Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, September 10, 2010

பழக்கத்தில் வந்தது


பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)


*************************************************************************************************************


கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )


*************************************************************************************************************


க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் மஞ்சள் வெயில்ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)


*************************************************************************************************************


லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)


*************************************************************************************************************

நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)


*************************************************************************************************************


வாசிப்பில் கவர்ந்தது

பழக்கத்தில் வந்தது..

பள்ளியே எனக்காகக்

கைதட்டியபோது

ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..

மக்கு என்றார்கள் அவளை!


மேலே படிக்க

நான் கெஞ்சி நின்ற போது

தவறிய பேப்பர் எழுத

முரண்டு பிடித்தாள்..

ஞான சூன்யம் என்றார்கள் அவளை!


அரசு வேலைக்காக

நான் தேர்வெழுதிய போது

அம்மாவுக்குப் போட்டியாக

வீட்டு வேலை செய்தாள்..

இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!


போஸ்டிங் வாங்கியதும்

என்னைப்

பெண் கேட்டு வந்தார்கள்..

இதுவும் இருக்கே என

அவளைத் தான் முறைத்தார்கள்!


யாருமே எதிர்பார்க்கவில்லை..

ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு

அவளுக்குக் காதல் வருமென்று!


சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு

ஃபாரின் பறந்தவள்

அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

- கோ. தமிழ்ச்செல்வி


*************************************************************************************************************


யோகி டைம்ஸ்

யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.

20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.

“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

Sunday, February 28, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ரசிகையின் பார்வை



சிம்புவின் கைவித்தை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை; த்ரிஷாவின் உதடு சுழிக்கும் நடிப்பு இல்லை. இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே கௌதம் மேனனின் காதல் கதையைப் பார்க்க சென்றேன். கொஞ்சமும் ஏமாற்றவில்லை. படம் முழுக்கக் காதல். ஒவ்வொருவரும் உணர்ந்த அல்லது தன் நட்பு வட்டத்தில் யாராலேனும் உணரப்பட்டிருந்த காதலையே அழகாக சொல்லியிருக்கிறார். ஐந்து பேரில் ஒருவருக்கு வரும் முதல் காதலின் அழகான ஓவியம் “விண்ணைத் தாண்டி வருவாயா”

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து விட்டு திரைப்பட இயக்குனராகும் ஆசையில் துணை இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக். பெற்றோருக்கு சம்மதம் இல்லாத பொழுதும் அடமாகத் தன் இலக்கை நோக்கிப் போகும் ஹீரோ. மேல் வீட்டில் குடியிருக்கும் ஹவுஸ் ஓனரின் மகள், தேவதையாக ஜெஸ்ஸி. பார்த்ததும் ஒட்டிக் கொள்ளும் இல்லை, பற்றிக் கொள்ளும் காதல், அதன் சேட்டைகள், அதை சமாளிக்கும் குறும்புத் தனமான முகம் எனத் தேர்ந்த நடிப்பு சிம்புவிடம். கார்த்திக்கின் காதலை அறியும் தங்கை ”ஜெஸ்ஸி மலையாளி; கிறிஸ்டின். அதை விட கார்த்திக்கை விட ஒரு வயது மூத்தவள்” என்ற விபரங்களை சொல்லி அவன் காதல் ஒத்து வராதெனக் கண்டிக்கிறாள். அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ. முறைத்துக் கொண்டு போய் விடுகிறாள் ஜெஸ்ஸி. அடுத்த இரண்டு நாட்களில் அவளைக் காணாது தவிக்கும் அண்ணனிடம் ஜெஸ்ஸி பத்து நாட்கள் அவள் பாட்டியின் வீட்டிற்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை.


அடுத்ததென்ன, “வாரணம் ஆயிரம்” படம் பார்த்த எஃபெக்டில் “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். எதுக்காகப் பிடிச்சது என அவர்களிருவரும் நின்று பேசும் லொக்கேஷன் அருமை. சிம்புவிற்குப் பின்னால் நீண்ட ஆறும், த்ரிஷாவிற்குப் பின்னால் படகும் என தூளான கேமரா மேனின் கைவண்ணம். ஜெஸ்ஸி சென்னைக்குத் தனியாகப் பயணிக்கிறாள் என அறிந்து அவளுடனே பயணமாகிறான் கார்த்திக். அப்போது எண்ட்ரி ஓமனப் பெண்ணே பாடல். பென்னி தயாள் ஏமாற்றவில்லை. இதில் ஹைலைட்டே கேமரா தான். அசத்தலான காட்சிகள். அழகான பெண், அவள் மேல் பைத்தியமாக அலையும் பையன், ஒரே சீட்டில் இரவுப் பயணம் - பேச்சில் ஆரம்பித்துக் கால், கை எனக் கன்னத்தில் முத்தம் வரை போகிறது.


