Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Wednesday, July 15, 2009

கோவை, திருப்பூர் நண்பர்களே...


இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயார்க் படம் பார்த்தோம். வித்தியாசமான, வலுவான கதை, கதைக்கு வலு சேர்க்கும் இர்ஃபான் கானின் நடிப்பு, காட்சி அமைப்புகள், அழகான காதலை வெளிப்படுத்தும் கேட்ரினா கைஃப் என படமே தூள். மசாலா வகையறாக்கள் இல்லாத மற்றுமோர் படம் பாலிவுட் சினிமாவில்.

நியூயார்க்கில் WTC தகர்க்கப்பட்ட போது அங்கிருந்த இந்தியர்களின் நிலையை கொஞ்சமே கண்ணீருடன் அழுத்தமாய் சொல்லியிருக்கும் படம். படம் முழுவதும் நியூயார்க்கில் எடுக்கப்பட்டிருந்தும் தேவையில்லாமல் நாட்டை வலம் வரும் பாடல் காட்சிகள் இல்லாதது படத்தின் ப்ளஸ். எவ்வித காரணத்தாலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்ற வாதம் ஏற்புக்குடையது. காதலுக்காக கதறும் கடைசிக் காட்சியில் கேட்ரினா அசத்தியிருக்கிறார். விவரிக்க வார்த்தை இல்லையெனினும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் நல்ல படம் பார்த்த முழு திருப்தியில் வெளிவரலாம். படம் பார்த்த யாரும் டோட்டாவை (டோட்டா என்ற வார்த்தையை) மறக்க முடியாது.
(ஜான் ஆப்ரகாமின் குழி விழும் சிரிப்பிற்காக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும் ;) )

**************************************************



இப்போதெல்லாம் எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சலிப்பைத் தரும் நிலையில் சற்றே ரசிக்க வைக்கின்றன விளம்பரங்கள். நடிகைகளை அரைகுறை ஆடையுடனும், இயல்பற்ற நடிப்பிலும் பார்த்து போரடித்த நிலையில் ஹீரோ ஹோண்டாவின் விளம்பரத்தில் வரும் எளிமையான பெண்ணின் காதல் சொல்லும் பார்வை ரொம்பவே இயல்பு. இப்படி ஒரு பெண்ணின் சிரிப்பிற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் வருவார்கள் ஆண்கள்.

எப்போதுமே அனைவரும் ரசிக்கும், மதிக்கும் விளம்பரங்களைத் தருவதில் ஏர்டெல்லுக்கு நிகர் ஏர்டெல் மட்டுமே. முன்பு வந்த இந்தியா, பாகிஸ்தான் குழந்தைகளின் விளம்பரத்தில் ஒரு பட்டம் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது. மாதவன், வித்யா பாலனின் காதல் ரம்மியமாக இருந்தது. அப்பாவின் கையுடன் கயிறு கட்டி பையன் தொலையாமல் காட்டியதில் அப்பாவின் பாசமிருந்தது. ஸைப் அலிகான், கரீனா கபூர் மற்றும் ஷாருக் வந்த போதும் அழகான நட்பு மற்றும் காதலை வெளிப்படுத்தியது. சிறிது நாள் முன் வந்த ஏர்டெல் சிறுவன் ரொம்ப சமர்த்தாக அப்பாவிடம் அம்மாவை கம்ப்ளைன்ட் செய்ததை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களுக்கு குறையாத வகையில் இப்போதைய ஏர்டெல் விளம்பரமும். பையனுக்கு குரல் கொடுக்கும் மக்களைப் பார்த்து பெருமிதப்படும் அப்பாவும், அவர்களுக்காக மகனின் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அப்பாவின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கும் பொறுப்பான மகனையும் பார்க்க பெருமையாய் உள்ளது. (சல்யூட் ஏர்டெல்)

**************************************************

என்னவர் என்னை வேலையை விட்டு விட்டு தொடர் கதை எழுத சொல்கிறார். (!?!!?!!?!!?!!??!!!!!!)
தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எனக்கு முதல் நாள் வந்த கனவு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் கிடையாது. இது எதுவும் பிரச்சனையா? தகவல் தெரிந்தோர் சொல்லுங்கப்பா. (தமிழ் சீரியல்களில் நடிக்க புது முகங்கள் வரவேற்கப்படுகிறார்கள். கதை: அட, என் கனவுகள் தாங்க.)

