Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts

Wednesday, September 22, 2010

நண்பேன்டா!


அரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.

இவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.

இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.

இவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்!)

பேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”
“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.

எல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.

இவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.

நடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.

கார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.

ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.

Wednesday, July 7, 2010

கும்மலாம் வாங்க

தராசு - இவரின் வலைத்தளத்தின் பெயரைப் போலவே அதிலுள்ள விஷயங்களும் சரியானதாகவே இருக்கும். எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் முழு ஈடுபாடோடும், அதைப் பற்றிய ஆழ்ந்த அறிதலோடும் இவர் எழுதுவது எனக்கு மிகுந்த ஆச்சரியம்.

கொங்கு மண்ணில் பிறந்து, சென்னையில் கண்ணாலம் கட்டிக்கிட்டு, மத்தியப் பிரதேசத்தில் ஆணி பிடுங்கிட்டு இருக்கும் இவரின் நிஜப் பெயர் கொஞ்ச பேருக்குத் தான் தெரியும். இந்த பெஞ்சமின் பொன்னைய்யா வட்டார வழக்குப் பதிவுகளாகட்டும், ஜூகல் பந்தியில் தகவல்களைக் கொட்டுவதாகட்டும், வீட்டு அம்மணியைக் கலாய்ப்பதாகட்டும், விளையாட்டுப் பற்றிய பதிவுகளாகட்டும் ஒரு ரவுண்டு பின்னி விடுகிறார்.

மெல்லிய புன்னகையையும் கூடவே கொஞ்சம் யோசனையையும் தர வைக்கும் இவரது “ங்கொய்யால பக்கங்கள்” என் ஃபேவரிட். விவரங்கள் தெரிந்த மனிதன், நாகரீகமான நண்பன், அன்பான கணவன், அனுசரணையான மகன், தோழமையான தகப்பன் என எல்லா முகங்களிலும் தன்னை சிறப்பாக நிரூபித்துள்ள இவரை இன்னிக்கு எல்லாரும் கும்மு கும்முன்னு கும்மலாம். ஏன்னா நாற்பத்தி... சரி அது வேண்டாம், கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி தல இன்னிக்குத் தான் பொறந்தாராம். மேட்டர் அவ்ளோ தான்.

அவருக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி, அவர் மனம் நிறையக் கும்மும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெஞ்சு, பில்டப்பு போதும்ல. ஸ்டார்ட் ம்யூசிக்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்.

Friday, May 14, 2010

என் உள்ளம் கவர் கள்வனுக்கு...

கல்லூரிப் படிப்பு முடிந்து வேலை கிடைத்து விட்டது. என் முதல் வேலை, அதுவும் கல்லூரியிலேயே வந்து செலக்ட் செய்து கொண்டு போன வேலை. நிறைய உற்சாகத்துடனும் கொஞ்சம் பதற்றத்துடனும் ஆரம்பித்தேன். கோவை எனும் அழகிய சொர்க்க நகரத்தில் வேலை பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது, அதுவும் தேவையை விட அதிகமாய் சம்பளமும் கொடுத்து. வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்தில் என் பாஸ் என்னிடம் சொன்னார் “விக்னேஷ்வரி, ஹெட் ஆஃபிஸ்ல இருந்து இங்கே ஒருத்தர் ப்ராஜெக்ட்டுக்காக வர்றார். அவருக்குத் தமிழ் தெரியது. நீதான் அஸிஸ்ட் பண்ணனும். ஆஃபிஸ் வேலை முடிஞ்சதும் சாயங்கால நேரங்களில் உனக்கு ட்ரெய்னிங் இருக்கும். குட் லக் ஃபார் த ஆன் ஜாப் ட்ரெய்னிங்”
“சரி சார் அவர் பேர்”
“யோகேஷ்”
“லோகேஷ்?”
“இல்ல, யோகேஷ். யோகேஷ் கண்ணா”
பெயர் மறந்து விடாமலிருக்க கையிலிருந்த நோட்டின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டேன்