சென்னை திரும்பியவுடன் மறுபடியும் தடுமாறுகிறாள் ஜெஸ்ஸி. இந்தக் காதல் திருமணத்தில் முடியாது. இது தொடரக் கூடாது என்கிறாள். விடுவதாயில்லை கார்த்திக். ஒரு வழியாய்க் காதல் ஆரம்பிக்க, வழக்கம் போல் நாயகியின் அண்ணனுக்கும், நாயகனுக்கும் அடிதடியாகிறது. மறுபடியும் குழம்பும் ஜெஸ்ஸி. இந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் நிச்சயிக்கப்பட அதை சர்ச்சிலேயே மறுக்கிறாள் ஜெஸ்ஸி. அன்றிரவே கார்த்திக்கை சந்தித்து மீண்டும் மலர்ந்து, வாசம் வீசுகிறது காதல். காதல் மழையில் நனைகின்றனர் நாயகியும், நாயகனும்.

துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் மறுபடியும் பேசப்படவே பதற்றமடைந்து கார்த்திக்கை அழைக்கிறாள். வேலைகளுக்கு நடுவே பேச முடியாத கார்த்திக்கிடம் கோபம் கொள்கிறாள். சிறிய சண்டை மனமுறிவாகப் போகிறது. கார்த்திக்கிற்காக வீட்டில் பேசும் ஜெஸ்ஸிக்கு அப்பாவின் தற்கொலை மிரட்டல் பயமுறுத்தவே காதலிலிருந்து விலக வேண்டிய கட்டாயம்.

இந்த காதல் மேலும் தொடர்ந்ததா... காதலின் முடிவு எப்படிப் போனது.... கார்த்திக் இயக்குனரா என்பது தான் படத்தின் கடைசி சில காட்சிகள். ஆனாலும் கடைசி சீன் வரை சீட்டை விட்டு நம்மை எழுந்திருக்க வைக்காமல் இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் தான்.

மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்.

படத்திற்கு பெரிய ப்ளஸ் மனோஜின் ஒளிப்பதிவு. அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசைக்குக் குறைவில்லை என்றாலும் படம் முடிந்து வெளியே வரும் போது எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்வதை உணர முடிகிறது. அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை அவரின் மேக்கப். எல்லா சீனிலும் இயற்கையாய்க் காட்டுவதற்காக தலையை சுருட்டையாய், சீவாதவாறு ஒரு மாதிரி விரித்து விட்டது சரி, கல்யாணத்திற்கு போகும் போதும் அப்படியேவா.... கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது. அப்படியே படம் முழுக்க இருந்திருந்தால் அவர் இன்னும் அழகாக இருந்திருப்பார். பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? கொஞ்சம் நெருடலான மேக்கப். ஆனால் லிப்ஸ்டிக்கைத் தீட்டி வைக்காமல் அழகாக, இயற்கையாகக் காட்டியிருக்கிறார்கள் த்ரிஷாவை.


அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள் சிம்புவும், த்ரிஷாவும். முதலில் சாதாரண காதல்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு. அது தான் அவர்களின் திறமையை முழுக்கக் கொண்டு வர உதவியுள்ளது. எந்த வாய்க் கோணல் சேட்டைகளும் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல பாங்காக உள்ளார் த்ரிஷா. அவரிடம் ஒரு மெச்சூரிட்டியைக் காண முடிகிறது. அதே தான் சிம்புவிடமும். தனது 25 வது படத்திலாவது அவர் விரல் வித்தைகளைத் தவிர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொள்ளை கொள்ளும் காதல் காட்சிகளில் 23 வயதுப் பையனாக மனதை அள்ளுகிறார். த்ரிஷாவிற்கும், சிம்புவிற்கும் நிஜமாகவே நல்ல கெமிஸ்ட்ரி.


படத்தின் ஒரே நெருடல் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் பார்த்தது போல் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் ஆட்டம். முதலில் பார்க்கும் போது நளினமாகத் தான் இருந்தது என்றாலும் எல்லா படங்களிலும் பார்த்து சலிப்பே வருகிறது. வேண்டாம் கௌதம். கொடுமை. மத்ததெல்லாமே பெர்ஃபெக்ட்.


