Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Tuesday, June 22, 2010

டெல்லி டு கோலாப்பூர் - 2

ஏதாவது ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சா அது ஏன் பாதிலேயே விட்டுப் போய்டுது... சரி, மறுபடியும் ஞாபகம் வந்த இந்தத் தொடரை சீக்கிரம் எழுதித் தள்ளிடலாம்.

முதல் பகுதி இங்கே.

கடைசியா எங்கே விட்டோம், ஆங்... கிங் ஃபிஷர்ல ஏறி ஏற்கனவே உக்காந்திருந்த ரெண்டு அங்கிளையும் எழுப்பி ஜன்னலோர சீட்ல துண்டைப் போட்டு உக்காந்தாச்சு. முதல்ல கிங் ஃபிஷர் அக்கா வந்து ஹெட் செட் குடுத்துட்டுப் போச்சு. ஒரு 3 வருஷம் முன்னாடி அவங்க குடுத்ததுக்கும், இப்போ குடுக்குறதுக்கும் தரத்துல உள்ள வித்தியாசம் ரொம்ப மோசம். தவிர, முன்னாடி இருந்த சர்வீஸ், ஹாஸ்பிடாலிட்டி இது எதுவுமே இப்போ இல்லாத மாதிரி இருக்கு.

அடுத்தது சாப்பிட சாம்பார் இட்லி குடுத்தாங்க. நான்-வெஜ் ஆப்ஷனே இல்ல. பாவம் நான்-வெஜ் விரும்பிகள். அதையும் குடுத்த விதம் நம்ம ரெய்ல்வேஸ் மாதிரியே இருந்தது. யூஸ் அண்ட் த்ரோ வகை டப்பாக்களில். ஒரு ஸ்வீட் டிஷ் இல்ல, கூல் ட்ரிங்க்ஸ் இல்ல. அட, சாக்லேட் கூட குடுக்கலைங்க. :( முன்னாடி அவங்க சாப்பாடு லீ மெரிடியன்ல (Le Meridien) இருந்து வரும். இப்போ அவங்களே வெச்சிருக்குற ஹோட்டல்ஸ்ல இருந்து வருது போல. ஆனாலும் டிக்கெட் விலை மட்டும் குறைக்கல. அதே மாதிரி ரொம்ப நல்லா இருந்த இன் ஃப்ளைட் மேகசின் (In Flight Magazine) போய் இப்போ சினிமா க்ளிட்ஸ் புத்தகம் வெச்சிருக்காங்க. அதுல இந்த பாலிவுட் கிசுகிசு தவிர வேறொன்னுமில்லை. “ச்சே”ன்னு அலுப்பாகி, டி.வியும் பார்க்கப் பிடிக்காம தூங்கிட்டேன். ஒரு வழியா புனே வந்தாச்சு. லேண்டிங்ல அநியாய ஜெர்க். காது வலியோட புனேல லேண்ட் ஆகி கார்ல ஏறி உக்காந்தாச்சு. அடுத்து 5 மணி நேர சாலைப் பயணம் கோலாப்பூருக்கு, அதுவும் இண்டிகால.

புனே மட்டுமல்ல மஹாராஷ்டிராவுக்கு என் முதல் பயணம் இது. நல்லா பராக்கு பார்த்துக்கிட்டே போனேன். புனே ஏர்போர்ட் ரொம்பச் சின்னது. நம்ம கோயம்புத்தூர் ஏர்போர்ட் மாதிரி தான் இருக்கு. அதுக்குக் காரணம் பக்கத்துலேயே மும்பை ஏர்போர்ட் இருக்கறதுதானாம். பெரும்பாலும் எல்லாரும் மும்பைல இருந்து பயணிக்கிறாங்க. புனேவின் ரோடுகள் நல்லாவே இருந்தாலும் சாலையில் திணறடிக்கும் போக்குவரத்து நெரிசல். புனேவை விட்டு வெளியேறவே 1 மணி நேரமாச்சு. அப்புறம் பயணித்த வழியெல்லாம் அத்தனை அழகு.

ஒரு மலை வாசஸ்தலம் போவது போன்ற சந்தோஷம். நெளிவான, ஏற்றமான சாலைகள், சாலையின் இருபுறமும் மலையும், மரங்களும். பயணக் களைப்பைத் தூங்கித் தீர்க்க விடாத அழகு. எல்லா ஊர்களிலேயும் மாறாத ஒரு விஷயம், பின் சீட்டில் முகத்தை துப்பட்டாவால் மறைத்து இருவர் ஒருவராய் பைக்கில் பயணிக்கும் காதல் ஜோடிகள். நிச்சயம் புனே காதலர்கள் சுற்றிலும் அழகான இடங்கள் வாய்க்கப் பெற்றவர்கள்.