ஹெட் ஆஃபிஸிலிருந்து வந்திருக்கும் ட்ரெய்னரைப் பார்க்கப் போகிறேன். எப்படிப் பேசுவார். அவர் எம்.டெக்காம். கொஞ்சம் ஹை ப்ரோஃபைல். பழகுவது கடினம் தான். எப்படிப் பேசப் போகிறேன். என் ஆங்கிலம் அவ்வளவு தேறியதா.. எப்படி என் கம்பெனியில் என்னை அவருக்கு அசிஸ்டெண்ட்டாகவும், ட்ரான்ஸ்லேட்டராகவும் நியமித்தார்கள். வந்தவர் ஏன் என் ட்ரெய்னிங் விட்டு விட்டு அவர் வேலைக்கு உதவிக்கழைக்கிறார். இப்படியே யோசித்துக் கொண்டிருந்த போது பெருந்துறை வந்து விட்டது.

ஆஃபீஸுக்குள் நுழைந்து “லோகேஷ்.. ஸாரி யோகேஷ் ஃப்ரம் நியூடெல்லி?” என்றேன்.
“ஓ, யூ ஆர் ஃப்ரம் ஹிஸ் கம்பெனி... வெல்கம்” என மரியாதையுடன் அழைத்துப் பெட்டியை கெஸ்ட் ஹவுஸில் வைக்கும் படி அங்கிருந்தவரை சொல்லிவிட்டு என்னைக் கம்பெனிக்குள் அழைத்து சென்றார் மேனேஜர்.
“ஹீ இஸ் யோகேஷ்” சொல்லிவிட்டு மேனேஜர் சென்று விட்டார்.
“ஹாய் யோகேஷ். திஸ் இஸ் விக்னேஷ்வரி” கையை நீட்டினேன். “ஹாய்” என ஒரு அசட்டைப் பார்வையுடன் கை குலுக்கி விட்டு வேலையைப் பார்க்கப் போய் விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐ.டி. டீம் முழுக்க உட்கார்ந்து கொண்டு சர்வர், இன்ஸ்டலேஷன், டேடாபேஸ், ப்ரொக்ராமிங் என என்னென்னவோ பேசிக் கொண்டிருக்க, நான் “ஙே” என மிரட்சியுடன் முழித்துக் கொண்டிருந்தேன்.

மாலை இருவரும் ஒன்றாக கெஸ்ட் ஹவுஸ் திரும்பினோம். இருவருக்கும் எதிரெதிர் ஃப்ளாட்டுகள். ஒவ்வொரு ஃப்ளாட்டும் 2BHK. மணி 8. நன்றாகவே இருட்டியிருந்தது. என் ஃப்ளாட்டைத் திறக்காமல் அவருடன் போய் நின்று கொண்டு, “வில் யூ ப்ளீஸ் கம் வித் மீ” என்றேன்.
ஒரு வித்தியாசப் பார்வையோடு “வாட்” என்றார்.
“ஐ ஆம் ஸ்கேர்ட் ஆஃப் டார்க்னெஸ். வில் யூ ப்ளீஸ்....”
“வொய்?”
“ப்ளீஸ்”
“வாட் இஸ் யுவர் ப்ராப்ளம். ஃபார் வாட் டு யூ கால் மீ?” என்றார் இன்னும் கடுமையாக.
கொஞ்சம் எரிச்சலுடனும் நிறைய பயத்துடனும் வழக்கம் போல் அதே அசட்டு சிரிப்புடனும் “ச்சும்மா” என்றேன்.
நொடியில் மாறிய அவர் முகம் கேவலமாய் “வாட்....?”டை உதிர்த்தன இதழ்கள்.
மிகுந்த கோபத்தில் “நத்திங்” என் என் ஃப்ளாட்டிற்குள் நடுங்கிக் கொண்டே நுழைந்து லைட்டைத் தேடிப் போட்டு சமாளித்து விட்டேன்.

