Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, August 15, 2010

வளரும் இந்தியா - புதிய விமான முனையம் IGI T3


விளையாட்டுத் திரையரங்கம், தங்கும் விடுதி, ஓய்வறை, குளியலறை, ஷாப்பிங் கடைகள் என அனைத்து வசதிகளும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. எங்கே? ஒரு நகரின் மையப்பகுதியில் என நீங்கள் நினைத்தால் இல்லை. நம் இந்தியத் தலைநகரின் விமான நிலையத்தில் போனமாதம் திறக்கப்பட்ட மூன்றாவது முனையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சௌகரியங்கள்தான் இவை.


ஜூலை மூன்றாம் தேதி டெல்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் பிரதமர் திரு. மன்மோகன்சிங் மற்றும் திருமதி. சோனியாகாந்தியால் தொடங்கப்பட்டது. உலகத்தர சேவையை அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விமான முனையத்தில் பயணிகளின் சாமான்கள் உள்ளிட்ட மொத்தப் பரிசோதனைக்குமான நேரம் பத்து நிமிடங்களுக்கும் குறைவாயிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக DIAL (Delhi International Airport Pvt. Limited) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பரிசோதனைகள் முடிந்த பின் பயணிகள் விமானத்தை அடையும் தூரம் வரையிலும் வழி நெடுக கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புத்தகக் கடைகள், முண்ணனி நிறுவன ஆடை நிறுவனங்கள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், பிரத்யேக உணவகங்கள் ஆகியவை அடங்கும்.

சிறப்புக் கட்டமைப்புகள்

இந்த முனையம் முழுவதும் புகை பிடிக்க அனுமதியில்லா வண்ணம் அமைந்திருந்தாலும் புகைப்பவர்கள் வசதிக்காக தனிப் புகையறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் விளையாட்டுத் திரையரங்கில் நடப்பு விளையாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருப்பதுடன் அங்கேயே பார்வையாளர்களுக்கு/பயணிகளுக்கு ஏற்ற மதுபான வகைகளும் கிடைக்கும். விருப்ப பானத்தை அருந்திச் சுவைத்தவாறே ஸ்கோர்களுக்கு ஆரவாரித்து மகிழலாம். நேரத்தைக் கொல்லும் விதமாக இருக்கையில் அமர்ந்து கொண்டே தூங்கும் பயணிகளுக்கென சிறப்பு ஓய்வறைகளும், தயாராகிச் செல்ல வேண்டிய பயணிகளுக்கு குளியலறைகளும் உள்ளன. குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் அம்மாக்களை ஆசுவாசிக்கும் வகையில் குழந்தைகளுக்கென தனி விளையாட்டுப் பகுதியும் திறக்கப்பட்டுள்ளது.


டெல்லியை அடையும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி பேருந்தில் விமான நிலையத்தை அடைவது வழக்கம். இப்புதிய T3 (Terminal 3) முனையத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 78 அதிநவீன ஏரோ ப்ரிட்ஜ்களின் உதவியால் 90% பயணிகள் நேரடியாக விமானத்திலிருந்து முனையத்தை அடையலாம்.

பிரதமர் உரை

முனையத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் விரிந்த பரப்பில் அமைக்கப்ப்ட்டிருகும் மூன்றாவது முனையத்தைப் பிரம்மிப்புடன் பார்த்துப் பூரிப்புடன் உரையை ஆரம்பித்தார். “இம்முனையம் அரசு-தனியார் துறைகளின் கூட்டு முயற்சியால் உருவானது. தனியார் துறையில் ஒப்படைக்கப்படும் வேலைகள் கனகச்சிதமாக நிறைவுறுவதை நிரூபிக்கும் வண்ணம் இம்முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 58க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இக்கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதன் பலன் இப்போது நம் கண் முன் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது.”
இவ்வாறாக T3 முனையத்தைப் புகழ்ந்ததோடு அதனாலான இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பேசினார். “குறுகிய காலத்தில் கட்டப்பட்ட T3 முனையம் உலகின் 8ஆவது பெரிய முனையமாகத் திகழ்வது மகிழ்ச்சிக்குறியது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். மற்ற நாட்டு விமானங்கள் இந்தியா வழி பறப்பதும், இந்தியப் பெரு நகரங்களில் நின்று செல்வதும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை வரும் வருடங்களில் கணிசமாக உயரும்.”

