
என் அன்புக் கணவா,
இன்று உனக்கான எனது ஒரு நாள்.
உன் மொழி மறந்து
கலாச்சாரம் துறந்து
உணவு மாற்றி
அழகான பஞ்சாபிப் பெண்ணை இழந்து
எனைக் கைப்பிடித்த உனக்காக
நான் பிரார்த்திக்க இந்த ஒரு நாள்
காதலித்த நாளிலிருந்தே நம்
காதலைக் காத்தவன் நீ.
உன் அன்பும் நேசமும் மட்டுமே
என்னை இத்தனை தூரம் வரவைத்தன.
கல்யாணமான நாளிலிருந்து
சுஜாதாவையும், பால குமாரனையும்
உனக்கு புரியவைக்க முடியவில்லை என்று
உன் மேல் நான் கோபப்பட்ட நாட்கள் அதிகம்.
ஆனால் நீ காதல் பரிசளித்த "ஜான் க்ரிஷமை"
நான் பிரித்தது கூட இல்லை என அறிந்தும்
அதற்காக ஏமாற்றமடையாதவன் நீ.
எனக்காக "அப்படிப் போடு"
பாடக் கற்றுக் கொண்டாய்.
உனக்காக நானும் "Aao Mil Chalo" வை
முணுமுணுத்த படியே.
இதுவரை என்னை விட்டு
உன் நண்பர்களுடன்
எங்கும் செல்லாதவன் நீ.
ஆனால் -
கை நிறைய பணம் கொடுத்து
என்னை தோழிகளுடன் அனுப்பி விட்டு
எனக்காக சமைப்பதில்
மகிழ்பவன் நீ.
உனக்காக ஒரு நாள் போதாது எனினும்
எந்நாளும் நீ என்னோடு இருப்பதற்காக
இந்த ஒரு நாள்.