“என்ன ஆளு இவர். ஹாய் சொல்லிக் கை குடுத்தா தலையெழுத்தேன்னு கை குடுக்குறார். ஆஃபிஸ்ல முழு நேரமும் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். நம்மை ஒரு முறை கூட மதிச்சுப் பார்த்ததா தெரியல. வந்து கதவைத் திறக்கத் துணைக்கழைத்தால் கத்துகிறார். சே, சரி ஆள் கிட்ட மாட்டிக்கிட்டோம். 15 நாள் எப்படி போகப் போகுது” எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த போது மொபைலில் அழைத்தார்.
“ஃபினிஷ் யுவர் டின்னர் அண்ட் கம் டு த காமன் ட்ராயிங் ஹால் ஃபார் ட்ரெய்னிங் அட் 9” என சொல்லி என் பதிலை எதிர்பார்க்காது ஃபோனை வைத்து விட்டார். கிர்ரென்றது.

அன்றிலிருந்து தினமும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை. அதே ட்ராயிங் ஹால். அதே ட்ரெய்னிங். தூக்கம் சொக்கும் எனக்கு. அவரோ ரொம்ப சீரியஸான ப்ரசெண்டேஷன்களை விளக்கிக் கொண்டிருப்பார். வெளியில் எங்கள் ஹாலைக் கடந்து வாக்கிங் போபவர்கள் ஒரு பாவப் பார்வையுடன் என்னைப் பார்த்து செல்வார்கள். மறுநாள் காலை ஆஃபிஸிலும் ஒரு நிமிட இடைவெளியில்லாது வேலை செய்வார். எனக்கும் டன்னளவு வேலை கொடுப்பார். அவருடன் ஃபாக்டரி முழுக்க சுற்றினேன். இவருக்கும், லேபர்மென்னுக்கும் ட்ரான்ஸ்லேட்டராய் இருந்தேன். இரண்டு நாட்களில் அவர் உழைப்பு பார்த்த பின் ஒரு மரியாதை வந்தது. அடுத்த வாரத்திலிருந்து நானும் சீரியஸாய் வேலை செய்ய ஆரம்பித்தேன். அவருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. பல இரவுகள் 2,3 மணி வரை ஃபாக்டரியில் அவர், ஃபாக்டரி மேனேஜர், யூஸர்ஸ், நான் என வேலை செய்திருக்கிறோம். இதனால் எங்களை மனசுக்குள்ளேயே திட்டிக் கொண்ட யூஸர்ஸ் அதிகம். இருவரும் சேர்ந்து பகலிரவு பாராமல் வேலையை முடித்தோம்.

அவர் கிளம்பினார். டெல்லி சென்று சேர்ந்தவரை அழைத்தேன். “ரீச்ட் சேஃப்லி?” என்றேன். “ம்....” என்றார். அவருக்கு விமானப் பயணம் வாரத்திற்கொரு முறை. எனக்கோ இவ்வளவு தூரம் சென்றாரே, பத்திரமாக சென்றாரா என்ற விசாரிப்பு. அவ்வளவு தான். மறுபடியும் ப்ராஜெக்ட், வேலை, என் டெல்லி பயணம், மறுபடியும் ஹெட் ஆஃபிஸில் இவரிடமிருந்து ட்ரெய்னிங் எனத் தொடர்ந்தது. யாரையும் தெரியாத டெல்லியில் எங்கோ ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அலுவலகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஹோட்டல். ஹிந்தியில் “மே ஹிந்தி நஹின் மாலும் ஹை” என்ற தப்பான ஒரு வாக்கியம் தவிர வேறெதுவும் தெரியாது. அவர் தான் தினமும் பிக்கப், ட்ராப். வாரயிறுதிகளில் டெல்லியைக் காண்பித்தார்.