**************************************************

அப்படி இப்படி என தள்ளிப் போன ப்ராஜெக்ட் விசிட் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. வரும் திங்கள் காலை கோயம்பத்தூருக்குப் பறக்கிறேன். அங்கே வெதர் நன்றாக இருப்பதாக தோழி சொன்னாள். டெல்லி வெக்கையிலிருந்து விடுதலை என நினைக்கும் போதே மனசுக்குள் மழை அடிக்கிறது. (கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)

**************************************************

சீக்கிரமே காதல் கதைகள் எழுதி உங்களையெல்லாம் இம்சிக்கலாம் என நினைக்கிறேன். என் எல்லா மொக்கைகளையும் தாங்கும் நண்பர்கள் இதையும் தாங்குவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வருகிறது அடுத்த பதிவு காதல் கதை - 1. அனைவரும் காதல் கதை எழுதும் போது இந்த கதைகளில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்போருக்கு, இவை அனைத்தும் என் வாழ்க்கையில் நான் பார்த்த என் நண்பர்கள் மற்றும் தோழிகளின் உண்மைக் கதைகள். அவர்களிடம் அனுமதி வாங்கியே எழுதப்படும். (இந்த அறிவிப்பு நீங்கள் தப்பிப்பதற்காக. இதற்கு மேலும் படித்து மாட்டிக் கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது)

**************************************************

கடைசியாக பதிவுலக கிசுகிசு

* அனைவரையும் கலாய்த்து எழுதி வரும் இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மிகத் திகிலுடன் எதிர்கொண்டுள்ளார் இந்த ஜிம்பலக்கா. காரணம் என்னவென்றால் ரொமான்டிக்காக பேச பெண்ணுக்குத் தெரியவில்லையாம். மாப்பிள்ளை எவ்வளவு அழகாகப் பேசினாலும் இவர் அதை விட அழகாய்க் கலாய்த்து நகைச்சுவையாக்கி விடுவதால் அந்த பக்கம் இப்போதைக்கு கப்சிப். (கல்யாணத்துக்கு அப்புறம் ராமனுக்கேத்த சீதையா இருந்து தானே ஆகணும்)

* இன்று மட்டும் ஆறு முறை அழைத்து விட்டார் இந்த யூத் பதிவர். காரணம் என்னவெனில் நடிகையின் பெயர் கொண்ட பெண்ணிடமிருந்து வந்த மெயில் தானாம். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. அந்த எழுத்துக் கடலில் நான் தொபுக்கடீர்னு விழுந்து விட்டேன் என்றெல்லாம் எழுதியதோடு மட்டுமல்லாமல் முடிக்கும் போது 'என்றும் அன்புடன்' என்றிருப்பதால் அந்த "என்றும்" அன்புடனுக்கான அர்த்தம் புரியாமல் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். (சீக்கிரமே அதற்கான அர்த்தம் அறிய வாழ்த்துக்கள்)

Monday, June 1, 2009

செல்வேந்திரன்.


நேற்று செல்வேந்திரனை நீயா நானாவில் பார்க்க நேர்ந்த போது மிகுந்த மகிழ்ச்சி. என்னவரையும், அப்பாவையும் கூப்பிட்டுக் காண்பித்தேன். அடுப்பில் வைத்திருந்த ரொட்டியை அணைத்து விட்டு டிராயிங் ரூம் வந்து விட்டேன்.

நாகரிகமான உடை, கச்சிதமான உடல் மொழி என கலக்கி விட்டார் செல்வேந்திரன். அவரை நான் மூன்று முறை மட்டுமே சந்தித்துள்ளேன் என்றாலும், மணிக் கணக்கில் பேசியிருக்கிறேன். முதல் முறை அவரை சந்திக்க போயிருந்த போது அவர் கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்தது. காரணம் கேட்ட போது, "இல்ல விக்கி, வர்ற வழில ரோட்டுல வெயில் காரணமா ஒரு பெரியவர் மயங்கி விழுந்துட்டார். பார்த்திட்டு அப்படியே எப்படி வர்றது. அதான் மருத்துவனையில் சேர்த்து விட்டு, கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு வந்தேன்" என்றார். "யாரவர்" என்ற எனது கேள்விக்கு அவரது ஒற்றைப் பதில் "தெரியாது".

