயர்ல பாட்டு ஓடணும். சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து படுக்கப் போற வரைக்குமும் அதே தான்.”
பாட்டுக் கேக்கறது குத்தமாய்யா.. எப்போதோ வாசித்த ஒரு குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது.

அம்மாக்கள் குழந்தைகள் இரவு படுக்கப் போகும் முன்:

England Mom: Good Night Dear
Gujrathi Mom: Shubh Raat Beta
Pakistani Mom: Shaba Khair
Tamil Mom: நான் அந்த மொபைலை தூக்கி அடுப்புல போடப் போறேன் பாரு. தூங்கப் போறியா இல்லையா.. (Our moms always rock. :) )

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைய எத்தனித்த பொழுது வழக்கமான சாவி தேடும் படலம் ஆரம்பமானது. யோகி உதவுவதாய் ஹேண்ட்பேக்கைப் பார்வையிட்டார்.
ஒரு அலட்சியப் பார்வையுடன், “Its not that easy to find something from a lady's purse" என்றவாறே அவர் பக்கமிருந்து பையை என் பக்கமிழுத்தேன்.
சட்டென்று சாவியை எடுத்து விட்டுச் சொன்னார் “For that you need to have a man's eye"
(அட! )

Monday, February 14, 2011

குட்லக் பாய்ஸ்!!!


காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது. இந்தக் காதல்ல இருக்குறவங்க எப்போ பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா அலையுறாங்களே அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு நம்ம காதைத் தீட்டி ஒட்டுக் கேட்டோம்ன்னா பெரும்பாலும் “ம்” தான் இருக்கும். ரெண்டு பேரும் மாறி மாறி “ம்” கொட்டிப்பாங்க. அடிக்கடி “வேற” அப்படிம்பாங்க. அப்படின்னா பேச ஒண்ணுமில்லை ஃபோனை வைப்பாங்கன்னு அர்த்தமில்லை. பேச ஒண்ணுமே இல்லைன்னாலும் பேசுறதுல ரொம்ப சிரத்தையா உலகத்தையே மறந்து பேசிக்கிட்டிருக்குற இவங்களைப் பார்த்தா வினோதமா இருக்கும்.


காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.


1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.


2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.


3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ அல்லது அலுவலகத்துல யார்கிட்டேயாவது டோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டாலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.


4. உங்க காதலியோட எப்போ வெளில போனாலும் அவங்க கைல இருக்குற பெரிய பேகை நம்பிப் போகாதீங்க. அதுல பணம் தவிர எல்லாக் குப்பையும் இருக்கும். ஆனாலும் அவங்க எல்லாத்துக்கும் தானே பே பண்ற மாதிரி சீன் போடுவாங்க. ம்ஹூம், 2 ரூபாய் ஹேர்ப்பின்ல இருந்து 2000 ரூபாய் டெட்டி பியர் வரைக்கும் நீங்களே தான் செலவு பண்ணனும். பண்ணுங்க. எல்லாத்தையும் மொத்தமா அவங்கப்பா கிட்ட பின்னாடி வாங்கிக்கலாம் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா.


5. காதலியை வெளில சாப்பிடக் கூட்டிட்டுப் போய் நீங்க வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விடாதீங்க. அப்புறம் அம்மணி உங்ககிட்ட இருந்து ஆறடி தள்ளிப் போயிடும்.


6. முடியும் போதெல்லாம் “ஐ லவ் யூ” சொல்லுங்க. பல நாட்கள் இது மட்டுமே பேச்சா ஓடலாம். உங்களுக்கு சொல்ல போரடிச்சா ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு அவங்க ஃபோன் பண்ணும் போது போட்டு விட்டுடுங்க. அந்த ஒரே டயலாக் கேட்டே அவங்க மனசு குளிர்ந்துரும்.


7. எப்போவுமே உங்க குடும்பத்தைப் பத்திப் பேசாதீங்க. அவ்ளோ தான். இப்போவே மாமியார் துவேஷம், நாத்தனார் கடுப்பெல்லாம் ஆரம்பமாகிடும். ஆனா அவங்க குடும்பத்தைப் பத்தி அவங்க சொல்லும் போது பொறுமையா கேளுங்க. முடிஞ்சா அவங்க கையைப் பிடிச்சுகிட்டோ இல்லைன்னா தலையைத் தடவிட்டோ கேளுங்க. அப்பப்போ ஒரு “ம்” மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.