படத்தில் கொஞ்சம் லாஜிக் இல்லையெனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்கு - காதல் லாஜிக் இல்லாதது தான். இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் கொஞ்சம் கிறுக்குத் தனமானது தான். அது தான் காதலின் அழகு. ரசியுங்கள்.

யோகி கமெண்ட்ஸ் - முதல் முறையாக ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமென்பதால் என்னைப் போலவே ஆர்வம் குறையாமல் ரசித்தார். விஜய்யையும், அஜித்தையும் பார்த்து போரடித்துப் போனவருக்கு சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது. Worth spending 170 rupees per ticket and a travel of 60 Kms.

தியேட்டர் வாய்ஸ் - படம் முடிந்து வெளிவரும் பலரும் மனோஜின் ஒளிப்பதிவைப் புகழ்ந்தது தெளிவாகவே கேட்டது.

த்ரிஷாவை ரசித்த கணவர்களை முறைத்த பெண்களைக் காண முடிந்தது.

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல காதல் படத்திற்குக் கூட்டி வந்ததாக ஒரு காதலி தன் காதலனைப் புன்னகைத்தார்.

ஓரிருவர் மட்டும் கிளைமாக்ஸ் சொதப்பி விட்டதாகப் பேசி சென்றனர். பலருக்கும் கிளைமேக்ஸ் பிடித்திருந்தது என்பதும் அறிய முடிந்தது.


மொத்தத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா - திகட்டத் திகட்டக் காதல் - மனதை அள்ளும் வசீகரம்.

கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.

Wednesday, July 15, 2009

கோவை, திருப்பூர் நண்பர்களே...


இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயார்க் படம் பார்த்தோம். வித்தியாசமான, வலுவான கதை, கதைக்கு வலு சேர்க்கும் இர்ஃபான் கானின் நடிப்பு, காட்சி அமைப்புகள், அழகான காதலை வெளிப்படுத்தும் கேட்ரினா கைஃப் என படமே தூள். மசாலா வகையறாக்கள் இல்லாத மற்றுமோர் படம் பாலிவுட் சினிமாவில்.

நியூயார்க்கில் WTC தகர்க்கப்பட்ட போது அங்கிருந்த இந்தியர்களின் நிலையை கொஞ்சமே கண்ணீருடன் அழுத்தமாய் சொல்லியிருக்கும் படம். படம் முழுவதும் நியூயார்க்கில் எடுக்கப்பட்டிருந்தும் தேவையில்லாமல் நாட்டை வலம் வரும் பாடல் காட்சிகள் இல்லாதது படத்தின் ப்ளஸ். எவ்வித காரணத்தாலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்ற வாதம் ஏற்புக்குடையது. காதலுக்காக கதறும் கடைசிக் காட்சியில் கேட்ரினா அசத்தியிருக்கிறார். விவரிக்க வார்த்தை இல்லையெனினும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் நல்ல படம் பார்த்த முழு திருப்தியில் வெளிவரலாம். படம் பார்த்த யாரும் டோட்டாவை (டோட்டா என்ற வார்த்தையை) மறக்க முடியாது.
(ஜான் ஆப்ரகாமின் குழி விழும் சிரிப்பிற்காக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும் ;) )

**************************************************



இப்போதெல்லாம் எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சலிப்பைத் தரும் நிலையில் சற்றே ரசிக்க வைக்கின்றன விளம்பரங்கள். நடிகைகளை அரைகுறை ஆடையுடனும், இயல்பற்ற நடிப்பிலும் பார்த்து போரடித்த நிலையில் ஹீரோ ஹோண்டாவின் விளம்பரத்தில் வரும் எளிமையான பெண்ணின் காதல் சொல்லும் பார்வை ரொம்பவே இயல்பு. இப்படி ஒரு பெண்ணின் சிரிப்பிற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் வருவார்கள் ஆண்கள்.

