Showing posts with label தொ(ல்)லைக்காட்சி. Show all posts
Showing posts with label தொ(ல்)லைக்காட்சி. Show all posts

Wednesday, June 23, 2010

யாருக்கு விருது தரணும்...

நேற்று ஒவ்வொரு சேனலாக மாற்றி வரும் போது தமிழ்த் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பார்வை பட்டது. எனக்கென்னவோ எல்லாத் தொடர்களும் பல வகைகளில் ஒன்றுபட்டு இருப்பதாகவே தெரிகிறது. எனக்குத் தெரியும் சில ஒற்றுமைகள். உங்களுக்கு எதுவும் கூடுதலாகத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. கதை ஒரு பெண்ணைச் சுத்தியே நகரும். அந்தப் பெண்ணின் வாழ்வில் பல கஷ்டங்களும், பல அடிகளும் வந்து போகும். எப்போவும் அவரைச் சுற்றியிருக்குறவங்க அவங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டிட்டே இருப்பாங்க.

2. அவசியம் இன்னொரு பெண் தான் வில்லியாவும் இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் புள்ளத் தனமா ஏதாச்சும் வாய்க்கால் சண்டை இருக்கும். அதுக்காக சீரியல்ல 10 வருஷம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் கடைசி எபிசோட்ல கடைசி 10 நிமிஷத்துல ஹீரோயினோட வசனம் கேட்டுத் தப்பை உணர்ந்து திருந்திடுவாங்க.

3. கதாநாயகி சூப்பரா சேலைகட்டி, தோள்ல ஒரு ஹேண்ட் பேக் மாட்டிக்கிட்டு, மேக்கப் குறைவா போட்டுகிட்டு, எப்போவுமே அழுது வீங்கின கண்களோடவும் துணிச்சலான முகத்தோடவும் வலம் வருவாங்க. கூடவே நண்பர்ன்னு ஒருத்தர் சோக முகத்துடன் வருவார்.

4. சின்னத்திரை கதாநாயகி ஆகுறதுக்கான தகுதி என்னன்னா, கொஞ்சம் திரைப்படங்கள்ல ஹீரோயினா நடிச்சிட்டு அப்புறம் அக்கா, அண்ணி வாய்ப்புகள் வந்தும் “சினிமால நான் எல்லாப் பக்கங்களையும் பார்த்திட்டேன். இனி வளரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பறேன்”னு சும்மாச்சுக்கும் பேட்டி குடுத்திட்டாப் போதும்.

5. சீரியல்ல நடிச்சிட்டிருக்குற பொண்ணோ, பையனோ ஏதாச்சும் உடம்பு முடியாமப் போனாலோ, சொந்த வேலைகள் காரணமா நடிப்பைத் தற்காலிகமா துறக்க வேண்டி வந்தாலோ, அவங்களோட கதாபாத்திரங்கள் கொல்லப்படணும். இதையும் கதைக்கு நடுவுல திடீர்ன்னு கொண்டு வந்து புகுத்தி பார்க்குறவங்களை குழப்படிக்குறதுல கில்லாடிங்க சின்னத்திரை இயக்குனர்கள்.

6. கதாநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு இவங்களைத் தவிர வேறொரு மனைவியும் இருக்கணும் அல்லது அவர் கெட்டவரா இருக்கணும். இப்படியெல்லாம் இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு அவங்க அவருக்கு சேவை பண்ணுவாங்க.

7. கண்டிப்பா ஹாஸ்பிட்டல் சீன் இல்லாம எந்த ஒரு சீரியலும் எடுத்ததா சரித்திரமே இல்ல. மாசத்துக்கு ஒரு தடவை யாராச்சும் ஏதாச்சும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுவாங்க. அதுவும் சாகுற நிலைமைல அட்மிட் ஆனா அது செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல தான் வரும்.

8. குடும்பத்துல இருக்குற யாராச்சும் பேசாம சண்டை போட்டு இருந்தாங்கன்னா, அவங்க கண்டிப்பா ஏதாச்சும் கோவில்ல சந்திச்சுக்குவாங்க. அப்போ பேசவா, வேண்டாமான்னு அவங்க முகத்துல எல்லா ரசமும் சொட்டும்.

9. ஹீரோயினோட அப்பா ரொம்ப நல்லவராவும், பெரும்பாலும் ஏழையாவும் இருப்பார். ஆனா அவரோட சம்பந்தி வீட்டுக்கு மட்டும் அவர் எப்போவுமே ரொம்பத் தப்பானவரா தெரிவார்.

10. வக்கீல், போலிஸ், டாக்டர், அரசியல்வாதி, ரௌடி, காமன் மேன் இப்படி ஹீரோயினுக்கு சம்பந்தமில்லாத, அந்த அம்மணியை முன்னப் பின்னப் பார்த்திருக்காதவங்க கூட அவங்களுக்கு நல்லது செய்யவே நினைப்பாங்க. ஏன்னா அவங்க முகத்துல அப்படி ஒரு நல்லவ அடையாளம் தெரியும். ஆனா எதிரிக்கு மட்டும் அது புரியவே புரியாது.

இப்போ சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதெல்லாம் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா உண்மையில் அதைக் கொடுக்க வேண்டியது பார்வையாளர்களுக்குத் தான். ஏன்னா எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு கதையிலேயும் இருக்குற கதாபாத்திரங்கள், சம்பவங்கள் இதையெல்லாம் நினைவு வெச்சுக்கறதோட இல்லாம, அவங்களுக்காக இவங்க அழுறதும், அவங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, தன் வீட்ல சமைக்காம இருக்குறதும்ன்னு இவங்க செய்ற தியாகங்கள் அதிகம். அதுனால இனி பார்வையாளர் விருதுன்னு ஒண்ணு வந்தே ஆகணும். நீங்க என்ன சொல்றீங்க...