திருமதி.சோனியா காந்தியின் உரை

”காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நாள் நெருங்கும் நிலையில் டெல்லியின் இம்மூன்றாவது முனையம் தரமானதாகவும், நேர்த்தியாகவும் தயாரானது பெருமைக்குரிய ஒன்று. இதே தரம் இந்தியாவின் அனைத்துப் போக்குவரத்துகளிலும் உள்கட்டமைப்புகளிலும் வர வேண்டும். டெல்லி மெட்ரோ ரயில் இதற்கு ஒரு சான்று. இன்றைய தேதியில் டெல்லி மெட்ரோவால் பயனடைந்துள்ள சாமானியர்கள் லட்சக்கணக்கானோர். இப்படிப்பட்ட இந்தியாவின் வளர்ச்சிகளைக் கண்முன்னால் சாத்தியமாக்குவது மகிழ்ச்சிக்குரியது” என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்

* ஜூலை 3 ஆம் தேதி திறக்கப்பட்ட தலைநகரின் விமான நிலைய மூன்றாவது முனையம் ஜூலை 14 முதல் வெளிநாட்டு விமானங்களுக்கான சேவையைத் தொடங்கியது.
* உள்நாட்டு விமானங்களுக்கான சேவை ஜூலை 30 முதல் ஆரம்பமானது.
* லட்சக்கணக்கான மரக்கன்றுகள் முனையத்தைச் சுற்றிலும் நடப்பட்டுள்ளன.
* கைப்பைக்கான சோதனைக்கு 41 எக்ஸ்ரே மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 12,800 கைப்பைகள் சோதனைப்படுத்தப்படலாம்.
* 6 பொது நுழைவு வாயில்களும் 168 செக்கின் கவுண்டர்களும் 78 கேட்களும் திறக்கப்பட்டுள்ளன.
* உள்ளே தங்கும் விடுதிகளில் கட்டப்பட்டுள்ள மொத்த அறைகள் 100. இவற்றில் 68 அறைகள் உள்நாட்டுப் பயணிகளுக்கும் 32 அறைகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* 5.5 மில்லியன் சதுர அடி பரப்பிலான மொத்த இடத்தில் 2,15,000 சதுர அடி பரப்பில் வர்த்தக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தின் கொள்ளிடம் 4300 கார்கள்.
* 97 தானியங்கித் தரை நகர்வுகள் (travelators) கொண்டுள்ள மூன்றாவது முனையத்தின் நீளமான தரை நகர்வு 118 மீட்டர் ஆகும்.
* இம்முனையம் 63 லிஃப்ட்களும் 34 தானியங்கி படிகளும் (escalators) கொண்டுள்ளது.


இம்முனையம் கட்ட செல்வழிக்கப்பட்ட மொத்தத் தொகை 2.7 பில்லியன் டாலர்.

டெல்லி T3 முனையம் - மற்ற உலக விமான முனயங்களுடன் ஒப்பீடு

உலகின் 8ஆவது மிகப்பெரிய விமான முனையமாகத் திகழ்கிறது நம் பாரதத்தின் புது முனையம். இது துபாயின் மூன்றாவது முனையத்தை அடுத்த இடமாகும். முதல் ஆறு இடங்களில் முறையே துபாயின் முதல் முனையம், பார்சிலோனா, மெக்ஸிகோ, பாங்காக், ஹாங்காங், பீஜிங் ஆகியவை உள்ளன.

சமீபத்தில் திறக்கப்பட்ட சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமான முனையங்களுடன் ஒரு சிறிய ஒப்பீடு.