8. அவங்க என்ன ட்ரெஸ் போட்டிருந்தாலும், என்ன மேக்கப் போட்டிருந்தாலும் “வாவ்”ன்னு ஒரு வார்த்தை சொல்ல மறக்காதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கூட. ஆனா உங்க ட்ரெஸ் நல்லா இல்லைன்னு அவங்க சொன்னா அதை ஏத்துக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்கு ரசனை அதிகமாம்.


9. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க. கல்யாணத்துக்கப்புறம் தவறிக் கூட சமையலறை பக்கம் போக மாட்டாங்க. போனாலும் நீங்களே வேண்டாம்ன்னு தடுக்குற அளவுக்கு டெரரா சமைப்பாங்க.


10. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.


11. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....


12. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை வாங்குறதோட பர்ஸ் காலியாகுற அளவுக்கு ஐட்டங்களும் வாங்கிக் குடுக்கணும். ஏன்னா பொண்ணுங்க கெமிஸ்ட்ரி உங்க கூட ஒத்துப் போகுதோ இல்லையோ, தங்கம், வைரம்ன்னு நகைகள் கூட நல்லா ஒத்துப் போகும். ஆனா அவங்களுக்காக நீங்க மணிக்கணக்குல காத்திருக்குறதோட இல்லாம அதை ஒரு தடவை கூட சொல்லிக் காட்டிடாதீங்க.


இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.

(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)

Wednesday, January 19, 2011

மதன்-மது-அது

அவளுக்காகவே அன்று அலுவலகத்தில் பாதி நாள் விடுமுறையெடுத்து வீடு திரும்பினான் மதன். சாவியின் ‘க்ளுக்’ சத்தம் கூடக் கேட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து அவளை ஆச்சரியப்படுத்த நுழைந்தவனின் உடல் அதிர்ந்து நடுங்கியது. ஹாலின் சுவர் ஓரமாய், முகம் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு உள்ளே மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தாள் மது. சுவாசமே ஒரு நொடி நின்று போயிருந்தவன் அவசரமாய் ஓடி அவளை விடுவித்துத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசிக்கையில் அவளை விட அவனுக்கு அதிகமாய் இதயம் படபடத்தது.

“என்னடா இதெல்லாம்” மதனின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
“சும்மா ஒரு முயற்சி தான், ஆனா சாக மாட்டேன்”
“.........ஆமா, இது நாலாவது தடவ. எனக்கென்னவோ பயமா இருக்கு”
“பயப்படாதீங்க, ஒண்ணும் ஆகாது. இந்த தடவை நிறைய எக்ஸ்பீரியன்ஸ்” அந்த சோர்விலும் சிரித்தபடி சொன்னாள்.

கூடவே அவள் கையில் ஒரு கடிதம்.

“தற்கொலைன்னா என்ன, அது எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கத் தான் முயற்சிக்கிறேன். இதுல எதுவும் விபரீதமாகி என் உயிர் போச்சுன்னா அதுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க என் மரணத்திற்கு நானே காரணம். - இப்படிக்கு மது.”

முறைத்த மதனைப் பார்த்துக் கெஞ்சலாக, “இல்லைங்க, உண்மையிலேயே உயிர் போய்டுச்சுன்னா என்னால உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்திடக் கூடாதுல்ல. அதான். சாரிப்பா” என்றவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது அவனுக்கு.

மது அழகில் குறைந்தவளில்லை. வளைந்த புருவங்கள், நீள மூக்கு, நேர்த்தியான பல்வரிசை, தொட்டாலே சிவக்கும் நிறம், சுண்டியிழுக்கும் அழகு. எம்.ஏ.சைக்காலஜி முடித்திருந்தவள், திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாததால் வீட்டிலிருந்தாள்.

இவளைத் தனிமையில் விட்டிருப்பது தவறோ? இவளுக்கு இப்படி ஒரு விபரீத சிந்தனை எப்படி வந்தது? மரணம் என்றால் என்ன, தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் ஒருவருக்கு வருகிறது, உண்மையில் தற்கொலையின் போது அதை மேற்கொள்பவரின் மனஓட்டம் எப்படி இருக்கும் என்ற விசித்திரக் கேள்விகளுக்கு விடை தேடுகிறாளாம். பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அவள் மீதான அதீத காதல் அவளைக் கடுமையாகக் கண்டிக்கவோ தண்டிக்கவோ தடுத்தது.

