Monday, May 18, 2009

தேர்தல் கலாச்சாரம்

இரு வாரங்களுக்கு முன்பு மதுரை சென்று வந்த அம்மா பயங்கர புலம்பல். காரணம், மதுரையில் ஒரு ஓட்டிற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம். தவிர, குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும், தாய்மார்களுக்கு ஒரு பட்டு சேலையும் வழங்கியிருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பதற்கேற்ப மதுரையில் அழகிரி ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விட்டார். தேர்தல் முடிவுகள் வந்த அன்று அம்மாவின் வயிற்றெரிச்சல் இன்னும் அதிகமாகி விட்டது. " இப்படி குடியுரிமையை வியாபரமாக்கிட்டானே, போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ" என்ற அம்மாவின் வசைகள் நாட்டின் தலை எழுத்தையா மாற்றப் போகிறது. (நம்ம ஓட்டு வியாபாரமாக ஆகாத வரையில் மகிழ்ச்சி)  
**************************************************

கொளுத்தும் வெயிலைத் தணிக்கும் வகையில் பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பனி மழை பொழிந்தது. மாலை நேரங்களில் புழுதிக் காற்றுடன் கூடிய மழையால் அலுவகத்திலிருந்து வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டாலும் இரவு நேரத்தில் வெக்கை தணிந்திருந்தது. ஆனால், டெல்லி வாசிகள் மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது மறுபடியும் கொளுத்த ஆரம்பித்து விட்டார் சூரிய பகவான். இன்றைய வெப்ப நிலை 43 டிகிரி. இது இன்னும் மே மாத இறுதி மற்றும் ஜூனில் உயரும். கூலரில் சமாளித்து விடலாம் என நினைத்த எங்களுக்கு ஏ.சி. வாங்கியே தீர வேண்டும் எனக் கட்டாயம். இந்த மாத சம்பளத்தில் ஏ.சி. பண்டுக்கென தனியாக ஒதுக்கியாச்சு. சீக்கிரமே வாங்கி வர வேண்டும். குளிர் காலத்தில் ஹீட்டரும், கோடை காலத்தில் ஏ.சி.யும் இல்லாமல் டெல்லியில் இருப்பது மிகவும் கடினம். (தலைநகரில் சவுகரியங்களைப் போல் அசவுகரியங்களுக்கும் குறையில்லை)  
**************************************************

நீங்கள் எப்போதாவது ஹிந்தி சீரியல்களைப் பார்த்திருக்கிறீர்களா... நான் ரெகுலராகப் பார்க்கும் வழக்கம் இல்லை எனினும், யாராவது பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் பார்க்க நேர்கிறது. நம் தமிழ் சீரியல்களில் அழுகையும், வில்லத்தனமும் எந்த அளவு சகிக்க முடியாதவையாக இருக்கின்றனவோ அதை விட அதிகமாகவே ஹிந்தி சீரியல்களில் மேக்கப்பும், ஓவர் ஆக்டிங்கும் தாங்க முடியவில்லை. தூங்கி எழும் சீனில் கூட நடிகையின் தலை சீராக வாரப்பட்டு, லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷாடோ மற்றும் அனைத்து அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு ஒரு செயற்கைத்தனத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர நல்ல கதைகள் கொண்ட சில சீரியல்களில் கூட நடிகர், நடிகைகளின் நடிப்பு திகட்டுகிறது. உத்ரன் என்றொரு நல்ல கதை. அதில் வரும் சிறுமிகளின் முக பாவனைகளைப் பார்க்கும் போது ஐயோ என அலறி டிவியை அணைத்து விட தோன்றுகிறது. இது போதாதென்று எல்லா சேனல்களிலும் வரும் கலவரமூட்டும் ரியாலிட்டி ஷோக்கள். யாராவது இருவரை சண்டை போட வைத்து அதில் காசு பார்க்கும் வியாபார புத்தி, மிகுந்த எரிச்சலூட்டுகிறது. தற்போது நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள் இரண்டு. விஜய் டிவியின் " நீயா நானா? " மற்றும் " குற்றம் நடந்தது என்ன? " இதையும் சன் மற்றும் கலைஞர் டிவியினர் காப்பி அடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். (சன் மற்றும் கலைஞர் டிவியின் இம்சைகள் தாங்க முடியவில்லை. ஈயடிச்சான் காப்பி என்பதற்கு அப்படியே பொருந்துவது போல அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் participants ஐயும் காப்பி அடித்தது கொடுமையிலும் பெருங்கொடுமை)  
**************************************************