சாங்கி விமான நிலையம் முனையம் 3, சிங்கப்பூர் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1999; கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 22 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 4.1 மில்லியன் சதுர அடி.

ஹெத்ரோ விமான நிலையம் முனையம் 5, லண்டன் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2002;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 30 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 3.8 மில்லியன் சதுர அடி.

இந்திரா காந்தி இண்டர்நேஷனல் விமான நிலையம் முனையம் 3, இந்தியா - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2007;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2010; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 34 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 5.5 மில்லியன் சதுர அடி.

சமீபத்தில் உலகில் கட்டப்பட்ட விமான நிலைய முனையங்களிலேயே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது எனும் பெருமையை நம் இந்திய விமான முனையம் பெற்றுள்ளது.

மெருகேறி வரும் தலைநகரின் சௌகரியங்கள்

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் செயல்பட்டு வரும் டெல்லி மெட்ரோ ரயில் விரைவில் டெல்லி விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது. தவிர இம்மெட்ரோ ரயில் அதி விரைவு வண்டியாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செயல்படுமாறும், மிகக் குறைவான இடங்களில் நின்று செல்லும் விதமும் இயங்க இருக்கிறது. இதன் மூலம் டெல்லியின் மையப் பகுதியான கனாட் ப்ளேசிலிருந்து (CP) டெல்லி விமான நிலையத்தை 20 நிமிடங்களில் அடையலாம். இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் இவ்விரு இடங்களுக்குமிடையேயான பயண நேரம் சாலை வழியாக சென்றால் குறைந்தது ஒரு மணி நேரம். இது தவிர பயணிகளுக்கான போர்டிங் பாஸும் கனாட் ப்ளேஸ் மெட்ரோ நிலையத்திலேயே கிடைக்குமாறும் வசதிகள் வர இருக்கின்றன. பயணிகளிடையே நிச்சயம் அதிக வரவேற்பைப் பெற இருக்கும் திட்டங்கள் இவை. கூடுதலாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மெட்ரோ ரயில்களும் டெல்லியில் இயக்கப்பட உள்ளன.

புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், மயக்கும் வர்த்தகக் கட்டிடங்கள், அதிகக் கொள்ளளவு கொண்ட அதி விரைவுப் பேருந்துகள், குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இடை நில்லாப் பேருந்துகள், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் என மெருகேறியிருக்கும் வசதிகள் ஏராளம்.

தலைநகர் என்ற அந்தஸ்தில் நிச்சயம் அதன் தனித்துவத்திற்கும் உள் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் குறைவில்லை தான். நாட்டின் வளர்ச்சி தலைநகரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது மிகச்சரியானது. இம்மாற்றம் விரைவில் நாடு முழுவதும் வளம் கொழிக்கச் செய்யும் வளர்ச்சியாக மாறட்டும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

Monday, May 10, 2010

நம் தாய்த்திரு நாடு இந்தியா

அஜ்மல் கசாப் - கடந்த 10 நாட்களாக செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பெயர்.

இவர் யார், இவர் செய்த குற்றமென்ன என்பது எந்தவொரு இந்தியருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நவம்பர் 26, 2008 இல் இந்தியாவையே உலுக்கிப் போட்ட தீவிரவாத சதியில் மும்பையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அந்த நாள் மும்பையின்/இந்தியாவின் வரலாற்றில் பெரும் சோக முத்திரையைக் குத்திச் சென்றுள்ளது.