எப்போதுமே அனைவரும் ரசிக்கும், மதிக்கும் விளம்பரங்களைத் தருவதில் ஏர்டெல்லுக்கு நிகர் ஏர்டெல் மட்டுமே. முன்பு வந்த இந்தியா, பாகிஸ்தான் குழந்தைகளின் விளம்பரத்தில் ஒரு பட்டம் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது. மாதவன், வித்யா பாலனின் காதல் ரம்மியமாக இருந்தது. அப்பாவின் கையுடன் கயிறு கட்டி பையன் தொலையாமல் காட்டியதில் அப்பாவின் பாசமிருந்தது. ஸைப் அலிகான், கரீனா கபூர் மற்றும் ஷாருக் வந்த போதும் அழகான நட்பு மற்றும் காதலை வெளிப்படுத்தியது. சிறிது நாள் முன் வந்த ஏர்டெல் சிறுவன் ரொம்ப சமர்த்தாக அப்பாவிடம் அம்மாவை கம்ப்ளைன்ட் செய்ததை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களுக்கு குறையாத வகையில் இப்போதைய ஏர்டெல் விளம்பரமும். பையனுக்கு குரல் கொடுக்கும் மக்களைப் பார்த்து பெருமிதப்படும் அப்பாவும், அவர்களுக்காக மகனின் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அப்பாவின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கும் பொறுப்பான மகனையும் பார்க்க பெருமையாய் உள்ளது. (சல்யூட் ஏர்டெல்)

**************************************************

என்னவர் என்னை வேலையை விட்டு விட்டு தொடர் கதை எழுத சொல்கிறார். (!?!!?!!?!!?!!??!!!!!!)
தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எனக்கு முதல் நாள் வந்த கனவு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் கிடையாது. இது எதுவும் பிரச்சனையா? தகவல் தெரிந்தோர் சொல்லுங்கப்பா. (தமிழ் சீரியல்களில் நடிக்க புது முகங்கள் வரவேற்கப்படுகிறார்கள். கதை: அட, என் கனவுகள் தாங்க.)

**************************************************

அப்படி இப்படி என தள்ளிப் போன ப்ராஜெக்ட் விசிட் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. வரும் திங்கள் காலை கோயம்பத்தூருக்குப் பறக்கிறேன். அங்கே வெதர் நன்றாக இருப்பதாக தோழி சொன்னாள். டெல்லி வெக்கையிலிருந்து விடுதலை என நினைக்கும் போதே மனசுக்குள் மழை அடிக்கிறது. (கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)

**************************************************

சீக்கிரமே காதல் கதைகள் எழுதி உங்களையெல்லாம் இம்சிக்கலாம் என நினைக்கிறேன். என் எல்லா மொக்கைகளையும் தாங்கும் நண்பர்கள் இதையும் தாங்குவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வருகிறது அடுத்த பதிவு காதல் கதை - 1. அனைவரும் காதல் கதை எழுதும் போது இந்த கதைகளில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்போருக்கு, இவை அனைத்தும் என் வாழ்க்கையில் நான் பார்த்த என் நண்பர்கள் மற்றும் தோழிகளின் உண்மைக் கதைகள். அவர்களிடம் அனுமதி வாங்கியே எழுதப்படும். (இந்த அறிவிப்பு நீங்கள் தப்பிப்பதற்காக. இதற்கு மேலும் படித்து மாட்டிக் கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது)

**************************************************

கடைசியாக பதிவுலக கிசுகிசு

* அனைவரையும் கலாய்த்து எழுதி வரும் இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மிகத் திகிலுடன் எதிர்கொண்டுள்ளார் இந்த ஜிம்பலக்கா. காரணம் என்னவென்றால் ரொமான்டிக்காக பேச பெண்ணுக்குத் தெரியவில்லையாம். மாப்பிள்ளை எவ்வளவு அழகாகப் பேசினாலும் இவர் அதை விட அழகாய்க் கலாய்த்து நகைச்சுவையாக்கி விடுவதால் அந்த பக்கம் இப்போதைக்கு கப்சிப். (கல்யாணத்துக்கு அப்புறம் ராமனுக்கேத்த சீதையா இருந்து தானே ஆகணும்)

* இன்று மட்டும் ஆறு முறை அழைத்து விட்டார் இந்த யூத் பதிவர். காரணம் என்னவெனில் நடிகையின் பெயர் கொண்ட பெண்ணிடமிருந்து வந்த மெயில் தானாம். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. அந்த எழுத்துக் கடலில் நான் தொபுக்கடீர்னு விழுந்து விட்டேன் என்றெல்லாம் எழுதியதோடு மட்டுமல்லாமல் முடிக்கும் போது 'என்றும் அன்புடன்' என்றிருப்பதால் அந்த "என்றும்" அன்புடனுக்கான அர்த்தம் புரியாமல் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். (சீக்கிரமே அதற்கான அர்த்தம் அறிய வாழ்த்துக்கள்)