இந்த தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் சரத் பாபு பெற்ற ஓட்டுகள் 14101. அறியும் போதே பெருமையாய் இருக்கிறது. இதுவே அவருக்கு கிடைக்கும் பெரும் வெற்றியாக நான் எண்ணுகிறேன். எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் துணிச்சலாய் சுயேச்சையாய் நின்று 14101 வாக்குகளைப் பெற்ற சரத் பாபுவிற்கு வாழ்த்துக்கள். அடுத்த தேர்தலில் இன்னும் பலரது கண்கள் திறக்கும். அவர் வெற்றி பெறுவார் என நம்புவோம். (அரசியல் ஒரு சாக்கடை என்று மட்டுமே நினைத்திருக்கும் நம் நடுவே அதை சுத்தப்படுத்த அதற்குள் இறங்கிய சரத்பாபு உண்மையிலே பலரின் உள்ளங்களில் ஜெயித்து விட்டார்)

38 comments:

சென்ஷி said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

:(

Dr.Sintok said...

//விடுதலைப் புலிகள் அமைப்பு சரியானதா தவறானதா என வாதிடும் நேரம் இதுவல்ல. அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் போராடிய போராளியை தீவிரவாதி என என்னால் சொல்ல முடியாது. நான் எந்த அளவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை மதிக்கிறேனோ, அதே அளவு பிரபாகரனையும் மதிக்கிறேன்.அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலிகள். இருக்கும் போது போராட்டங்களுடன் சென்ற அவரது வாழ்வு இறப்பில் அமைதி காண பிரார்த்திக்கிறேன். (நல்லவர்களின் முடிவு கொடுமையானதாகவே//

இது வெரும் வதந்தியே............

கார்க்கிபவா said...

முதல் பத்தியை நீக்கி விடவும்.. அவர் இறப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை

விக்னேஷ்வரி said...

பத்திரிகை செய்திகள் அவ்வாறு வெளியிட்டதால் தான் எழுதிவிட்டேன். இப்போது நீக்கிவிட்டேன் சென்ஷி.

I have removed that news Mr. Varman. You please mind your words.

அழாதீங்க வித்யா. அழற மாதிரி எதுவும் இல்லையாம்.

நீக்கிட்டேன் கார்க்கி. ஆனால், இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் அது தான் தலைப்பு செய்தி. இன்றைய டெல்லி டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் முதல் பக்கத்து செய்தி, "ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளார்" இச்செய்தி வதந்தியாக இருக்கவே விரும்புகிறேன்.

விக்னேஷ்வரி said...

தவறுக்கு மன்னிக்க Dr.Sintok. அப்பத்தி நீக்கப்பட்டது

Sanjai Gandhi said...

அழகிரியை திட்டிட்டு சரத்பாபுவை பாராட்டி இருக்கிறது சரி இல்லை. ஏன்னா அதே தொகுதியில போட்டி இட்ட ட்ராபிக் ரமசாமி 1000 சொச்சம் வாக்குகள் தான் வாங்கி இருக்கிறார். அவர் தன்னை ஒரு சமூக நலப் போராளியாக நிரூபித்திருக்கிறார். சரத்பாபு ஒரு பிசினஸ்மேனாக மட்டுமே நிரூபித்திருக்கிறார். ராமசாமியை புறக்கணித்து சரத்பாபுவுக்கு வாக்களித்தது வெட்கப் பட வேண்டிய செயலே. அதை ஏன் ஆதரிக்கிறிங்க?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

sarathbabu kku kidaicha vote pathi theriyalye nnu ninaichen..ippathan unga pathivula therinjukitten..thankyou..

விக்னேஷ்வரி said...

நான் அழகிரியைத் திட்டலைங்க சஞ்சய். பணம் வாங்கின மக்களைத் திட்டுறேன்.

ஏங்க ஒருத்தரைப் பாராட்டுறது அவங்கவங்க சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு இளைஞர் வர வேண்டும் என நினைத்து வாக்களித்த பதினான்காயிரம் பேரும் வெட்கப்படனும்னு சொல்லுறீங்களா.... இது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். நான் எப்போதும் ராமசாமியைத் தவறாக சொல்லவில்லை. ஒரு இளைஞர், படித்தவர் வர வேண்டும் என்பது என் ஆசை. அவ்வளவே. என் பார்வை அவர் படித்த இளைஞர் என்பது. உங்கள் பார்வை அவர் பிசினஸ் மேன் என்பதாக மட்டுமே இருந்தால் அதற்கு நான் ஏன் செய்ய முடியும் சஞ்சய்.....