திருமணமான புதிதில் அவள் திடீரென ஆழ்ந்த யோசனைக்குப் போய்விடுவதை மதன் கவனிக்கத் தவறவில்லை. அதுவே படிப்படியாய் இப்படி சோதனை முயற்சிகளுக்கு வந்த போது அவன் ரொம்பத்தான் கலங்கிப் போனான். என்னதான் சைக்காலஜி படித்திருந்தாலும் இப்படித் தற்கொலை அனுபவத்தை உணர்ந்து பார்க்க வேண்டும் என்ற அவளது விபரீதமான ஆசை கொஞ்சம் அதிகம் தான். இதுவரை 4 வெவ்வேறு தற்கொலை முறைகளை முயற்சித்து விட்டாள்.

இரண்டாவது முறை முயற்சித்த போதே இந்த விஷயத்தை அவளது பெற்றோருக்கும் தெரிவித்துக் கண்டிக்க சொன்னான். ஆனால் “கல்யாணத்துக்கு முன்னாடியும் முயற்சி செஞ்சிருக்கா. இனி நீங்களே திருத்துங்க” என்பதே அவர்களின் பதிலாகவும் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

இருவரும் அப்படி ஒரு கச்சிதமான ஜோடியாகத் தான் இருந்தார்கள். விரைவாய் நகரும் பெங்களூரின் ஜெய் நகரிலிருக்கும் இந்த ஃப்ளாட்டிற்குக் குடி வந்து ஆறு மாதங்களாகின்றன. அமைதியான, சகல வசதிகளும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடம். ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் அவர்கள் திருமணம் பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு தஞ்சாவூரின் ஓரியண்டல் டவர்ஸ் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது. முதல் ஒரு வருடத்திற்குக் குழந்தை வேண்டாமென முதலிரவிலேயே தீர்மானித்து விட்டனர். வழக்கமான கொஞ்சல்களுடன் இனிமையாய்ப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. ஒரு முறை கூட அவளைப் பெயர் சொல்லி அழைத்திருக்க மாட்டானவன். செல்லம், அம்மு, குட்டி தான். அவ்வளவு நேசித்தான் அவளை.

ஐ.டி.கம்பெனியொன்றில் குறைவில்லாத சம்பளமும் கட்டுக்கடங்கா வசதிகளும் கொடுக்கப்பட்டிருந்த உயர் பதிவியிலிருந்தான் மதன். “டேய், நீ காக்க காக்க சூர்யா மாதிரி இருக்க. ஆஃபிஸ்ல எத்தனை பேர்டா சைட்டடிக்குறாளுங்க உன்னை” என அவன் மீசை இழுத்து அவள் கேட்கும் நேரங்களில் “அடியே, என்னால உன் ஒருத்தியையே சமாளிக்க முடியல. இன்னொன்னா... வேண்டாம்மா” என குறும்பாய்ச் சொல்லி அவள் காது கடிப்பான்.

பலதும் ஏனோ நினைவிற்கு வந்தது. அந்தப் பாலிதீன் பை குப்பைக்குப் போய் 3 மணி நேரமாகியும் மதன் அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் இருந்தான். எதுவுமே நடக்காதவளாய் மது படுக்கையில் ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

இப்படியே விட்டால் ஆபத்து என அடுத்த வாரமே அவளை கூர்க் அழைத்துச் சென்றான். இரண்டாவது தேனிலவு. மூன்று நாட்கள் முழுவதுமாய் அவளுடனிருந்தான். நிதானமாய் அவளிடம் பேசிப் புரிய வைத்தான். இனி இந்த விளையாட்டுத் தனங்களெல்லாம் கூடாது எனத் திட்டவட்டமாய்க் கூறினான். உறுதி வாங்கினான். “ப்ராமிஸ் டார்லிங்” என அவன் தலையிலடித்து அவள் சத்தியம் செய்த போது நெகிழ்ந்து போனான்.