ஒரு வருடத்தில் டெல்லிக்கே ட்ரான்ஸ்ஃபரும் ஆனது. இப்போது டெல்லி போக பயமில்லை. அவரிருக்கும் தைரியம். நல்ல நண்பராகிப் போனார். அதன் பின் ஒரு நாள் சொன்னார் அவர் புரிந்து கொண்ட முதல் நாள் மாலையின் “ச்சும்மா”வை. ஹிந்தியில் “ச்சும்மா” என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். எங்கும் சொல்லி அடி வாங்கி வைக்காதீர்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவர் கெட்ட நேரம் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. சரியா தவறா, ஒத்து வருமா வராதா, வீட்டை எப்படி சமாளிக்க, சம்மதிக்க வைக்க என்றெண்ணியே காதல் நாட்கள் கழிந்தன. எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே ஆளாய் எதிர்த்து நின்று எல்லாரின் சம்மதத்தையும் பெற்று கோலாகலமாக என்னைக் கைப்பிடித்தார்.

அவரின் உழைப்பு, உண்மை, அன்பு, காதல், பொறுப்பு, அக்கறை எல்லாவற்றிலும் சுகமாகவே கழிகின்றன நாட்கள். இதே சுகம் வாழ்நாள் முழுக்க வேண்டும். Happy Birthday Yogi. I love you.

Thursday, May 13, 2010

சிமிழ் திறந்து சீர் பெருக...

“இவன் என் நண்பன்” எனச் சொல்லுவதில் ஒரு கர்வமுண்டு தானே. அந்தக் கர்வம் உண்டு இவரிடம் எனக்கு. நான் மிகவும் மதிக்கும் நபர்களில் / நண்பர்களில் இவர் முக்கியமானவர்.

தனியே நடக்க ஆசைப்பட்டு, விழுந்து அழும் குழந்தை தேடும் தாயின் கரம், இவரது நட்பெனக்கு. நான் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர். இவருடனான அரிதான தொலைபேசி உரையாடல்களும் ஏதாவதொரு கோபமின்றி, ஒரு எரிச்சலின்றி முடிந்ததில்லை. ஏனெனில் அவ்வளவு வித்தியாசக் கருத்துடையவர்கள் நாங்கள்.

இவரின் சாதாரண நடையிலான எழுத்து, அவரின் எழுத்துகளுடன் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தியது. பலருக்கும் எழுத இவர் கொடுத்த ஊக்கம் கண்டு பொறாமையில்லாத இவர் குணத்தை வியந்திருக்கிறேன். ஒரு ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் இவர் எழுத்துகளைத் தொடர்ந்ததாலேயே இவருக்கு மெயிலனுப்பவோ, சாட்டிப் பேசவோ ஒரு போதும் தோன்றவில்லை.

முதல் முறை இவரை சந்தித்த போது ரொம்ப இயல்பாகவே பேசினார். “பிரபலம்” என்ற பிம்பத்தை உடைத்தார். தொடர்ந்து என் வேலை, அதிலுள்ள விஷயங்கள் பற்றிப் பேசினார். எளிமையான, இயல்பான பேச்சிற்கு சொந்தக்காரர். இசை ரசிகன். நல்ல கலைஞன். ஆணவம், போலித்தனம், பொறாமை இல்லாதவர்.

முதல் சந்திப்பிற்குப் பின் பேச இருவருக்கும் நேரம் அமையவில்லை. ஒரு முறை ஒரு உதவிக்காகப் பேசினேன். எதிர்பார்த்ததை விட அதிகம் உதவினார், எந்த எதிர்பார்ப்புமின்றி. மகிழ்ச்சியாய் இருந்தது. பல நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தார். சிந்தை தெளிவுற உதவினார். அதன் பிறகு மறுபடியும் வேலைகள், வீடு... இருவரும் பேச முடியவில்லை.