விக்னேஷ்வரி said...

வாங்க முத்துலெட்சுமி அக்கா.

விக்னேஷ்வரி said...

டிராபிக் ராமசாமி நல்லவர். சமூக சேவகர். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், 73 வயதில் ஆட்சிக்கு வந்து அவர் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவருடைய கண் பார்வையிலும் குறைபாடு உள்ளது. வீட்டில் நன்றாக உறங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். இளைஞர்கள் முன்னால் வர வழி விடட்டும். கண்டிப்பாக ஒரு இளைஞராக சரத் பாபுவை ஆதரிப்பதில் நான் எந்த வெட்கமும் படவில்லை சஞ்சய்.

Sanjai Gandhi said...

யக்கா, கருணாநிதி, மன்மோகன், ப்ரணாப் முகர்ஜி வயசெல்லாம் தெரியுமா? இவரை விட அதிகம். இவங்க இன்னும் ஆக்டிவா இல்லீங்களா? வயசை விட அடுத்தவன் நலனை யோசிக்கிறவங்க தான் நமக்கு முக்கியம். காசே இல்லாம பல பொதுநல வழக்குகள் போட்டு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருந்திருககார். இதுமாதிரி சரத்பாபு எதும் பண்ணி இருக்காரா?

சரத்பாபு அரசியலுக்கு வரதை யாரும் குறை சொல்லலை. ஆனா தன்னை நிரூபித்து காட்டியவரை புறக்கணித்து சும்மா ஆங்கிலத்தில் ஆறிக்கைத் தயாரித்து இணையத்தில் உலவ விடும் ஒருவருக்கு ஏன் இத்தனை ஆதரவு என்பது தான் ஆதங்கம்.

விக்னேஷ்வரி said...

நான் எல்லா வயசானவங்களையும் ரிடயர் வாங்கி தான் போக சொல்றேன்.

சரத்பாபு அரசியலுக்கு வரதை யாரும் குறை சொல்லலை. ஆனா தன்னை நிரூபித்து காட்டியவரை புறக்கணித்து சும்மா ஆங்கிலத்தில் ஆறிக்கைத் தயாரித்து இணையத்தில் உலவ விடும் ஒருவருக்கு ஏன் இத்தனை ஆதரவு என்பது தான் ஆதங்கம். //

இதற்கு என்ன பதில் சொல்வதென எனக்கு தெரியவில்லை. உங்கள் வாதம் சரியானதோ என்ற எண்ணம் வருகிறது.

இருந்தாலும் இளைஞர்கள் வருவதை நான் ஆதரிக்கிறேன்.

நர்சிம் said...

:(:(

விக்னேஷ்வரி said...

முதல் தடவை வர்றீங்க. எதுக்கு அழறீங்க நரசிம்....

Raju said...

//பணம் வாங்கின மக்களைத் திட்டுறேன்.//

Sister, that their prerogative isnt it? In my hometown,. Vijayakanth professed to take money given by anybody and vote for him...

Also Did you read this?

பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்and plz comment couple of my posts, that I want women to comment.

விக்னேஷ்வரி said...

What to do Raju... Politics is like this only. If we get into details, it would be very bad. I will sure read and comment in your posts.

வினோத் கெளதம் said...

எனக்கும் இதே மாதிரி ஹிந்தி சீரியல், Reality Shows பாக்குறப்ப எரிச்சலா தான் வருது..

நீங்க Zee Tamilல நம்பினால் நம்புங்கள் பார்த்து உள்ளிர்கள..அது உண்மையோ பொய்யோ ஆனா ரொம்ப நல்லா இருக்கு..

வினோத் கெளதம் said...

நீங்க சஞ்சய் அண்ணன்னுக்கு சொல்லி இருக்குற பதில் சூப்பர்..
ஏன் அவர் சரத் பாபு என்றால் இவ்வளவு காண்டு ஆகிறார் என்று தெரியவில்லை..
இதை நான் சும்மா சாதரணமாக தான் கேக்கிறேன்..
அவர் தப்பாக எடுத்து கொள்ள இல்லை..

சந்தனமுல்லை said...