அன்றிலிருந்து சரியாக ஆறு மாதம். அவர்களது திருமண நாள் அன்று. அவள் பரிசளித்த வெளிர் நீல நிற நேர்கோடுகளிட்ட சட்டையும், அடர் நீல நிற பேண்டும் அணிந்து கம்பீரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
“லுக்கிங் ஸ்மார்ட். ஹேப்பி வெட்டிங் அனிவெர்ஸரி. வேர் இஸ் த பார்ட்டி” என்ற நண்பனுக்குப் புன்னகைப் பரிசளித்தான்.

“பார்ட்டி இஸ் ஒன்லி வித் மை வொய்ஃப்” கண்ணடித்துப் பதிலளித்தான்.

மதிய சாப்பாடை முடித்து விட்டு அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் அவனது ப்ளாக்பெரி சிணுங்கியது.
“சார் இல்லி ஜெய்நகர் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமேஷா மத்தாடுத்தாயிதினி”

மதனின் கண்கள் பெரிதாயின. கைகள் விறைத்தன. செய்தி கேட்டு சுற்றி இருந்தவர்களும் அதிர்ந்தனர்.

“பை டார்லிங்” எனக் காலையில் முத்தமிட்டு வழியனுப்பியவளின் உடலைச் சுற்றி கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர் ரமேஷ், “நஞ்சு தாகொண்டிதானே” என்றவாறு அவளருகிலிருந்த கடிதத்தை அவனிடம் காண்பித்தார். முதல் முறை எழுதியிருந்த அதே வாசகங்களுடனும் அவளின் அழகிய கையொப்பத்துடனும். “பாவி கல்யாண நாளன்னிக்கா இப்படிப் பண்ணி வைக்கணும்” ஃப்ளாட்டில் பலரின் முணுமுணுப்பாக இருந்தது.

ஓங்கிக் குரலெடுத்து அழுத மதனை நண்பர்கள் தேற்ற முயற்சித்துத் தோற்றனர். மறுநாள் உறவினர் அனைவரும் வந்து சேர எலெக்ட்ரிக் க்ரிமேஷன் மூலம் பஸ்பமாகிப் போனாள் மது.

ஒரே மாதம். திட்டவட்டமாகத் தற்கொலை, அதுவும் சைக்கோத் தனமான தற்கொலை. இதற்கு யாரும் காரணமல்ல என அப்பெண்ணே கைப்பட எழுதிய கடிதம். அவளின் பெற்றோரே அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததாய் வாக்குமூலமளிக்க, மதுவின் கேஸ் மூடப்பட்டு ஃபைல் அலமாரிக்குப் போனது.

ஆனால் மதனால் தான் மதுவின் நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை. அவற்றில் பலவும் இனித்தன. கடைசியாய் ஒன்று மட்டும் அவன் மனதை ரம்பமாக அறுத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் கல்யாண நாளாச்சே என்று அவளை ஆச்சர்யப்படுத்த, ரகசியமாய் அவளுக்கு வாங்கி வந்திருந்த அந்த வைர நெக்லஸை அவளது பீரோவில் ஒளித்து வைக்கும்போதுதான் அங்கே ஏற்கனவே ஒளிந்திருந்த அந்த டைரி ஒரு பூனைக்குட்டியாய் வெளிவந்து விழுந்தது.. யதேச்சையாய் அதைப் புரட்டியவன் சில பக்கங்களில் அதிர்ந்து போனான். படித்தவனின் மனசெல்லாம் ரத்தம்.

அவளது கல்லூரிக் காதலன் யுவனைப் பற்றிய ரகசிய பரிமாற்றங்கள், சந்திப்புகள், திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்கிற திட்டமிட்ட நுணுக்கம்.... மதன் உடைந்தே போனான். என் மதுவா? ஆனால்... கூடவே யுவனுடான கலர் கலர் படங்கள் ‘ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ?’ என்று கேட்டு அவனைப் பார்த்து பல்லிளித்து நகைத்தன.

விடிந்தால் முதல் திருமண நாள். இப்படி ஒரு ஏமாற்றமா? மதன் முடிவு செய்து விட்டான்.