வாகன ஓட்டுனர் என்னைப் பஞ்சாபி என நினைத்து அங்குள்ள விஷயங்களை தில்லி மற்றும் பஞ்சாபிலிருக்கும் விஷயங்களோடு ஒப்பிட்டுக் கூறிக் கொண்டே வந்தார். அருகிலிருக்கும் இடங்கள், அந்த ஊரின் சிறப்புகள், அங்கு ஸ்பெஷலான உணவு வகைகள், அங்கிருந்த மன்னர்கள் என அடுத்த ஒரு மணி நேரப் பயணம் மிகவும் உபயோகமாய், அந்த இடத்தைப் பற்றி அறியும் வகையில் இருந்தது. பயணங்களில் பேசாமல் அமைதியாய் ரசிப்பது எனக்கு மிகப் பிடித்தம். ஆனாலும் தெரியாத ஊரில் அந்த ஊரின் சிறப்புகளை அங்கிருப்பவரே சொல்லக் கேட்டுப் பயணிப்பது புது அனுபவமாக நன்றாகவே இருந்தது.

ஏற்கனவே அங்கு பயணித்து வந்த என் மேலாளர் என்னிடம் கிட்டத்தட்ட 6 முறை சொல்லியனுப்பியிருந்தார். என்னவா... அங்கிருக்கும் “ஜோஷி வடைவாலா” பற்றி தான். அது நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு மஹாராஷ்ட்ரியன் தாபா. வெறும் 14 ரூபாய்க்கு 1 ப்ளேட் வடாபாவ். யம்மி டேஸ்ட்டில். கூடவே டக்கரான டீ. வயிறு நிறைய அங்கிருந்து கிளம்பினோம். 20 ரூபாய்க்குள் மதிய உணவை சுவையாக முடித்து விட்டது மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. தில்லியில் மிகக் குறைந்த மதிய உணவு 40 ரூபாய்க்குக் கிடைக்கும்.

இதற்கு மேல் இந்த ஓட்டுனர் பேசினால் கேட்கும் மூடில் இல்லை நான். எரிகின்ற வெயிலில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு, வயிறு நிறைந்ததை அறிவிக்கும் வண்ணம் விழிகள் மூடின. 1 மணி நேரம் நல்ல தூக்கம். மறுபடியும் அழகான சாலைகள். இப்படியாக 5 மணி நேரப் பயணம் முடிந்து மாலை 4 மணிக்கு கோலாப்பூர் கெஸ்ட் ஹவுஸ் அடைந்தாயிற்று. காரில் தொடங்கிய தூக்கத்தைத் தொடர்ந்து விட்டு வருகிறேன். அடுத்த பதிவு கோலாப்பூர் ஸ்பெஷல்.

Wednesday, May 5, 2010

டெல்லி டு கோலாப்பூர் - 1 - டெல்லி விமான நிலையம்


பதினைந்து நாட்கள் வீட்டிலிருந்து விடுதலை. கோலாப்பூருக்கு வேலை விஷயமாகப் பயணம். இந்தப் பயணக் கட்டுரையை வித்தியாசமா வீட்டிலிருந்து கிளம்பினதுல இருந்து ஆரம்பிக்கலாம்.

காலைல ஒன்பதரைக்கு ஃப்ளைட். எட்டரைக்கு ஏர்போர்ட்ல இருந்தாப் போதும். ரிலாக்ஸ்டா ஆறரைக்கு வீட்ல இருந்து கிளம்பி ஏழரைக்கெல்லாம் ஏர்போர்ட் போயாச்சு. டெல்லி ஏர்போர்ட் எவ்ளோ மாறிடுச்சு. மாசத்துக்கு குறைஞ்சது நாலு முறையாச்சும் அங்கே போனாலும் எப்போவும் சரியான நேரத்துக்குப் போறதால அங்கே இருக்குற விஷயங்களை சரியா பார்க்கவும், அதைப் பத்தி சிந்திக்கவும் முடியறதில்ல. இந்த முறை நல்லா நேரம் கிடைச்சது.

