கேலியான, மாறுதலான, வாழ்வின் அசடுகள் நிறைந்த, தைரியமான, தயக்கமான, கேனைத்தனமான இந்த பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது. என் பதின்ம வயது டைரிக் குறிப்புகளில் நிரம்பி வழிந்தவை நட்புகளும், நட்புகளின் காதல்களுமே. தவிர சில தேவதாஸ்களை உருவாக்கிய சாகசமும் உண்டு. ;)
பதின்ம வயதில் எனக்கு வந்த முதல் காதல் கடிதம் நான் ஏழாம் வகுப்பில் இருந்த போது. ஆனால் அது தவறுதலாக அம்மா கையில் போய்விட அம்மாவும், அப்பாவும் நன்றாகவே கவ்னித்தார்கள் அவனை. இது எனக்குத் தெரிந்தது பதின்ம வயதின் இறுதியில். அறிந்தபோது ரொம்பவே காமெடியாக இருந்தது. அதற்குப் பின் கொடுத்தவனைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றி கேட்காமலேயே விட்டு விட்டேன் “எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”
என் குழந்தைப் பிராயத்திலிருந்தே என் நல்ல நண்பன் என் மாமன் மகன். என்னை விட மூன்று வயது பெரியவன். அவனுக்கும் எனக்கும் இருந்த சினேகம் அழகானது. பதின்ம வயதில் என் எல்லா சேட்டைகளிலும், தவறுகளிலுமிருந்து என்னை அவன் தான் காத்தான். சேட்டைன்னா உங்கூட்டு சேட்டை இல்ல, என்கூட்டு சேட்டை இல்ல. உலக சேட்டை. அப்படித் தான் எங்கூட்ல சொல்லுவாங்க. எங்கம்மா, அப்பா ரெண்டு பேருமே எப்போவுமே தங்களுக்கு ஆண்மகனில்லை என வருந்தியதில்லை. நான் வருத்தப்பட விட்டதில்லை. :)
ஒரு முறை பள்ளி வந்து கொண்டிருந்த தோழியை மறித்து என் மீதான காதலை ஒருவன் சொல்லி அவளைத் தூது போக சொல்ல அவள் பயந்து போய் அழுது விட்டாள். மாலை வீட்டிற்குப் போய் அம்மாவை உடனழைத்துக் கொண்டு அந்தப் பையன்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவன் என்னிடம் அதிகம் பேசவும் அறைந்து விட்டேன். அம்மா ரொம்பவே பயந்து விட்டாள். அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய், என் அம்மா அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார். இதனால் மற்ற பசங்களுக்குப் பயமிருந்து அந்த நேரத்தில் ஒதுங்கி விட்டாலும், அதற்குப் பின் எங்கள் தெருவில் இரவு நேரங்களில் வந்து கத்துவது, மொட்டை மாடியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது கேலி செய்வது எனத் தொடர்ந்தனர். அப்போவும் அவர்களுடன் நான் வம்பிழுக்கப் போக, பயந்த அம்மா என் கஸினை அழைத்து விபரம் சொல்ல அவன் தான் தன் நண்பர்களுடன் சென்று பிரச்சனையைத் தீர்த்து வந்தான். இப்போது என் கஸின் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாது. ஒரு குடும்ப மனஸ்தாபத்தில் இரு வீட்டுக்கும் பேச்சு நின்று போனது. என் பதின்ம வயதின் மிகப் பெரிய இழப்பு அவன் நட்பு.
அடுத்ததாய் காதல் ரோமியோக்கள். காலை 6 மணிக்கு ஃபிஸிக்ஸ் டியூசன் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு மேத்ஸ் டியூசன் முடித்து வரும் வரை ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் இவர்களிடம் என்னால் காதலையன்றி காமெடியையே பார்க்க முடிந்தது. ஒருவழியாக எல்லாரும் தப்பித்து விட்டார்கள். யோகி மாட்டிக் கொண்டார். சரி, அந்த சோகக் கதை இப்போதெதற்கு...
என் பதின்மத்தில் கிடைத்த நட்புகளே என் நெஞ்சம் நிறைந்து, இப்போதும் தொடர்பவை. ஏப்ரல் மாதத்தில் படம் பார்த்து விட்டுத் தோழியைத் தேடி சென்று அழுத அனுபவமெல்லாம் உண்டு. :)
கேனைத் தனமாய் கவிதை முயற்சித்த பள்ளிக் கடைசி நாள் பிரிவு டைரிகள், கவிதைகளாய் நிரப்பித் தந்த தோழிகளின் காதல் கடிதங்கள், அழகாய்க் கடக்கும் பசங்களுக்கெல்லாம் கூட்டாய்ப் போட்ட மதிப்பெண்கள், க்ரூப் ஸ்டடியில் அடித்த லூட்டிகள், ஒன்றிரெண்டாய் அமைந்து விட்ட பள்ளி நாள் திரைப்படங்கள், பால்கோவா வாசமும், தீப்பெட்டி வாசமும், புழுதி வாசமும், நூலுக்கேற்றப்படும் சாய வாசனையும், மஞ்சள், குங்கும வாசனையும் கலந்து சுவாசிக்கக் கொடுத்தத் தெருக்கள், தோழிகளின் காதலுக்கு ஒப்புவித்த அறிவுரைகள், பதுங்கும் நேரங்களில் அமைந்து விட்ட ஆசிரியரின் கேள்விகள், அதற்காய்த் தலை குனிந்து நிற்கும் நேரத்திலும் விலகாத புன்னகைகள், நேராய் இருந்தும் சரி செய்யப்பட்ட தாவணித் தலைப்புகள், முழுதாய்த் தெரியாமல் முயற்சித்து பால் குக்கர் போல் முடிந்து விட்ட விசிலுடனான படங்கள், நட்பின் காதலுக்காய் கட்டிய கைகளுடன் உதடுகளும் ஒட்டிப் போன என்கொயரிகள், சைக்கிள் சக்கரம் தேய அளக்கப்பட்ட ஊரின் புழுதிச் சாலைகள், ஆசிரியரின் மீதான பயத்துடனே வரிசையில் போய் வந்த சுற்றுலாத் தளங்கள், வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள், கிறிஸுதுமஸுக்கும் பொங்கலுக்கும் காத்திருந்து அனுபவித்த விடுமுறை தினங்கள், கணினியை முதன் முதலாய்த் தொட்டுப் பார்த்து சிலிர்த்த விரல்கள், இம்போசிஷன் நாட்களில் வரும் பொய்க் காய்ச்சல்கள், ஒரு ஊசிக்காக டாக்டரை சுற்றிலும் ஓட விட்ட மருத்துவமனை வராண்டாக்கள், ஒரு பக்க ஜடையை இருபக்க ஜடையாய் மாற்றி இருபக்கப் பூவை ஒரு பக்கப் பூவாய் மாற்றிய அலங்காரங்கள் என கலவையானது பதின்ம நினைவுகள்.
இதை நினைக்கையில் மீண்டும் அந்நாட்களுக்குத் திரும்ப மனது கெஞ்சுகிறது. ஆனால் அவ்வயதில் வாசித்த கதையில் வரும் டைம் மெஷின் என்னிடம் இல்லையே :(
இதைத் தொடர அதே ஊரின் தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவி சிவாவையும், குறும்பு நண்பர் ரகுவையும் அழைக்கிறேன்.