பொழுது போக்கு படங்களுக்கு பாலிவுட்டில் பெயர் போனவர் அக்ஷய் குமார். அவரின் கேனைத் தனமான நடிப்பும், குரலும் அவ்வளவு பிரபலம். இந்த கோடையில் அக்ஷய் குமார் அளித்திருக்கும் விருந்து HOUSE FULL.
அக்ஷய் குமார், தீபிகா படுகோன், ரிதேஷ் தேஷ்முக், லாரா தத்தா, அர்ஜூன் ராம்பால் என நல்ல கூட்டணி. சஜித் கான் இயக்கம். ரொம்ப நாளாய் எந்த நல்ல படமும் வராமல் எதிர்பார்த்துக் காத்திருந்து போன படம். ஆனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
ஆருஷ் (அக்ஷய் குமார்) துரதிருஷ்டங்கள் நிறைந்த இளைஞர். அவருக்கு அதிர்ஷ்டம் வர வேண்டுமெனில் அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். முதலில் அவர் ஒரு பெண்ணைக் காதலிக்க அந்தப் பெண்ணின் அண்ணனிடம் அடி வாங்கி “லூஸர்” ஆகிறார். அடுத்ததாக நண்பன் பாபை (ரிதேஷ்) தேடி அவர் வீட்டிற்கு வருகிறார். அவரின் மனைவி ஹேத்தல் (லாரா தத்தா). இருவரும் எந்நேரமும் ரொமான்ஸில் இருக்கும் காதல் தம்பதி. இவர்களிருவரும் சேர்ந்து ஆருஷிற்கு தங்கள் முதலாளியின் மகள் ஜியா கானைத் திருமணம் செய்து வைக்கின்றன்ர். திருமணம் முடிந்து இடாலியில் தேனிலவுக்கு செல்லும் ஆருஷிற்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி. ஜியா கானிற்கு வேறொருவருடன் காதல் இருப்பதாகவும், அதற்கு அவள் அப்பாவின் எதிர்ப்பை சமாளித்து, அவரின் சொத்தைப் பெறவே ஆருஷைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூற விரக்தியில் கடலில் விழுகிறான் ஆருஷ்.
ஆருஷைக் காக்கும் அழகு தேவதை சேண்டி (தீபிகா படுகோன்). உடனே அவள் மீது காதலில் விழுகிறான் ஆருஷ். இவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் ஆகுரி பாஸ்தா. “மம்ம மீயா” என்ற வசனத்தால் சில சமயம் சிரிப்பையும், பல சமயம் வெறுப்பையும் வர வைக்கிறார். அவன் சேண்டியிடம் ஆருஷின் மனைவி இறந்து விட்டதாகக் கூற ஆருஷின் மீது பரிதாபமும் தொடர்ந்து காரணமே இல்லாத காதலும் வருகிறது சேண்டிக்கு. இதனிடையே ஜியாகான்-ஆருஷின் திருமண உடைப்பை அறிந்து அங்கு வருகிறது பாப்-ஹேத்தல் ஜோடி.
இந்நால்வர் கூட்டணியும் சேர்ந்திருக்கும் நேரம் ஆரம்பமாகிறது அனைத்துக் குழப்பங்களும். ஹேத்தலின் காதலினால் கோபத்திலிருக்கும் அவள் அப்பாவை சமாதனப்படுத்த ஹேத்தல் தனக்குக் குழந்தை இருப்பதாகப் பொய் சொல்ல, உடனே கிளம்பி லண்டன் வருகிறார். இதனிடையே சேண்டியின் காதலான ஆருஷைப் பார்க்கவும், அலுவ வேலையின் காரணமாகவும் லண்டன் வருகிறார் இந்திய ராணுவ தலைமைப் பொறுப்பிலிருக்கும் சேண்டியின் அண்ணா. ஹேத்தல் அப்பாவுடன் இணைவதற்காக தான் வசதியாக இருப்பதாக சொல்லவும், சேண்டி தன் காதலன் மிகப் பெரிய பணக்காரன் எனத் தன் அண்ணனிடம் காட்டவும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கின்றனர். அங்கு ஏற்படும் குழப்பத்தில் ஜோடி மாறி ஹேத்தல்-ஆருஷ் கணவன் மனைவி எனவும், பாப் சமையல்காரனாகவும், சேண்டி குழந்தையைப் பார்க்கும் ஆயாவாகவும், குழந்தை ஒரு ஆப்பிரிக்கக் குழந்தையாகவும் என ஏகப்பட்ட குழப்பங்கள்.
சேண்டியின் அண்ணா வருகையின் போது மறுபடியும் ஜோடி மாறி சொதப்புகிறது. இதைத் தொடர்ந்து படம் முழுக்க சொதப்பல். நிஜமாகவே 150 ரூபாய் டிக்கெட்டுக்கு செலவளித்திருக்க வேண்டாம். உட்கார முடியவில்லை திரையரங்கில். “முடிங்கடா போதும்”ன்னு சொல்ல வெச்சுட்டாங்க.
ஆகுரி பாஸ்தாவின் ஹிந்தி, லாராதத்தாவின் அலட்டல் வாயசைக்கும் கோணல்கள், ரிதேஷின் ஓவர் ஆக்டிங் என ஒவ்வொன்றும் நம்மைத் “தியேட்டரை விட்டு எழுந்து போங்கள்” என சொல்லும்படி இருந்தது. படத்தின் ஒரே ஆறுதல் தீபிகா. வசீகரப் புன்னகையாலும், முகம் சுளிக்க வைக்காத நடிப்பாலும், நடன அசைவுகளாலும் கொஞ்சம் நம்மைக் காப்பாற்றினார். லாரா தத்தா டான்ஸுன்னா என்னன்னு கேக்கும் போல.
நம்மூரில் 10 வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் - பிரபுதேவா நடித்து வந்த “காதலா காதலா” படத்தின் ஹிந்தி ரீமேக். பாலிவுட் என்பதால் அதற்கான ஆடம்பரங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் கூடவே குழப்பங்களுக்கும் குறைவில்லை. படம் முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கனடா, லண்டன், இடாலி என ஹெவி பட்ஜெட் படம். உடையைப் பற்றி சொல்லவே வேண்டாம். போட்டிருந்தால் தானே சொல்ல. நிச்சயம் பசங்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
ஷங்கர் மஹாதேவனின் இசையிலும், குரலிலும் பாடல்கள் ஓரளவு திருப்தி. பாடலில் வரும் இடங்களும் வாவ் ரகம். அசத்தலான ஒளிப்பதிவு. ஃப்ரீ டி.வி.டி கிடைத்தாலும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக தலைவலிக்கு உத்தரவாதம் தரும் படம்.
இவ்வளவு செலவு செய்து பல விஷயங்களுக்கு மெனக்கெட்டிருப்பவர்கள் கொஞ்சம் கதைக்கும் மெனக்கெட்டிருக்கலாம். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்து அப்படியே தமிழ்க் கதையை ரீமேக்கியிருந்தால் பெட்டராக வந்திருக்கும்.
ஹவுஸ் ஃபுல் - ஒரு காட்சியில் கூட இல்லை எனத் திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம்.