Monday, October 12, 2009

சின்ன(புள்ளத்தனமான) திரை


இனிய வார இறுதியுடன் அதே இனிமையாய்த் தொடர்கிறது இந்த வாரமும்.

இப்பதிவு தொலைக் காட்சி ஸ்பெஷல். நான் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் குறைவெனினும் இந்த வாரம் போதுமான அளவு பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.

நாற்பதாவது முறையாக "JAB WE MET" படம் பார்க்க அருளிய 'Colors' க்கு நன்றி. துடுப்பான கரீனா கபூரின் நடிப்பும், கொல்லும் ஷாகித் கபூரின் smartness உம் படத்தின் பிளஸ். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சிகள், பாடல்கள். இதன் தமிழ் ரீமேக்கான 'கண்டேன் காதலை' ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். கண்டிப்பாக ஷாகித் கபூரின் அழகுக்கு பரத் இணையாக முடியாது. தமனா வாயசைப்புகளில் அலட்டாமல் செய்தால் கரீனா கபூர் அளவுக்கு இல்லையெனினும் ஓரளவு தேறுவார் என நினைக்கிறேன். (சொதப்பிடாதீங்க மக்கா.)

****************************************************************************************************

அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் பாட்டுப் பாடவா நிகழ்ச்சி வித்தியாசமாக இருப்பதால் பார்க்கும் ஆவலைத் தூண்டினாலும், தொகுப்பாளரின் உடையலங்காரமும், மூக்கால் பேசும் பேச்சும் நிகழ்ச்சியை மாற்ற ரிமோட்டை கையில் எடுக்க வைத்து விடுகின்றன. (போடுற உடைய முழுசா போடுங்க அக்கா)

****************************************************************************************************

'Sony' யில் நேற்றிரவு "RAB NE BANA DI JODI" பார்த்தோம். ஷாருக் மீசையுடன் அழகாக ஆடி வந்த டிரைலர் பார்த்தே பார்க்க நினைத்த படம். ஆனால், சில பல காரணங்களால் பார்க்க முடியவில்லை. நேற்றிரவு படம் முழுக்க பார்த்த பின் தான் தூக்கம் வந்தது. நல்ல படம் என்பதை விட நல்ல நடிப்பு. ஷாருக்கின் ஒவ்வொரு படமும் பார்த்து நான் வியக்கும் அவர் நடிப்பு, இதிலும் துளியும் குறையவில்லை. என்ன பாடி லேங்குவேஜ், என்ன முக பாவம். ச்சே... மனுஷனுக்கு வயசானாலும் மார்கெட் போகாததுக்கு இதை விட என்ன காரணம் வேணும். (IPL போனா என்ன ஷாருக். உங்களுக்கு எப்போவும் பாலிவுட் இருக்கு)

****************************************************************************************************

விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு "பெண்களுக்கு தாலி அவசியமா இல்லையா". என் கேள்வி 'இந்தத் தலைப்பு அவசியமா....' மாறி வரும் சமுதாய விஷயங்களில் இது தான் செய்ய வேண்டும், இது செய்யக் கூடாது, இது சரி, இது தவறு என எதுவும் இல்லை. ஒருவருக்கு சரி எனத் தெரியும் விஷயங்கள் மற்றவருக்கு தொந்தரவில்லாத பட்சத்தில் இருக்கும் போது அதில் அடுத்தவர் அநாவசியமாகத் தலையிடுவது அநாகரீகம். அதனால் இதை தவறு என ஒரு கூட்டம் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லை. நமக்கும் தான். (செய்றதுக்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு)

****************************************************************************************************

'Big Boss - 3' (Colors) மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய ஷோ இப்போது தொய்ந்து செல்கிறது. அழுகையுடன் வெளியேறிய ஜெயா சாவந்த், ஆணா பெண்ணா எனக் குழம்ப வைக்கும் ரோஹித், ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு சட்டையைக் கழட்டி கொன்று விடுவேன் என மிரட்டும் பிந்து, காதல் என்ற பெயரில் கிளேடியாவை பாடாய்ப் படுத்தும் கமால் கான் என இம்சைகள் தொடர்கின்றன. இவையெல்லாம் ஸ்க்ரிப்ட் எழுதி நடப்பது போலவே உள்ளன. இந்த வாரத்திலிருந்து அதைப் பார்த்து நேரத்தை விரயமாக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். (உபரித் தகவல் - ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறாராம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அமிதாப் பச்சன்)

****************************************************************************************************

இப்போதெல்லாம் சின்னத் திரை நடிகர் நடிகைகளை வைத்து நடக்கும் ஆடல் நிகழ்ச்சிகளும், ரியாலிட்டி ஷோக்கள் எனப்படும் அழுகாணி ஷோக்களும் எல்லா டிவிகளிலும் வருவது மிகுந்த அலுப்பைத் தருகிறது. இதில் 'ஐயோ போதுமடா சாமி' என அலற வைக்கும் நிகழ்ச்சிகளின் வரிசையில் "Boys Vs Girls", "மானாட மயிலாட", "Jodi No.1", அசத்தப் போவது யாரு" இன்னும்... முன்னாடி குழந்தைகள் மாறு வேடத்தில் வரும் நிகழ்ச்சி (பேர் நினைவில்லை), பெப்சி உங்கள் சாய்ஸ், Quiz Programs எல்லாம் எங்கப்பா... (தயவு செய்து கொஞ்சம் மாத்தி யோசிங்க நிகழ்ச்சி அமைப்பாளர்களே.)