கையிலிருந்த வில்ஸ் சுடுகையில் தன்னிலைக்கு வந்தான். அவளின் நினைவுகளால் ஆக்கிரமித்திருந்த அந்த தனிமையான மாலையில் தன்னறையிலிருந்த அவளின் டைரியை இறுதியாய் ஒரு முறை பார்த்து, எரித்து ஃப்ளஷ் செய்தான். கரும் திப்பிகளாய்க் கரைந்தன யுவனுடனான மதுவின் தொடர்ந்த காதலும் மதனை ஏமாற்றி அவர்கள் சந்தித்ததன் அடையாளங்களும். வேர்ல்பூலிலிருந்து குளிர்ந்த நீர் எடுக்கப் போனவனுக்குக் கண்ணில் பட்டது கடைசியாய் அவளுக்கு மட்டும் கலந்து கொடுத்த ரோஸ்மில்க் எசன்ஸ். சலனமற்றிருந்த வீட்டில் இவன் காதுகளில் மட்டும் அவளின் முத்த சத்தம்.

Wednesday, January 5, 2011

முத்த மார்கழி



காகிதத்தில்
காதல் செதுக்கி
நீட்டினேன் கிறுக்கலாய்.
எனக்காகவா எழுதினாய் என்கிறாய்.
என் மொழியே நீயாகிவிட்ட பின்
வார்த்தைகள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும்...

****************************************************************************************************

முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை எப்போதும்.
அதிகாலை விழிப்பு
தேனீர் வெதுப்பு
ஈரக்கூந்தல் துவட்டல்
விரையும் அலுவல் போது
வீடடையும் அந்தி
கொட்டும் இரவுப் பனி
கூடிக்களையும் சாமம்
சாத்தியம் எதுவாயினும்
உன் வன்முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை
ஒரு போதும்

****************************************************************************************************

அசந்து உறங்கிக் கொண்டிருந்த
பின்னிரவில் அழைத்தாய்
நீளாத முன் தூறல் பேச்சு
ஒற்றைக் கன முத்தத்துடன்
துண்டித்தாய் தூரபேசியை.
நீ தூங்கிப் போனாய்.
நான் தான்-
இரவின் வளர்சிதை மாற்றத்திற்கு
விடியல் வரை சாட்சியாய்.

****************************************************************************************************

எந்தப் பூவெனத் தெரியவில்லை.
தெருவோரத்து மரத்திலிருந்து
வீதியெங்கும் வாசம் நிறைக்கிறது.
உயிருருக்கும்
மார்கழி வைகறைக் குளிரில்
மொட்டை மாடி பிறை சந்திரனுக்குத் துணையாய்
தனிமையை ரசிக்கிறேன்.
விழிமூடித் தலையுயர்த்துகிறேன்.
கூடவே-
உன் வெம்முத்தத்தை
நினைத்துக் கொள்கிறேன்.

****************************************************************************************************

எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.

****************************************************************************************************

மீண்டெழும் இடம் தான்
வெவ்வேறாய் இருக்கிறது
ஈர்க்கும் உன் விழிகளில்
அணைக்கும் உன் கரங்களில்
ஊண் உறைக்கும் உன் முத்தங்களில்
உயிர் வாங்கும் உன் ஸ்பரிசத்தில்.
விரும்பித் தொலைகிறேன்
ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்.


Wednesday, December 22, 2010

நாள்தோறும் நாடோடி


இருவாரங்களாக டெல்லிக் குளிரிலிருந்து தப்பித்திருந்தேன். வேலை காரணமாக மஹாராஷ்ட்ரா பயணம். புனேவுக்கும், மும்பைக்கும் அருகிலிருக்கும் வளர்ந்து வரும் தொழில் நகரமான கோலாப்பூருக்கு ட்ரிப். கோலாப்பூரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எப்போதும் மிதமான வெயில், மாலையானால் லேசான தூறல், அடிக்கடி பெருமழை, எப்போதாவது ஆலங்கட்டி மழை, எதற்கும் பதற்றமில்லாத நிதானமான மக்கள், சீராகி வரும் நகரின் உள்கட்டமைப்புகள், பெருகி வரும் தொழில், வேலை வாய்ப்புகள் என அருமையான நகரம். இந்நகரின் மஹாலக்ஷ்மி கோவில் மிகச் சிறப்பு. அத்துடன் இவ்வூரின் குடிசைத் தொழிலான தோல் செருப்புகள் தயாரித்தல் தற்போது அருகி வந்தாலும் கையால் தயாரிக்கப்படும் செருப்பிற்கென இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசாங்கம் பெருமுயற்சியெடுத்து வருகிறது. கோலாப்பூரின் செருப்புகளுக்கு உடல் வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையிருப்பதாய் சொல்கிறார்கள்.


கோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்துத் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)

*************************************************************************************************************


மும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்!” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)

*************************************************************************************************************

தமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...

*************************************************************************************************************

டெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)

*************************************************************************************************************

இரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.

நண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.

அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே!)

*************************************************************************************************************

கோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்
முன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”
நான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.
“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”
(ஙே!)

Tuesday, December 21, 2010

இனிது இனிது காதல் இனிது


இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.

காதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.

காதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.

அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.

புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.

பாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.

காதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.

பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.

புத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)
ஆசிரியர் - பாலகுமாரன்.
வெளியீடு - விசா பதிப்பகம்.
விலை - ரூ. 75 + ரூ. 68/-
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.

Tuesday, November 23, 2010

மிஸ்டர் ஆஃப் த மிஸஸ்


நம்ம மிஸ்டர்ஸோட குணங்களைப் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா.. அதுனாலதான் அடுத்த பகுதி. உங்ககிட்ட/உங்க மிஸ்டர் கிட்ட எல்லாத் தகுதிகளும் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க.

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...

=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.

=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...

=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

(மிஸ்டரின் அட்டூழியங்கள் தொடரும்)

Monday, November 15, 2010

ஒரு மாலை இளங்குளிர் நேரம்


ஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

தீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.

ஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)



*************************************************************************************************************

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.

மிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.

இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா நேரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)


*************************************************************************************************************

ஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ!)

*************************************************************************************************************

இன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி!?) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)

*************************************************************************************************************

எழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)

*************************************************************************************************************

பதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.

# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்ரேஸி சொஸைட்டி!

# ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.
“ங்கொய்யால உன் தப்புதான்டா”
அப்படிங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல
“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது.

நண்பேன்டா!

# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?

# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)

# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.

# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...

# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...

(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

தமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”
“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”
முதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்?” என்றேன் அவரிடம்.
பின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்
“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.
எல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(
(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.)

Friday, October 22, 2010

என் இனிய நட்புகளுக்கு..

ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.

இடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.

ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.

நண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.


Tuesday, October 12, 2010

மழை மரப் பறவைகள்

அன்றைய நாளின் அத்துணை இறுக்கத்தையும் நெகிழ்த்துவதாய் ஜன்னல் வழி பூமிக்கு நிழல் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது ஆகாயத்தின் துளிகள். மழை! மருதாணி கழுவிய உள்ளங்கையாய் பளிச்சென புதுசாக்கிக் கொண்டிருந்தது பெருங்குரலில்.

கூரையால் பாதுகாக்கப்பட்ட மாடித் தளத்திலிருந்து மழையைப் பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது. கீழே உற்றுப் பார்க்கும் தூரத்தில் செடியருகே ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு மரவட்டை. நீரைப் போலவே கரை புரளும் தாறுமாறான சிந்தனைகள். அலுமினியப் பாத்திரங்கள் வைத்துத் தொட்டி நிறைத்துத் தருவதாய் போலி சொற்களால் அனுமதி பெற்று, நீரூற்றாய்ப் பெருகி வரும் தற்காலிக மழையருவியில் ஆடிய ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஜோடி விடுமுறை நாட்களும் நினைவில் வந்து போயின. மழையை ரசித்துத் தொடர்ந்த உரையாடல்கள், பெரு மழை நாளில் தொடர்ந்தொலித்த வானொலி மழைப்பாடல்கள், குடையையும், ரெய்ன் கோட்டையும் வேண்டுமென்றே மறந்து வைத்து விடும் குறும்பு நாட்களென ஒவ்வொரு மழை நாளும் நினைவுகளில் ஆர்ப்பாட்டமானது.