Monday, June 15, 2009

மற்றுமோர் பள்ளி, மற்றுமோர் மாணவி, மற்றுமோர் துயரம்


போன வாரம் மும்பை அரசு குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூடாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு விஷயம் இது. வீடுகளிலும் தொழில் துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர்களை தடை செய்த அரசு எப்போதும் இந்த தொலைக்காட்சியின் குழந்தை நட்சத்திரங்களைக் கண்டு கொண்டதில்லை. இப்போது அதுவும் கவனத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நடிப்பின் காரணமாக படிப்பை நிறுத்தும் அவலம் அகலும் என எதிர்பார்ப்போம். (உயர் தட்டு மக்களுக்கு ஒரு சட்டம் வசதியில்லாதோருக்கு ஒரு சட்டம் என்னும் நிலை மாறி வருவது மகிழ்ச்சி)
**************************************************

டெல்லியில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. எப்போதாவது அதைத் தணிக்க லேசான தூறல் இருந்த போதிலும் வெக்கை அதிகம் உள்ளது. போன வருடம் முழுக்க நான் டூரிங்கில் இருந்ததால், டெல்லியின் வெயில் மற்றும் குளிர் காலங்களில் தப்பித்துக் கொண்டேன். இப்போது எனது ப்ரோஜெச்டுகள் முடிந்து விட்ட நிலையில் புது ப்ரொஜெக்டை எதிர்பார்த்துக் காத்துள்ளேன், டெல்லி வெயிலிலிருந்து தப்பிக்க. அடிக்கும் வெயிலைக் குறைக்கும் வகையில் அவர் பெங்களூருக்கு எஸ்கேப். நானும் அடுத்த மாதம் கோவை போகலாமென நினைக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று. (நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை)

**************************************************

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. மணி சங்கர அய்யரின் ஹாட் மெயில் கணக்கை யாரோ ஒரு விஷம ஆசாமி ஹைஜாக் செய்து அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பியிள்ளார். அந்த மெயிலில் உள்ள செய்தி "நான் ஒரு கருத்தரங்கிற்காக இங்கிலாந்து சென்றதை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் எனது கைப்பையைத் தொலைத்து விட்டேன். கையில் பணம் இல்லாத நிலையில் என்னால் நாடு திரும்ப இயலவில்லை. இந்த மெயிலைப் பார்த்தவுடனேயே எனக்கு பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு அவசர பண உதவியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்" இது குறித்து மணி சங்கர அய்யரிடம் கேட்ட போது யாரோ அவரது மெயில் ஐடியின் பாஸ்வோர்டை மாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக இப்பிரச்சனை குறித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தான் இப்போது அமேரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (என்னவோல்லாம் காமெடி நடக்குது உலகத்துல.)

**************************************************

அபியும் நானும் படம் வெளிவந்து பல மாதங்கள் கழித்து போன வாரம் தான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவாகத் தான் படத்தை தந்திருக்கின்றனர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜும். எல்லா கேரக்டர்களும் ஓகே. த்ரிஷா கேரக்டரை இன்னும் அழகுற செதுக்கியிருக்கலாம். படத்தில் பிரகாஷ் ராஜின் அன்பு காட்டப்பட்ட விதத்தை ஒப்பிடும் போது த்ரிஷாவின் அன்பு காட்டிய விதம் கொஞ்சம் நெருடல். இன்னும் கொஞ்சம் அட்டாச் ஆன பெண்ணாக த்ரிஷாவைக் கொடுத்திருக்கலாம். ஏனெனில் பெண்கள் எப்போதும் அப்பாவின் மீது அன்பு மிகுந்தவர்கள். பஞ்சாபிக் கணவன் வந்த போதிலும் வேட்டி கட்டும் அப்பாவே ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ என்பதை அழுத்தி சொல்லியிருக்கலாம். (அனுபவம் பேசுகிறது)