போன வாரம் இக்குற்றவாளியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனு தாக்கல் செய்துள்ளார் அவர் தரப்பு வக்கீல். இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாதென்றும், அவர் வயதைக் கருத்தில் கொண்டும், மனித நேயத்துடனும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜ்மல் கசாப் தனது முதல் நீதிமன்ற ஆஜரில் சொன்னதை எத்தனை பேர் அறிவரோ. அவர் சொன்னது: “நான் நடந்தவற்றிற்கு மிக வருந்துகிறேன். என்னால் இன்னும் பலரைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அதற்குள் போலீஸ் வந்து எங்களுக்குத் தொந்தரவு செய்து விட்டனர். இன்னும் என் மனதுள் இருக்கும் நீங்கா வருத்தம் என்னால் இன்னும் பல இந்தியர்களைக் கொல்ல முடியாமல் போனது தான்”. இதற்கு மேலும் ஒரு இந்திய வக்கீல் பணத்திற்காக அவரைக் காக்கத் துடிக்கிறார் என்றால் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இப்பிரச்சனையைப் பற்றி நண்பரொருவரிடம் சேட்டிக் கொண்டிருக்கையில் சொன்னார், “சண்டியர்ல கமலஹாசன் மட்டும் தூக்குத் தண்டனை கூடாதுன்னு சொன்னா ரசிச்சுப் பார்க்குறீங்க. நிஜத்துல ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியவில்லையே!” இது அடுத்த அவலம். இந்தியப் படங்கள் பார்த்து நம்ம மக்கள் ரொம்பக் கெட்டுப் போயிருக்காங்க. இப்படிக் கமலஹாசன் சொன்ன பேச்செல்லாம் கேக்கணும்னா அடுத்ததா ஒரு லேப்டாப்பை எடுத்துக்கிட்டு ஒரு மொட்டை மாடில உக்காந்து தீவிரவாதிகளை அழிக்க சதி பண்ணனுமா.. என்ன இது சின்னப் புள்ளத் தனமா...

நிச்சயம் ஒருவர் உயிரைக் கொல்லும் உரிமை மற்றவருக்கில்லை என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் இந்திய நாட்டில் வாழும் நம்மைக் காக்கும் உரிமை நம் அரசுக்கு உண்டென்பதால் தூக்கு என்பதே சரியான தீர்ப்பாக அமையும். படம் எடுத்து உங்களைக் கொல்ல வரும் பாம்பிற்கு முன் மண்டியிட்டு “வேண்டாம் பாம்பே. என்னை விட்டுடு. நான் உன்னை அடிச்சா உனக்கு வலிக்கும். அதுனால நீயும் இங்கேயிருந்து போயிடு” என சமரசம் பேசிக் கொண்டிருப்பீர்களா? இல்லை தானே. அதே போல இவரும் இல்லை இதுவும் ஒரு விஷக் கிருமி. இதை நம் நாட்டில் இத்தனை நாட்கள் வைத்திருந்ததே பாவத்திற்குரிய செயல். சீக்கிரமே தூக்கிலிடுவதே முறை.

இவரை சிறையில் வைக்க இந்திய அரசு நாளொன்றுக்கு லட்சக் கணக்கில் செலவிட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவருக்காக செலவழிக்கப்பட்ட காவல் துறையினர், பொருட்செலவு, இவருக்கான பந்தோபஸ்துப் பணிகள் என நம் மக்களின் வரிப்பணம் அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் படி பரிந்துரை செய்யும் நல்லவருக்கு ஒரு விஷயம் “நாளை நீங்களோ உங்கள் உறவினரோ பயணப்படும் விமானத்தை ஹை-ஜாக் செய்து இந்தத் தியாகியை விடுதலை செய்யச் சொல்லி வரும் மிரட்டலுக்குத் தயார் என்றால் இவரைக் காப்பாற்றுங்கள்”. ஏனெனில் இது தானே எப்போதும் இவர்களால் நமக்குக் கிடைக்கும் நன்மை. நடு வான் சாகசத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மரணப் போராட்டத்திற்குத் தயாராவோம் காமன் மென்.

அழகான அரண்மனையில் நால்வரைக் கொன்ற பாம்பைக் கண்டால் சமாதானம் பேச மாட்டோம். அடித்துக் கொன்று விடுவோம். ஆனால் அது மனிதன் எனும் போது மட்டும் இத்தனை அவலங்கள். இதெல்லாம் அரேபிய நாடுகளில் நடக்குமா... நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.