2-3 வருஷத்துக்கு முன்னாடி காலை ஃப்ளைட்னாலே வேண்டாம்னு கேன்சல் பண்ணி மதிய நேரமா பயணிப்பேன். காரணம் என்னன்னா காலை 5 மணியிலேருந்து 10 மணி வரைக்கும் டெல்லி சப்ஜி மண்டியை விட ஏர்போர்ட்ல தான் கரைச்சல் அதிகமா இருக்கும். அந்த கூட்டத்தைப் பார்த்தா நம்மூர் சிட்டி பஸ்ல துண்டு போட்டு இடம் போட்டுட்டு அந்த இடத்துல யாரும் உக்கார்ந்திடாம இருக்க முண்டியடிச்சிக்கிட்டு ஏறுர மக்கள் நினைவு வரும். எப்படியோ சில பல காலை நேர அனுபவங்கள் கொடுமையா இருந்திருக்கு. இதுக்கு நடுவுல பெங்களூர்ல புது ஏர்போர்ட் ரெடியானப்போ, அஹமதாபாத்தோட கூட்டமில்லாத ஏர்போர்ட் பார்க்குறப்பவெல்லாம் டெல்லியும் இப்படி இருக்கக் கூடாதான்னு தோணும். ஆனா நிஜமாவே இப்போ சூப்பரா இருக்கு.

காமன்வெல்த் கேம்ஸுகளுக்கு ஒரு நன்றியைக் கட்டாயம் சொல்லியே ஆகணும். அது டெல்லில நடக்குறதால டெல்லில எவ்வளவு மாற்றங்கள்... விமான நிலையம் போகற வழில டக்கரா ஃப்ளை ஓவர் கட்டிட்டாங்க. நல்ல ஸ்பேஸ் விமான நிலையத்துக்கு முன்னாடி. புதுப்பிக்கப்பட்ட டெர்மினல்கள், கூட்டமே தெரியாத அளவுக்கு விரிவாக்கப்பட்ட கவுண்ட்டர்கள், காத்திருக்க விசாலமான இடம், ஏகப்பட்ட கடைகள்ன்னு ரொம்ப நல்லாப் பண்ணிட்டாங்க. ஆனாலும் டெல்லி ஏர்போர்ட்டில் மாறாத ஒரே விஷயம் ட்ராஃபிக். எப்போவுமே லேண்டிங் 10 நிமிஷமாவது டிலே ஆகுறதுண்டு. காரணம் 5 நிமிஷத்துக்கு ஒரு ஃப்ளைட் லேண்டாகுற பிஸியான ஏர்போர்ட் இது.


அடுத்ததா ஏர்போர்ட் போறதுக்கான சாலைகள். புதுசா கட்டின ஃபளை ஓவரால ட்ராஃபிக் ஜாம் நல்லாவே குறைஞ்சுடுச்சு.


சரி, நாம மறுபடியும் ஏர்போர்ட்டுக்குள்ள வரலாம். உள்ளே சாப்பாட்டுக் கடையும், புத்தகக் கடையும் தவிர வேறெந்த கடையிலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடியல. அங்கங்கே இருக்குற ட்ரெஸ் கடைலேயும், கிஃப்ட் கடைகளிலேயும் ஒரு ரெண்டு பேர் சும்மா சுத்திப் பார்த்திட்டு இருந்தாங்க. இந்தக் கடைகளில் வியாபரமே இல்லையே பின்ன ஏன் இங்கே கடை வெக்குறாங்கன்னு யோசிச்சப்போ தான் தெரிஞ்சது “இதுவும் ஒரு வியாபார விளம்பரம்”ன்னு. இங்கே யாரும் வாங்கலைன்னாலும் இந்தக் கடைகளின் ப்ராண்டுகள் வெளியூர் / வெளிநாட்டுப் பயணிகளின் மனதில் பதிஞ்சிடுது. இங்கே வாங்க முடிஞ்சவங்க இங்கேயும், வாங்க முடியாதவங்க இதே கடைகளில் வெளியேயும் வாங்கிக்கலாம். ப்ராண்ட் நேமை எப்படியோ நம்ம மண்டைக்குள்ள கொண்டு வந்துட்டாங்க. ம், ஓகே.