**************************************************

ஒன்றரை மாதத்திற்கு முந்திய செய்தி. இப்போது தான் தெரிந்தது. மூச்சுத் திணறி இறந்த ஆகிரிதி மற்றும் ஏழு செங்கற்களை முதுகில் தாங்கி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த ஷன்னோவை அடுத்து தலைநகரின் அடுத்த கொடுமை பதினைந்து வயது சிறுமி ஜீனத் பர்வீனின் தற்கொலை.
டெல்லியில் உள்ள பச்சான் பிரசாத் சர்வோதய கன்ய வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜீனத். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வகுப்பாசிரியரால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாள். அவள் திருடியது உறுதிப்படுத்தப்படாத செய்தி. வெறும் சந்தேகம் காரணமாகவே நடந்த கொடுமை இது. அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசிரியர் வெளியேற்றி பெற்றோரை அழைத்து வருமாறு சொல்லவே, பெற்றோர் வந்திருக்கின்றனர். அவர்களிடம் ஆசிரியர் ஜீனத் செய்த தவறின் காரணமாக அவளை பள்ளியிலிருந்தே நீக்கப் போவதாகக் கூறி கடும் வார்த்தைகளால் சாடி "இவள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உட்காரவைத்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்" என சொல்லியிருக்கிறார். பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் சில சாமான்கள் வாங்குவதற்காக ஜீனத்தின் அம்மா செல்லவேண்டியிருந்ததால், ஜீனத்தை வீட்டிற்குப் போக சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்த அம்மா ஜீனத் தனது துப்பட்டாவை ஃ பேனில் மாட்டி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்து போன ஜீனத்தின் கண்களை அவர் பெற்றோர் தானம் செய்து மற்றொருவரின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளனர். (வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி உயிர் வாங்கிகளாக இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.)

Friday, April 17, 2009

Chandni Chowk


என்னவரும் நானும் ஒரே ஆபிசில் வேலை செய்கிறோம். காலையும், மாலையும் சேர்ந்து வருவது வழக்கம். போன வாரம் அவர் ஆபிசில் மீட்டிங் முடிந்து ஒன்பது மணிக்கு தான் கிளம்பினார். ஏழு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. கிளம்பி போகலாம் என்றால், இங்கு ஆட்டோகாரன் போகும் விதத்தை நினைத்தாலே, போக பிடிக்காது. ஆட்டோ, மேலும் கீழும் குலுங்கிச் செல்லும். நொய்டா ரோடு அப்படி. வேறு வழியின்றி, எட்டு மணி வரை கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு, காத்திருந்தேன். பசி காதை அடைக்க, கோபம் வந்து விட்டது. பேசாமல் கண்களை மூடி உட்கார்ந்து விட்டேன். அவர் வந்து "Sorry dear, ரொம்ப லேட் ஆகிடுச்சா" ன்னார். வந்த கோபத்தை அப்படியே சிரித்து சமாளித்து, "No Problem, இன்னிக்கு டின்னர் வெளில" என்றேன்.

டெல்லியில் குறைந்தது டின்னருக்கு 500 ரூபாய் செலவாகும். சரி எனக் கிளம்பி, Pizza Hut போகலாம் என்றவரை, Domino's போகலாம் என நான் சொல்ல, Shopprix Mall இல் உள்ள Domino's போனோம். இது வரை அவ்வளவு மோசமான பிட்சாவை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. ஓரங்கள் உலர்ந்து, பார்க்க ஒரு அப்பீலே இல்லாமல் இருந்தது. இருந்த பசியில் ஒன்றும் சொல்லாமல், சாப்பிட்டாச்சு. அறுநூறு ரூபாய் பில் வேறு. வெளியே வந்தவர் என்னைப் பார்த்து, "தன்வி, நல்ல பிட்சா சாப்பிடனும். சீக்கிரமே பிட்சா ஹட் போகலாம்" என்றார். என்ன சொல்ல எனத் தெரியாமல் "ஈ ஈ...." என்றேன். அப்புறம் சொன்னார், "இனிமே ஆபிசிலிருந்து ஏழு மணிக்கே கிளம்பிடலாம். ஒவ்வொரு தடவை லேட் ஆகும் போதும் என்னால இவ்வளவு செலவு பண்ண முடியாது" என்றார். நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆனதில் அநேக குஷி. (சில நேரங்களில் விவேகம் முக்கியம். விக்கி, புரிஞ்சிக்கிட்ட) **************************************************

இப்போதெல்லாம் ஆபிசில் வேலை பார்க்கவே பிடிக்கவில்லை. எப்போதும் ஏதாவது ப்ளாக்களை மேய்ந்து கொண்டோ அல்லது சமையல் ரெசிபிகளை தேடியோ பொழுதைக் களிக்கிறேன். இப்படியாக படித்த ரெசிபிகளைக் கொண்டு போன வாரம் முழுக்க சமைக்க, என்னவருக்கு பயங்கர சந்தோசம். "இவ்ளோ நாள் இந்த திறமை எல்லாம் எங்க போச்சு" எனப் புகழும் அளவுக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தும் நண்பர் சத்யாவிடம் இதை சொல்லிக் கொண்டிருந்த பொழுது சொன்னார், " The main ingredient of food is love" இது தான் அவர் ரெஸ்டாரண்டின் தாரக மந்திரமாம். நல்ல விஷயம் தான். இது போல் எல்லோரும் நினைத்தால், கஸ்டமர்ஸ் பெருகுவார்கள். (இப்படியே சொல்லிகிட்டே சாப்பாடுல வேண்டியதை போட மறந்துடாதீங்க மக்கா)
**************************************************