விறுவிறுப்பாக இருக்கிறது தேர்தல் கலாசாரம்!! தொடர்ந்து எழுதுங்கள் விக்னேஷ்வரி!:-)

Ashok D said...

ம்ம்ம் வாழ்த்துக்கள் sanjay & Vik, உங்கள் அறிதலை ஒத்துக்கொண்டதற்கு விக், புரியவைத்ததற்கு Sanjay.

1.Software வேலையை உதறி catering ஆரம்பித்துயிருக்கிறார். (எதிலே நிரந்தர வருமானம் என்பதை புரிந்துவைத்துயிருக்கிறார் சரத்)

//நான் அழகிரியைத் திட்டலைங்க சஞ்சய். பணம் வாங்கின மக்களைத் திட்டுறேன்//
// " இப்படி குடியுரிமையை வியாபரமாக்கிட்டானே, போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ" என்ற அம்மாவின் //????

நர்சிமின் எதிர்வினை புரிந்தததா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

(நம்ம ஓட்டு வியாபாரமாக ஆகாத வரையில் மகிழ்ச்சி)

இப்ப நாடு இருக்கற நெலமையில் இப்படித்தான் நெனச்சிக்கிட்டு போகவேண்டியிருக்கு

Sanjai Gandhi said...

வினோத், எனக்கும் சரத்பாபுவிற்கும் வரப்புத் தகறாறு. தான் காண்டு. :-)

வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விஷயத்தை செய்வதற்கும் நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் செய்வதர்கும் வித்தியாசம் இருக்கு. அவர் அரசியலுக்கு வருவதால் எனக்கென்ன இழப்பு? அவர் எதாவது அரசியல் கட்சியில் இணைந்து வரட்டுமே. அப்போது தான் வெற்றி பெற வாய்ப்பாவது இருக்கு. மாஃபா பாண்டியராஜன் தெரியும் இல்லையா? அவரைவிட எந்த வித்தத்திலும் சரத் பாபு உயர்ந்தவரில்லை. அவர் போட்டியிட்டதை யாருமே குறை சொல்லவில்லை. ஏன்னா, அவர் தேமுதிக என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அது வெல்வதறகான வாய்ப்பை அரிந்து செய்த செயம். வெத்துவேட்டு செயல் இல்ல சரத்பாபு மாதிரி.

நாங்க இங்கே சரத்பாபுவை எதிர்ப்பதைவிட அவர்களுக்கு வாக்களித்தவர்களைத் தான் அதிகம் எதிர்க்கிறேன். ட்ராபிக் ராமசாமி என்னும் சமூகப் போராளியை புறக்கனித்து பகட்டு விளம்பரம் செய்த சரத்பாபுவை ஆதரித்ததை தான் நான் குறை சொல்கிறேன்.

புரியுதா?

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...

அன்பு அண்ணன் சஞ்சய்க்கு..

தல இப்ப நம்ம ஒரு கட்சி சார்பா போட்டி போட்றோமொனு வைங்க..
எல்லாம் விஷயத்துக்கும் ஒரு நல்ல காரியம்மா இருந்த கூட அந்த கட்சியின் தலைமை மற்றும் அதன் கோட்ப்பாடுகள் இவற்றை பொறுத்தே நம் செயல்கள் அமையும்..

உதாரனத்துக்கு இப்ப உங்களக்கு காங்கிரஸ் கட்சி சார்பா அடுத்த எலெகக்ஷன் நிக்க சொல்லி நின்னு ஜெய்ச்சுட்ரிங்க..ஒரு சமயம் எதோ ஒரு நல்ல விஷயம் செய்யனும்னு நினைச்சு அதை தலைமை வேணாம்னு சொல்லிடிது..
அதை மீறி வட்டம் மாவட்டம் தலைமை இதை எல்லாம் மீறி உங்க மனசாட்சிக்கு நல்லதுன்னு படுற விஷயங்கள பண்ண முடியுமா..

இப்ப நாங்க சொல்றது கூட சரத்பாபு ஜெய்ச்ச நல்லா இருக்கும்னு தன்னே சொன்னோம்..
எங்களுக்கே தெரியும் அதுக்கு வாய்ப்பு இல்லன்னு..
இருந்தாலும் ஒரு முன்மாதிரி அரசியல் கட்சிகள் சாயம் இல்லாமல் நிறையா படித்த சமுதாய பார்வை உள்ள நிறையா இளைஞர்கள் வருவதற்கு ஒரு ஸ்டேப் தன்னே..
வந்த எதாச்சும் ஒரு பெரிய மாற்றம் வரும்னு நினைக்கிறோம்..