அவரின் முதல் உதவிக்குப் பின், எப்போது என்னவொரு கஷ்டம் / குழப்பம் வந்தாலும் அழைப்பது அவரைத் தான். தெளிவாக “நீ செய்வது தவறு” என சொல்ல எப்போதும் தயங்காதவர். பெரும்பாலும் பிஸியாக இருந்தாலும் தேவையான நேரங்களில் தோள் கொடுக்கத் தவறியதில்லை. வேண்டும் நேரங்களில் தவறாமல் நட்பு அங்கிருக்கும் என அறிந்தேன் இவர் மூலம்.

கொஞ்சம் முற்போக்கு சிந்தனையாளர். ரொம்பவே கோபப்படுபவர் (நான் தான் கோபப்படுத்துறேனான்னு தெரில). கோபத்தை வார்த்தையிலும் வீசத் தெரிந்தவர். கொஞ்ச நேரத்திலேயே அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்பார். குடும்பத்தை நேசிப்பவர். மனைவியை சுவாசிப்பவர். நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம்.

நண்பனெனில் குறைகளும் உண்டு தானே. அனைவருக்கும் நல்லவர். ரொம்ப நல்லவர். எல்லாரையும் நம்புபவர். யாருக்கும் எந்த உதவியும் செய்யக் கூடியவர். “இப்படியெல்லாம் இருந்தா உங்களை ஏமாளின்னு சொல்லுவாங்க. வேண்டாம்ப்பா” என்றால் ஒரு சிரிப்பைப் பதிலாய் உதிர்ப்பவர்.

கொஞ்சம் டென்ஷனைக் குறைச்சுக்கோங்க நண்பா. ஆஃபிஸ் வேலைகள் அதிகம் தான். ஆனா வாழ்க்கையை விட்டுடாதீங்க. கொஞ்சமாவது வாழுங்கள். இயந்திரம் போல் ஓடாதீங்க. இன்னிக்கு ஜாலியா அம்மணியையும், குட்டீஸையும் கூட்டிட்டு ஜமாய்ங்க. பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் என் நண்பனாயிருக்க வேண்டுகோளும்.

(கிருஷ்ண குமார் என்ற பரிசல்காரனுக்கு.)

Friday, February 19, 2010

குழந்தையின் வாழ்த்து

சிகரங்களில் கூடு கட்டும்
பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து
தெரியும் பூமியில்
நீர்க் கிழித்து எழுந்து மறையும்
டால்ஃபின் கண்ணில் தெரியும் ஆகாயமாய்
அர்த்தம் தெறித்து மறையும்
கவிதைகள் கண்ணாமூச்சி

துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்
காட்டு நதியில்
நீர் குடிக்கும் மான்களின் மௌனம்
சலனமுறுகிறது
நிழல் இருக்கும் மரத்தின்
ஒரு முதிர்ந்த இலையுதிர்வில்

பெரும் பாலையின்
பறவைகள், மிருகங்கள்
கால் வலி கடக்கும்
மணல் சூரையின் உஷ்ணம் சொற்கள் இருந்தாலும்
ஒட்டகத்தின் வயிற்றில் எப்போதுமிருக்கும்
நீர்மை அன்பு
காகித மிருகத்தின்
கண்களில் ஒலிக்கும் பசி
கால்களுக்களிக்கும் பிடிவாத ஓட்டத்தின்
சுவடுகளின் அழுத்தம்
செலுத்திக் கொண்டிருக்கிறது
உன்னையும் உன் கவிதையையும்

இருவிரல் பற்றிக் கடித்த ஆப்பிளாய்
பூமியின் உள்ளும் புறமும்
கிளை மற்றும் வேர் விரித்து
கவிதை மனத் தாவரம்

கோபுர நிழலை
மிதிக்கத் தயங்கும்
குழந்தையின் கால்கள் வார்த்தைகளாக
வாழ்த்தித் தொடர்கிறேன்
இந்த நாளை

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(உங்களைப் போல் எழுதி உங்களை வாழ்த்த விரும்பினாலும், உங்களளவுக்கு இல்லை தான். புழக்கடைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பா.)

(திரு. நேசமித்திரன் அவர்களுக்கு.)