ரெண்டு வாரம் முன்னாடி, சாந்தினி சோக் ஷாப்பிங் போயிருந்தோம். நொய்டாவிலிருந்து டூ வீலரில் அரை மணி நேரத்தில் ரெட் போர்ட் போயாச்சு. அங்கே இருந்து அரை கிலோமீட்டர் இருக்கும் மார்க்கெட் போக ஒரு மணி நேரம் முழுதாய் ஆனது. அவ்வளவு டிராபிக் ஜாம். வார நாள், விடுமுறை நாள் என பாராபட்சமின்றி எல்லா நாளும் கூட்டம் இருக்கும் இடம் சாந்தினி சோக். எனக்குத் தெரிந்து இந்தியாவின் மிகப் பெரிய ஹோல் சேல் மார்க்கெட். அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. அங்கு ஷாப்பிங் செல்ல ஒரு முழு நாள் வேண்டும். டெல்லி மார்கெட்களில் சாந்தினி சோக் என்னுடைய ஒன் ஆப் த பேவரிட்ஸ். ஒரு சமோசா, ஒரு கச்சோரி, ஒரு கிளாஸ் ரப்டி பலூடா, முடிந்தது லஞ்ச். முடித்து விட்டு, ஷாப்பிங் ஆரம்பித்தோம். எட்டு சல்வார் மட்டீரியல். ஒரு மின்ட் பிளாங்கெட், ரெண்டு ஸ்டோல் என சூப்பெர் ஷாப்பிங். நீங்க எப்போ டெல்லி வந்தாலும் சாந்தினி சோக் ஷாப்பிங் மிஸ் பண்ணிடாதீங்க. (ரெட் போர்ட் பார்த்திட்டு, அப்படியே ஷாப்பிங் போயிட்டு வர ஒரு நாள் வேணும்)
**************************************************
எல்லா இடத்திலேயும் எலெக்ஷன் பத்தி பேச்சு. காலைல நியூஸ் பேப்பெர்ல எலெக்ஷன் பத்தி செய்தி. வெளில போனா பெரிய பெரிய கட் அவுட், போஸ்டர்ல அத்வானி சிரிக்குறாரு. டிவில பிரச்சாரம். எப்போ தான் இது முடியுமோன்னு இருக்கு. இந்த அத்வானி, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா, ஷீலா தீக்ஷித் இன்னும் பல கிளடுங்கல்லாம் எப்போ தான் ரிட்டயர்ட் வாங்கிப் போவாங்களோ. இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம இவங்க தொல்லையெல்லாம் தாங்கி ஆகணுமோ. யாராவது இளைஞர்கள் முன்னால வந்தா, கொஞ்சம் நல்லா இருக்கும். சினிமால காமிக்குற ஹீரோ மாதிரி, நிஜத்துல யார் வரப் போறா. இப்படியே நாம காலம் காலத்துக்கும் புலம்ப வேண்டியது தான். (இந்திய சினிமா பார்த்து ரொம்ப தான் கேட்டுப் போய்ட்டேனோ)
**************************************************


போன வாரம் மட்டும் நாலு சினிமா பார்த்தாச்சு. Diamonds are forever, Forrest Gump, Just My Luck and Hancock. இதுல Diamonds are forever பத்தி நான் எதுவும் சொல்ல வேணாம். 70 களில் வந்த James Bond படம். சூப்பர்.

Forrest Gump - பிதாமகன் விக்ரம் நடிப்பை மிஞ்சிட்டார், Tom Hanks. ச்சே, என்ன கதை, என்ன நடிப்பு. பிரமாதம். 3 Golden Globe Awards உம், 6 Academic Awards (OSCAR) உம் வாங்கிருக்குற படம். கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

Just my luck - Okay kind of a movie. எப்போதும் குட் லக் உடைய ஹீரோயினும், பேட் லக்குடைய ஹீரோவும் முதல் முத்தத்தில் தங்கள் லக் மாற, தொடர்ந்து தங்கள் லக்கைத் தக்க வைக்க என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை. பார்க்கலாம்.