நம்மூர் விமான நிலையங்களில் எனக்குப் பிடிச்ச கடைகள் புத்தகக் கடைகள். எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கும். ரொம்ப நாள் கழிச்சு யாரையாவது பார்க்கப் போறவங்களுக்கு அவங்களுக்கு ஏத்த மாதிரியான புத்தகங்கள் வாங்கிட்டுப் போக வசதியா இருக்கு. சின்னக் குழந்தைகளோட ட்ராயிங், க்விஸ் புக்லேயிருந்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், வீட்டுல இருக்குற அம்மணிகளுக்கு உபயோகமாகுற புத்தகங்கள், பிஸினஸ், மேனேஜ்மெண்ட் புத்தகங்கள், அனைத்து வகை நாவல்கள், பாட்டி, தாத்தா வாசிக்க ஆன்மீகம், மருத்துவம், கதைப் புத்தகங்கள்ன்னு எல்லாமே இருக்கு. ஆனா எல்லாமே இந்திய மொழிகள் எதுலேயுமே இல்லாம ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஏன்னா நம் தாய்த் திரு நாடு “இந்தியா”.

அடுத்தது சாப்பாட்டுக் கடைகள். டெல்லி முழுக்கவே சாப்பாட்டுக் கடைகள் விலை அதிகம்தான்னாலும் இங்கே இன்னும் அதிகம். ரெண்டு ப்ரட்டுக்குள்ள அழுகிப் போன காய்கறிகளை ஒளிச்சு வெச்சிட்டு 200 ரூபாய் வாங்கிடுறாங்க. நம்மூர்ல நல்லா ஸ்டீல் க்ளாஸை வெந்நீர்ல கழுவி ப்ரூ காபி போட்டு நுரை பொங்க ஆத்திக் கூடவே டபராவும் குடுத்து 5 ரூபாய்க்குக் குடிச்ச காஃபியோட சுவையும், மணமும் இங்கே மெஷின்ல இருந்து எடுத்து பேப்பர் டம்ளர்ல குடுக்குற 100 ரூபாய்க் கேப்பசினோல இல்ல. ஆனாலும் வேற வழியில்லாம அதைத் தானே வாங்கிக் குடிக்க வேண்டியிருக்கு. இங்கே விட்டுட்டா அடுத்து ஃப்ளைட்ல அக்கா வந்து வெந்நீர், பால் பவுடர், காஃபி பவுடர், சீனியெல்லாம் குடுத்து நம்மளையே காஃபி கலந்து குடிக்க சொல்லும். அந்த நேரத்துல தான் ஃப்ளைட் ஜெர்க் ஆகி காஃபி நம்ம மேலயும், நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்குற அங்கிள் மேலேயும் கொட்டும். தூங்கிட்டிருக்குறவர் எழுந்து முறைக்கும் போது நாம வழக்கம் போல அசடா சிரிக்க வேண்டியிருக்கும். இதை விட பெட்டர் இங்கன 100 ரூபாய்க்குக் காஃபி குடிக்குறது.

செக்கிங் முடிச்சு உள்ளே போனதும் நேரா புத்தகக் கடைக்குள்ள போய் என் ரெகுலர் புத்தகமான இண்டீரியர் மேகஸின் வாங்கிட்டு, அப்படியே ஒரு கேப்பசினோவையும் கையில் ஏந்திக்கிட்டு வந்து உக்காந்தேன். காதுல வைரமுத்து வரிகளுக்கு ரஹ்மான் தாலாட்டு, கைல இண்டீரியர் மேகஸின், குளுகுளு ஏசி ஹால், இதமா தொண்டை நனைக்குற காஃபி.... இப்படியே 24*7 இருக்க சொன்னாலும் இருப்பேன் நான். ஒண்ணரை மணி நேரம் சட்டுன்னு போயிடுச்சு.

ஒன்பது மணிக்கு ஃப்ளைட்டுக்குப் போக கேட் நோக்கிப் போனா எவ்ளோ பெரிய க்யூ. ரீசஷன் முடிஞ்சதுன்னு தெரிஞ்சது. க்யூவெல்லாம் குறைஞ்சதும் அங்கே இருக்குற பஸ்ல (அட, கூகுள் பஸ் இல்லைங்க) போய், ஏர்க்ராஃப்ட்டுக்குள்ளேயும் போயாச்சு. ஐ.பி.எல்.ல விஜய் மால்யா எவ்ளோ லாஸாகிருக்காருங்குறது கிங் ஃபிஷர் சர்வீஸ்லேயே தெரிஞ்சது. அதை அடுத்த பதிவில் தொடர்றேன். இப்போதைக்கு டாட்டா சொல்லுங்க. ஃப்ளைட் கிளம்பப் போகுது.