பல வருடப் பின்னோக்கிய சிந்தனைகளிலிருந்து இருந்த நிமிடத்திற்கழைத்து வந்தது மழையின் காரணமாய்க் கேட்காமலே வந்த ப்ளாக் காஃபி. மழை ஒரு ரசனையெனில் கையில் புகையெழும்பும் காஃபிக் கோப்பை அதனினும் ரசனை. கண் மூடி மழை சத்தத்தை செவிகளுக்களித்து உதடுகளுடன் ஒண்டவிருக்கும் காஃபிக் கோப்பை அதற்கும் முன்னால் தன் வாசத்தை நாசிக்குள் இழுத்து செல்வதென நொடிப் பொழுது சுகம். காஃபிக் கோப்பையைக் காலி செய்த நேரம் மழை விட்டு சேய்த்தூறல் மிச்சமிருந்தது. தனியே விளையாடும் குழந்தை பார்ப்பவர்களையெல்லாம் விளையாட உடனழைப்பதைப் போல் என் மேலும் விழுந்தழைத்தது அத்தூறல்.

அதியுற்சாகமாக உடை மாற்றிக் கிளம்பினேன். தெரியா ஊரில் தொலைந்து விட்டால் திரும்பி வர கையில் கைபேசியும், பாக்கெட்டில் சில நூறுகளையும் திணித்துக் கொண்டேன். எங்கே போகிறேனெனத் தெரியாது. தெரிந்து போகும் பயணங்களை விட இலக்கில்லாப் பயணங்கள் சுவாரசியமெனக் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அனுபவித்து மகிழ ஆயத்தமாகிவிட்டேன். உடன் யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. நிலா வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் மாலை.

வழியெங்கும் சகதி. திரும்பிவிடலாமா? கருமேக முகடுகளைப் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்த வேளை, தெருவோரக் கல்லிலிருந்து எதிரேயிருந்த தண்ணீர்த் தேங்கலை நோக்கிக் குதித்தது தவளையொன்று. பறவையின் சிலும்பலிலிருந்து தெளித்த நீர் விழுந்து தலை தாழ்ந்தது அருகிலிருந்த செடியின் இலை. தெரிந்தவனைத்து ராகங்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன மழை ஈசல்கள். இவற்றின் துணையுடன் நடப்பது பரமசாத்தியமானதாக இருந்தது.

மணல் வழியெங்கும் மழை விட்டுச் சென்ற காகிதக் கப்பலுக்கான சிறு குளங்கள். எதிர் வரும் வாகனங்களில் பட்டுத் தெறிக்கும் தண்ணீர்த் துளிகளில் மின்கம்பங்களின் ஒளி பட்டு மிளிரும் தங்கத் துளிகள், புது முக மனிதர்கள், புரியாத பாஷை, திக்குக்கொன்றாய் பல இனங்களின் இரவுக் கூச்சலென பரவச உணர்வுகள் பூத்துச் சொரிந்திருந்த நேரம். எல்லாம் நல்லதாய் நடப்பதாகவே ஒரு தோணல்.

நடந்து நடந்து எங்கு சென்றேனெனத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கடை தெரிந்தது. காஃபி ஷாப்பாக இருக்கலாம். நெருங்கிப் பார்க்கையில் தான் தெரிந்தது பேஸ்ட்ரி ஷாப்பென. எதையோ யோசித்துக் கொண்டே “ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்?” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.

மறுபடி பிடித்துக் கொண்டது மழை. பெருமழை. அறைக்குப் போய்ச் சேரும் வழியை மறந்து விட்டேன். வெளியில் கடந்த ஆட்டோவை அழைத்து விலாசம் சொல்லி சென்றடைந்ததும் எவ்வளவெனக் கேட்க, மிகப் பரிதாபமாய் 12 ரூபாய் எனக் காட்டிய மீட்டர் பார்த்து “பந்த்ரா ருப்யா தீஜியே மேடம்” என்றார் ஆட்டோ ஓட்டுனர். அதிசயமாயிருந்தது. 1 கிமீக்கு பதினைந்து ரூபாய், அதுவும் கொட்டும் மழையில். தவிர அதைக் கேட்ட விதம் மிக பவ்யமாயிருந்தது.

ஒரு மணி நேரம் எனக்கே எனக்காய் விருப்பமாய் செலவழித்து அறை நோக்கி நடக்கையில் துடைத்து சுத்தமாக்கப்பட்ட விஸ்தார வெளியில் பறந்து கொண்டிருந்தது மனது. “பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால் உடலுக்குள் பொருத்தி பறந்து விடு” தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது.