Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Monday, June 1, 2009

செல்வேந்திரன்.


நேற்று செல்வேந்திரனை நீயா நானாவில் பார்க்க நேர்ந்த போது மிகுந்த மகிழ்ச்சி. என்னவரையும், அப்பாவையும் கூப்பிட்டுக் காண்பித்தேன். அடுப்பில் வைத்திருந்த ரொட்டியை அணைத்து விட்டு டிராயிங் ரூம் வந்து விட்டேன்.

நாகரிகமான உடை, கச்சிதமான உடல் மொழி என கலக்கி விட்டார் செல்வேந்திரன். அவரை நான் மூன்று முறை மட்டுமே சந்தித்துள்ளேன் என்றாலும், மணிக் கணக்கில் பேசியிருக்கிறேன். முதல் முறை அவரை சந்திக்க போயிருந்த போது அவர் கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்தது. காரணம் கேட்ட போது, "இல்ல விக்கி, வர்ற வழில ரோட்டுல வெயில் காரணமா ஒரு பெரியவர் மயங்கி விழுந்துட்டார். பார்த்திட்டு அப்படியே எப்படி வர்றது. அதான் மருத்துவனையில் சேர்த்து விட்டு, கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு வந்தேன்" என்றார். "யாரவர்" என்ற எனது கேள்விக்கு அவரது ஒற்றைப் பதில் "தெரியாது".

அவர் நிகழ்ச்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை என்னிடம் அடிக்கடி சொல்லுவார். ஒன்று, நம் உறவினர், நம்மைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினர், பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள் என நம்மை அறிந்த பல உறவுகள் இருக்கும் போது, முகம் தெரியாத ஓர்குட், பேஸ் புக், ப்ளாக் இதன் மூலம் வரும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என நாம் நினைப்பது ஏன்? அடுத்தது, பாட்டன், பூட்டன் பெயர் என்ன, அவர்கள் என்ன தொழில் செயதார்கள் என்ற விவரங்களை அறிய நாம் காட்டும் அக்கறையை விட யாரோ முகம் தெரியாதவரைப் பற்றி அறிய அதிக அக்கறை காட்டுவதேன்...

என்னை சிந்திக்க வைத்து சீரமைத்தவை அவரின் எழுத்துக்களும், கருத்துகளும். செல்வேந்திரனை நான் மதிக்க காரணங்கள் சில.

* மிக எளிமையானவர். எல்லோரிடமும் பழகுவதற்கு இனியவர்.

* தன் எழுத்துகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் காரணமாய் எப்போதும் தற்பெருமை கொள்ளாதவர்.

* ஆங்கிலம் தெரியாமல் தப்பு தப்பாகப் பேசும் பீட்டர்களுக்கு நடுவே ழகரம், ளகரத்தைத் தவிர மற்ற தமிழ் உச்சரிப்புகளைத் தெளிவாக, எளிமையாகப் பேசுபவர்.

* சபை நாகரீகம் அறிந்தவர். யாராவது தவறான வார்த்தைகள் உபயோகித்துத் திட்டினாலும் அவரை எதிர்த்துப் பேசாமல் பொறுமையாய் சிரித்துப் போவார்.

* பல வெட்டிக்கதை ஆசாமிகளுக்கு நடுவே எப்போதும் பிஸியாக தன் வேலையில் ஓடிக் கொண்டிருப்பவர்.

* பல தரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தும் எவ்வித கெட்ட பழக்கங்களையும் கற்றிருக்காதவர்.

* யாருக்கு எந்த உதவி என்றாலும் தன்னால் முடியுமானால், யோசிக்காமல் செய்யக் கூடியவர்.

* நேரத்தைப் பொன் போல மதிப்பவர்.

* சொந்தக் காரர்களையும், சிறு வயது நண்பர்களையும் எப்போதும் மறவாமல் நட்பு பாராட்டுபவர்.

* மொக்கைகளை மட்டுமே கொண்டுள்ள பல பதிவர்களுக்கு நடுவே தரமான உபயோகமான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் சொற்பப் பதிவர்களுள் ஒருவர்.

* எப்படிப் பட்ட கோபத்தையும் அழகான புன்னகையால் வெளிப்படுத்துபவர்.

* தனக்கு எதிரில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட ஆண்மகன்.

இந்த குணங்களையெல்லாம் கண்டு வியந்த நான் ஒரு முறை அவரிடம், "எப்படி செல்வா, இப்படி?" எனக் கேட்ட போது அவர் எனக்கு சொன்னது, "விக்கி, நாம ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி நாம எப்படிப் பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம், என்ன சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம், நம் பெற்றோர் எப்படிப் பட்டவர்கள், நாம் செய்யும் செயல்களை அவர்கள் அறிய நேர்ந்தால் என்ன நினைப்பர் என்ற கேள்விகளை நினைத்துப் பார்த்தால் மகாத்மாகவல்ல, ஒரு நல்ல மனுஷனாக வாழ முடியும்."

சரி தான் செல்வா. நீயா நானா நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து கோபிநாத் யாரையும் இவ்வளவு பாராட்டியதில்லை. செல்வா எனக்கும் நண்பர் என சொல்வதில் மிகப் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் செல்வா நீ இன்னும் வளரவும், பல உயரங்களை அடையவும்.

Monday, March 30, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புக் காதலா,

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள், நான் உன்னுடன் கொண்டாடிய உன் பிறந்த நாள். உன்னுடன் நான் இருந்த முதல் மற்றும் கடைசிப் பிறந்த நாள். நினைக்கையில் லேசாக வலிக்கிறது. என் விடுதியின் visitor's room இல் உன் பிறந்த நாளை என் தோழிகளுடன் கொண்டாடினோம், நினைவிருக்கிறதா.... இன்றும் உன் பிறந்த நாளை நீ உன் மனைவியுடன் மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பாய்.


நீ முதல் முறை என்னிடம் காதலை சொன்ன போது, அதை ஏற்கவா, தவிர்க்கவா என நான் குழம்பியதால், நேரடியாக பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி, பின் காதலிக்க ஆரம்பித்தவர்கள் நாம். பெற்றோர் சம்மதித்து காதல் செய்த ஜோடி நாமாகத் தான் இருந்திருக்க முடியும்.


எப்படி மறக்க முடியும் அந்த நாட்களை. தினமும் மாலையில் ஒரு சிறிய சந்திப்பு, உடன் உணவருந்திய தருணங்கள், எப்போதாவது சென்ற திரைப்படங்கள், சேர்ந்து வணங்கிய கோவில்கள், இன்னும்....


ஒரு முறை நான் கல்லூரியில் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழ, என்னை மருத்துவமனையில் சேர்த்த என் தோழிகள், முதலில் அழைத்தது உன்னைத் தான். ஒரு வித படபடப்போடு வந்த நீ, எனக்கு ஆறுதலாய் தலை கோதி விட்டு, பின் என் அம்மாவை அழைத்து தெரிவித்தாய். அம்மா, கொஞ்சமும் பதற்றப்படவில்லை, நீ இருந்த தைரியத்தில். என் உடலும் சரியானது, உன் கவனிப்பில்.


யாரிடமும் என்னைத் தோழி என்றோ, தங்கை என்றோ சொன்னதில்லை நீ. எப்போதும், "நான் கட்டிக்கப் போறவ" என்று தானே சொன்னாய். பின் ஏன் இப்படி பாதியில் விட்டுச் சென்றாய்.

ஒரு முறை நாம் இருவரும் கோவிலுக்கு சென்ற போது மறித்த காவலர் யாரெனக் கேட்க, அப்போதும் இதையே சொல்லி, உன் அப்பாவுக்கு போன் செய்து பேச வைத்தது நினைவிருக்கிறதா.... காதலர் தினத்தன்று நீயே சமைத்து எனக்கு எடுத்து வந்திருந்தாய். அதை விட வேறு எந்த பரிசும் எனக்கு பெரிசாய் தெரியவில்லை.


ஒரு நாள் நான் உன்னை பார்க்க வேண்டும் என சொல்ல, இரவு எட்டு மணிக்கு கிளம்பி என்னை வந்து பார்த்து சென்றாய். என் கைபேசியில் எப்போதும் உன் குரல் கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. இதனாலே எனக்கு தோழிகள் மிகக் குறைவு. எனது நேரம் உனக்கே போதுமானதாய் இல்லை.


உன் நண்பர்கள் எனக்கு நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் இருந்து எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்தவர்கள். இப்போதும், உன் நினைவு வந்தால் புலம்ப உன் நண்பர் தான் உள்ளார்.


நீ டெல்லி சென்று எனக்காக வாங்கி வந்த மிக்கி மவுஸ் தான் என் Best Friend. அதை விட்டு, நான் ஒரு நாளும் தூங்கியதில்லை. எப்போதாவது நமக்குள் ஏற்படும் சிறு சண்டைகளின் போது, நான் அழுதது அதனிடம் தான். நான் வெளியூர் செல்லும் போது உனக்கென்று ஏதாவது வாங்கி வராமல் இருந்ததில்லை. சொல்லப் போனால், உனக்கு மட்டுமே ஏதாவது வாங்கி வருவேன். நீயும் தான். பரிசுப் பொருட்கள் கொடுப்பது நமக்குப் பிடிக்காதென்றாலும், அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து, "எப்போதாவது நான் உனக்கு இது வாங்கித் தரவில்லை என்ற எண்ணம் உனக்கு வரக் கூடாது" என்றாய்.


என் பிறந்த நாள் பரிசாய் நீ தந்த பச்சைப் புடவை, இன்னும் பத்திரமாய் இருக்கிறது, என் வீட்டுப் பணிப்பெண் அலமாரியில்.


உனக்கென்று நான் எழுதிய டைரி இப்போது ஏதாவது குப்பையில் உள்ளதோ, அல்லது மக்கி மரித்து விட்டதோ.... நான் உனக்கு கொடுத்த பொருட்களை நீ என்ன செய்தாய் எனத் தெரியவில்லை. ஆனால், நீ எனக்கு கொடுத்தவை மிக பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. என்ன செய்ய, உன்னை காதலித்ததைப் போலவே, என் கணவரையும் காதலிக்க வேண்டுமே. நீயும் அதே காதலுடன் உன் மனைவியை நேசிப்பாய் என எனக்குத் தெரியும். ஏனெனில் நீ எப்போதும் பெண்களை மதிப்பவன்.


நாம் பிரிந்தத்தின் காரணமாய், நம் பெற்றோரை மிகக் காயப்படுத்தி விட்டோம். உன்னை மறக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் உன் நினைவு அநியாயத்திற்கு அதிகமாகிறது. என்றாவது ஒரு நாள் நான் உன்னை நினைக்காதிருப்பேனானால், அது தான் என் சாதனை. ஆனால், இன்று வரை முடியவில்லை.


நீயும் நம் நினைவுகளை சேர்த்து வைத்துக் கொள். சில காலங்களுக்குப் பிறகு, உன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ஏதாச்சும் கதை சொல்லு தாத்தா" என வரும் உன் பேரக் குழந்தைகளுக்கு சொல்ல.