Sunday, August 23, 2009

அழகான பயணம்



ஒரு மாதத்திற்கு டெல்லியின் வதைக்கும் வெயிலிலிருந்து தப்பித்த விதமாக வெளியூர் பயணம். அதுவும் குளுகுளு கோவைக்கு. குஷியை சொல்லவும் வேண்டுமா..... பதினைந்து நாட்களுக்கு கோவையில் அலுவல் வேலை. அது போக இருபது நாட்கள் விடுமுறை எடுத்து நன்றாக சுற்றி விட்டு வந்தேன். பாவம் யோகி. தனியாக சமைத்து சாப்பிட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்.

டெல்லியிலிருந்து கோவையில் இறங்கிய அந்த நிமிடம் சொர்க்கமாக தெரிந்தது. பதினைந்து நாட்கள் அவினாஷி ரோடிலுள்ள நீல்கிரிசில் ஸ்டே. அங்கு சாப்பாடு இவ்வளவு மோசம் என கோவையிலிருந்த வரை எனக்குத் தெரியாது. எப்படியோ நண்பர்களின் உதவியால் அங்கிருந்து தப்பித்து நல்ல கோவை மெஸ்களில் சமாளித்தேன். கோவை போய் ரெசிடென்சி போகாமல் வந்தால் பாவம் என்பதால் அங்கு ஒரு டின்னர். எண்ணங்கள் ஒத்துப் போகும் ஒரு நல்ல தோழியுடன் மயக்கும் கோவையிரவில் ரெசிடென்சியில் அமர்ந்து அந்த உணவுடன் நல்ல விஷயங்களையும் அசை போடுவதென்பது எத்தனை சுகம்.

அடுத்து இரண்டு நாட்கள் திருப்பூரில். திருப்பூர் எதிர்பார்த்ததை விட இம்முறை நன்றாகவே இருந்தது. கொஞ்சமும் எதிர்பாராத நண்பர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. என்ன, அலுவல் வேலை தான் கொஞ்சம் அதிகம், வழக்கம் போல். ஆனாலும், சமாளிச்சுட்டோம்ல. பதிவெழுத தான் நேரம் கிடைக்கவில்லை. (தப்பித்ததற்காக நீங்கள் மகிழ வேண்டாம். வந்துட்டோம்ல.)

திருப்பூரிலிருந்து மறுபடியும் நான்கு நாட்கள் கோவையில் தோழி வீட்டில். பள்ளிகாலத்து கதைகளில் ஆரம்பித்து, சைட் அடிச்ச நாட்கள், தோழிகளின் காதல் கதை நிலவரங்கள், இப்போதைய அவசர அன்றாட வாழ்க்கை, தினசரி சமையல், புதிதாக வந்த படங்கள், புகுந்த வீட்டுப் பெருமைகள், பெயிண்டிங், கணவரின் வேலை, குழந்தையின் பள்ளிக்கதைகள், நடக்க போகும் அரசியல் அக்கிரமங்கள், குளோபல் வார்மிங் என எல்லாம் பேசுவது எவ்வளவு சுவாரசியம். அழகான நாட்கள். "வசீகரா" படத்திற்குப் பின் நானும் அவளும் சேர்ந்து "Love Aaj Kal" போனோம். அழகான படத்தை கருத்து ஒத்துப் போகும் சகியுடன் பார்ப்பது அலாதி இன்பம்.




கோவையின் மற்றொரு வசதியாய் நான் நினைப்பது FM. நல்ல பாடல்கள், அழகான கொலை செய்யப்படாத தமிழ் என இசைச் சாரல். தினமும் நான் இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தும் அந்த அலுப்பைத் தராதவை பாடல்கள். மழை தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் மனதைக் கொள்ளை கொண்ட மழைப் பாடல்கள் மனதில் நின்றவை. விளம்பரங்கள் அதிகமாக இருந்தது மட்டுமே சிறு குறையாக இருந்தாலும், இரவு நேரங்களில் அதுவும் குறைவு.

பின் அங்கிருந்து ஒரு வாரம் அம்மா வீட்டில். எது எப்படியிருந்தாலும் அம்மா வீடு தனி சுகம் தான். என் முதல் தோழி அம்மாவிடமும் எல்லா கதைகளும் பேசி போரடிச்சாச்சு. "நாடோடிகள்" படத்தை அம்மாவுடனும், தங்கையுடனும் பார்க்க நினைத்து முடியாமல் போனது சின்ன வருத்தம். எங்கள் ஊர் வரை போய் எங்கள் ஊர்ப் பதிவரைப் பார்க்காமல் எப்படி வருவது... "சோம்பேறி" மனோவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இவ்வளவு ஆரவாரமாக எழுதுபவர் இப்படி அமைதியாய் இருப்பார் என எதிர்பாத்திருக்கவில்லை. அங்கும் பள்ளித் தோழிகளுடன் சிறு மீட். ஆறாம் வகுப்பு சேட்டைகளை எல்லாம் சொல்லி ரசித்தோம்.

வீட்டிலிருந்து இரண்டு நாட்கள் சென்னை. வாங்கிப் போன பால்கோவா பத்தாமல் போனது தான் கவலை. மற்றபடி அங்கும் ஆரவாரத்திற்குக் குறைவில்லை. அங்கிருந்த மற்றொரு பள்ளித் தோழியுடன் இரண்டு நாட்கள் பேசிக் களித்ததில் மகிழ்ச்சி. பௌர்ணமி இரவு கடற்கரையின் அமைதியான இடத்தில் அலைகளைப் பார்ப்பது என்னவொரு ஆனந்தம். இந்த ஒரு காரணத்திற்காகவே சென்னையில் இருக்க கூடாதா என்ற ஏக்கம். நான் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள திரையரங்குகளுக்கு செல்வதை அதிகம் விரும்புவேன். மாயாஜாலும் அதிலிருந்து தவறவில்லை. "நாடோடிகள்" பார்க்க கூட்டிப் போகிறேன் என்று சொன்னவள், "Love Aaj Kal" டிக்கெட்டுடன் வந்தாள். சுப்ரமணியபுரம் மிஸ் ஆனது போலவே நாடோடிகளும் மிஸ்ஸிங். :( ஏமாற்றம் ஒருபுறம் எனினும் Love Aaj Kal இரண்டாம் முறை பார்த்ததும் அருமை. படத்தின் வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளை கையில் ஒரு 7 Up ஐ சுவைத்துக் கொண்டே மாயாஜாலில் ரசித்ததும் அழகு தான்.

பின் பெங்களூரில் ஒரு நாள். வேலை எதுவும் இல்லையெனினும், ஒரு மாதத்திற்குப் பின் யோகியைப் பார்க்க சென்றேன். ஒரு மாதக் கதைகளை அவரிடமும் சொன்னால் தானே தமிழ்நாட்டு சாப்பாடு செரிக்கும். ஒரு நாள் எனக்கு செவி கொடுத்தவர் அடுத்ததாக சர்ப்ரைஸாக ஊட்டி டிக்கெட்டையும் கொடுத்தார். So, next pack up to Ooty.



ஒரு மாத அலைச்சலுக்குப் பின் நான்கு நாட்கள் ஊட்டியில் ஓய்வு. ரம்மியமான காலநிலையை, மலை உச்சி Resort இலிருந்து தேயிலைச் செடிகளைப் பார்த்துக் கொண்டே காபி கோப்பையுடன் மனதிற்குப் பிடித்தவருடன் அமர்ந்து ரசிப்பது எத்தனை இன்பம். ஊட்டி எனக்கு முதல் முறை. வட நாட்டிலிருக்குமளவு குப்பைகளில்லாத சுற்றுலா இடம். இதைப் பற்றி தனியாகவே எழுத வேண்டும்.

இறுதியாக ஒரு மாதம் கழித்து டெல்லியில் இறங்கிய போது சாலைகள், மொழி, இடம், மக்கள் எல்லாம் வித்தியாசமாய், பிரம்மாண்டமாய் ஆனால் வெறுப்பாய் இருந்தது. என்ன செய்ய.... மனதிற்குப் பிடித்ததே எப்போதும் நம்முடன் இருந்து விட்டால், அதன் மதிப்பு குறைந்து விடும். நல்ல, இனிமையான விஷயங்கள் தூர இருப்பதே அழகு. மொத்தத்தில் அழகான பயணம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அழகாய்ப் போனது. என் மேல் அக்கறை கொண்ட அனைத்து இனியவர்களுக்கும், நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. உங்களை விட அதிகம் இனிமையாய் இருக்க எப்போதும் முயற்சிக்கிறேன்.