உனக்கான நேரமே இல்லாமல்
தினசரிகளில் தொலைந்து
சோர்ந்திருக்கும் நேரம்
உன் பெயர் கேட்டதும்
அகமலர்ந்து
கண்கள் அகல விரிய
உன் பிடித்தமான
தெற்றுப் பல் தெரிய
இதழ் விரித்து சிரிக்கையில்
இருக்கும் மகிழ்ச்சி தான்
இந்த உறவுக்கான
தனித்தன்மை
♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥
பெருமழை நாளிலோ
சிறு தூரல் போதிலோ
இதழ் தொடும்
தேனீர் வெம்மை
உன்னை
நினைவுபடுத்தும்
♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥
பேரன்பு
பெருங்கடலென்றெல்லாம்
ஏதேதோ
விளங்கா மொழி பேசுகிறாய்.
பிரியும் நொடியின்
ஒற்றைக் கண்ணீர்த்துளி தான்
உனக்கான என் காதல்
♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥
காதல் பெண்ணின்
மொழி
காதலன் மேல் கொண்ட
காமத்தின்
வேட்கை மிச்சம்
♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥
எழுத ஆயத்தமாகி
யாருமில்லா தனிமை தேடி
உனை நினைத்து நினைத்து
உருகி மருகிக்
கவிதையாக்கினேன்.
சிறப்பாயில்லை -
எல்லாம் கிழித்தெறிந்து
போனேன்.
ஒரு துயில் காலைப் பொழுதில்
பனி கொட்டும் மார்கழியில்
உன் நினைவு புணர
கருவாகிப்
பிரசவிக்கின்றது
என் கவிதைக் குழந்தை
♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥
உனக்கான தீ
தகிக்கிறது.
அதன் பொறியோ
சிறு வெளிச்சமோ
தெரியாமலிருக்கலாம்
ஆனால்
அதன் ஆதாரக் கனல்
அடியாழத்தில்
கனன்று கொண்டேதானிருக்கிறது