Hancock - 2008 இல் வெளிவந்த Will Smith படம். கேனைத்தனமான படம். இதைத் தவிர இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. (படம் பார்க்க நேரமே இல்லை என்றாலும் எப்படியாவது வாரத்திற்கு குறைந்தது மூன்று படங்கள் பார்த்து விடும் கப்பிள் நாங்கள்)

Saturday, April 4, 2009

DASVIDANIYA - The Best Goodbye Ever!



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த பீலிங். கதாநாயகன், கதாநாயகி, டூயட் சாங், பைட் இப்படி எந்த மசாலாவும் இல்லாம ஒரு மனுஷனோட ஆசைகளை, இன்னும் மூனே மாசத்துல சாகப்போற மனுஷனோட ஆசைகளை சொல்லிருக்குற படம், DASVIDANIYA.



மும்பையில் வாழும் ஒரு சராசரி மனிதன் AMAR KAUL (VINAY PATHAK). நல்ல ஹீரோ தேர்வு. மும்பையில் வாழும் பல லட்சம் சராசரி மனிதர்களைப் போல் வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் அமருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. எப்போதும் தன்னிடம் ஒரு "To do list" ஐ வைத்துக் கொண்டு தன் வேலைகளை சரி வர செய்கிறார், தன்னைப் பற்றியோ, தன் வாழ்க்கையைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லாமல்.


அவருக்கு வயிற்று வலி வரவே, மருத்துவமனைக்கு செல்வதற்காக பாஸிடம் பெர்மிஷன் கேட்க செல்கிறார். அப்போது அவரிடம் சில பைல்களை குடுத்து முடித்து மறுநாள் கொண்டு வருமாறு பாஸ் சொல்கிறார். மருத்துவமனையில் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களே அவரின் வாழ்நாள் எனவும் மருத்துவர் கூறவே, என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வருகிறார்.



இந்த மூன்று மாதங்களில் தனக்காக வாழ்வது, தன் ஆசைகளை பூர்த்தி செய்வது என முடிவெடுத்து, அதற்கென ஒரு "To do list" ஐத் தயாரிக்கிறார் 37 வயதான அமர்.



1. New Car
2. Foreign trip
3. Neha
4. Guitar
5. Boss of boss
6. Mumma
7. Rajiv Jhula
8. Love
9. Gaurav
10. Photo on Newspaper
இது தான் அவரின் கடைசி To do List.



இந்த லிஸ்டை அமர் எப்படி பூர்த்தி செய்தார், பத்துக்கு பத்து வாங்கினாரா என்பது தான் கதை.



ஒவ்வொரு இடத்திலும் அவர் படும் மன வேதனையைப் பார்க்கும் போது, இதுக்கே இவர் செத்தே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கார் வாங்கும் போது தவணையை மூன்று மாதமாக குறைக்க சொல்லி கேட்கும் போதும், கிடார் மாஸ்டரிடம் ஏழு மாத க்லாஸ்ஸைக் குறைக்கச் சொல்லிக் கேட்கும் போதும், வெளிநாட்டில் பெண்களிடம் அடி வாங்கி, தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், நேஹாவிடம் காதலை வெளிப்படுத்தும் போதும் நமக்கு மனதிற்கு கஷ்டமாக உள்ளது.



நேஹாவிடம் காதலைச் சொல்லும் அந்த ஒரு சீனிற்காகவே படம் பார்க்கலாம். நல்ல நடிப்பு, போரடிக்காத திரைக்கதை, மூன்றே பாடல்கள், அழுகையில்லாத சோகம் இவற்றிற்காக படம் பார்க்கலாம். மற்றபடி, மிக சாதாரணமான படம். சொல்லிக் கொள்ளும் அளவு பிரம்மாண்டம் எதுவும் இல்லை.



படம் முடியும் போது, ஒருவேளை நமது வாழ்நாளும் நமக்கு தெரியுமானால், நாம் செய்ய விரும்பும் கடைசிக் காரியங்கள் எவையாக இருக்கும் என்னும் கேள்வி மனதில் எழுகிறது. DASVIDANIYA - The Best Goodbye Ever!



நீங்கள் இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருப்பீர்களானால், நீங்கள் செய்ய விரும்புபவை எவையாக இருக்குமென பின்னூட்டமிடுங்களேன்.