அவர் நிகழ்ச்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை என்னிடம் அடிக்கடி சொல்லுவார். ஒன்று, நம் உறவினர், நம்மைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினர், பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள் என நம்மை அறிந்த பல உறவுகள் இருக்கும் போது, முகம் தெரியாத ஓர்குட், பேஸ் புக், ப்ளாக் இதன் மூலம் வரும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என நாம் நினைப்பது ஏன்? அடுத்தது, பாட்டன், பூட்டன் பெயர் என்ன, அவர்கள் என்ன தொழில் செயதார்கள் என்ற விவரங்களை அறிய நாம் காட்டும் அக்கறையை விட யாரோ முகம் தெரியாதவரைப் பற்றி அறிய அதிக அக்கறை காட்டுவதேன்...

என்னை சிந்திக்க வைத்து சீரமைத்தவை அவரின் எழுத்துக்களும், கருத்துகளும். செல்வேந்திரனை நான் மதிக்க காரணங்கள் சில.

* மிக எளிமையானவர். எல்லோரிடமும் பழகுவதற்கு இனியவர்.

* தன் எழுத்துகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் காரணமாய் எப்போதும் தற்பெருமை கொள்ளாதவர்.

* ஆங்கிலம் தெரியாமல் தப்பு தப்பாகப் பேசும் பீட்டர்களுக்கு நடுவே ழகரம், ளகரத்தைத் தவிர மற்ற தமிழ் உச்சரிப்புகளைத் தெளிவாக, எளிமையாகப் பேசுபவர்.

* சபை நாகரீகம் அறிந்தவர். யாராவது தவறான வார்த்தைகள் உபயோகித்துத் திட்டினாலும் அவரை எதிர்த்துப் பேசாமல் பொறுமையாய் சிரித்துப் போவார்.

* பல வெட்டிக்கதை ஆசாமிகளுக்கு நடுவே எப்போதும் பிஸியாக தன் வேலையில் ஓடிக் கொண்டிருப்பவர்.

* பல தரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தும் எவ்வித கெட்ட பழக்கங்களையும் கற்றிருக்காதவர்.

* யாருக்கு எந்த உதவி என்றாலும் தன்னால் முடியுமானால், யோசிக்காமல் செய்யக் கூடியவர்.

* நேரத்தைப் பொன் போல மதிப்பவர்.

* சொந்தக் காரர்களையும், சிறு வயது நண்பர்களையும் எப்போதும் மறவாமல் நட்பு பாராட்டுபவர்.

* மொக்கைகளை மட்டுமே கொண்டுள்ள பல பதிவர்களுக்கு நடுவே தரமான உபயோகமான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் சொற்பப் பதிவர்களுள் ஒருவர்.

* எப்படிப் பட்ட கோபத்தையும் அழகான புன்னகையால் வெளிப்படுத்துபவர்.

* தனக்கு எதிரில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட ஆண்மகன்.

இந்த குணங்களையெல்லாம் கண்டு வியந்த நான் ஒரு முறை அவரிடம், "எப்படி செல்வா, இப்படி?" எனக் கேட்ட போது அவர் எனக்கு சொன்னது, "விக்கி, நாம ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி நாம எப்படிப் பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம், என்ன சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம், நம் பெற்றோர் எப்படிப் பட்டவர்கள், நாம் செய்யும் செயல்களை அவர்கள் அறிய நேர்ந்தால் என்ன நினைப்பர் என்ற கேள்விகளை நினைத்துப் பார்த்தால் மகாத்மாகவல்ல, ஒரு நல்ல மனுஷனாக வாழ முடியும்."

சரி தான் செல்வா. நீயா நானா நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து கோபிநாத் யாரையும் இவ்வளவு பாராட்டியதில்லை. செல்வா எனக்கும் நண்பர் என சொல்வதில் மிகப் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் செல்வா நீ இன்னும் வளரவும், பல உயரங்களை அடையவும்.