இப்ப ஒன்னும் அந்த அளவுக்கு நம்ம அரசியல் அமைப்பு மோசமா இல்ல..
எனக்கு தெரிஞ்சு இப்ப இருக்கிற அரசியலவாதிகள் கொஞ்சம் நல்லவே செயல்ப்படுரங்க..

ஆனா இன்னும் கொஞ்சம் பாஸ்டா போன நல்லா இருக்கும்னு சொல்லி தான் இளைஞர்கள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்..

அதற்காக நாங்கள் ஒன்னும் பாண்டியராஜனையும், ராமசாமியையும் கேலி பண்ணவிலையே..
அவங்க வந்து இருந்தாலும் சந்தோஷப்பட்டு இருப்போம்

எதை பகட்டு என்று சொல்லுரிங்க..
ஆங்கிலத்தில் ஒரு சைட் வைத்து இருப்பதா..
அவரு என்ன பரம்பரை பணக்கரரா பகட்டு வாழ்க்கை வாழ்வதற்கு..

அதே போல் முக்கியாயமான ஒரு விஷயம்
எனக்கு சரத்பாபு என்ற நபர் இணையத்தின் முலம் படித்ததின் மட்டுமே தெரியும்..
எனக்கு ஒன்றும் அவர் உறவினரோ நண்பரோ இல்லை..
ஒரு மெயில் கூட நானோ இல்லை அவரோ பண்ணியது இல்லை..

SK said...

இது மாதிரி கலவைய கலந்து எழுத நீங்களும் ஒரு பேரு யோசிங்க.. எங்களுக்கு நினைவு வெச்சுக்க வசதியா இருக்கும்.

நல்லா கலந்து எழுதி இருக்கீங்க.. தொடருங்கள்.

ஜெட்லி... said...

என் வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி....
நான் எழுதிய நான் அவள் அது ..... கதை என்
நண்பனின் தம்பிக்கு நடந்த உண்மை சம்பவம்.
அதை அவன் எங்களிடம் சொல்லும் போதே
நாங்கள் பயந்து விட்டோம்.

வசந்த் ஆதிமூலம் said...

:-)
வாழ்த்துகள்.

Baski said...

நான் பலரிடம் கேக்கும் கேள்வி.

உங்களிடம் தி.மு.க வோ, அ.தி.மு.க வோ காசு கொடுத்தால் அந்த விபரம் எழுதவும்.
"கேள்விஞானத்தில்" பரப்ப வேண்டாம்.

இது மிகை படுத்தபட்டுவிட்டதோ என்பது என் வாதம்.

இதில் எந்த அளவு உண்மை என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

விக்னேஷ்வரி said...

Zee Tamil channel எங்க ஏரியால வர்றதில்ல வினோத் கௌதம்.

ஏன் அவர் சரத் பாபு என்றால் இவ்வளவு காண்டு ஆகிறார் என்று தெரியவில்லை.. //

அவங்கவங்களோட சுய விருப்பம் வினோத். நாம என்ன சொல்ல முடியும். அவரோட point of view ல அவருக்கு அது சரியா இருக்கு. அவ்ளோதான்.

நன்றி முல்லை.

Software வேலையை உதறி catering ஆரம்பித்துயிருக்கிறார். (எதிலே நிரந்தர வருமானம் என்பதை புரிந்துவைத்துயிருக்கிறார் சரத்) //

இதை விமர்சிப்பதை நான் விரும்பவில்லை. எல்லோருமே நிரந்தர வருமானத்திற்காக தான் உழைக்கிறோம்.

//நான் அழகிரியைத் திட்டலைங்க சஞ்சய். பணம் வாங்கின மக்களைத் திட்டுறேன்//
// " இப்படி குடியுரிமையை வியாபரமாக்கிட்டானே, போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ" என்ற அம்மாவின் //????

நர்சிமின் எதிர்வினை புரிந்தததா? //

ஓ, புரியுது அஷோக்.

விக்னேஷ்வரி said...

ஆமா அமிர்தவர்ஷினி அம்மா :(

வினோத் கௌதம், சஞ்சய் உங்கள் இருவரின் ஆரோக்கியமான கருத்தையும் நான் வரவேற்கிறேன்.

நன்றி SK. இப்படி கலந்து எழுதுறதுக்கு பேர் லேபிள்ல இருக்குல்ல. தலைப்பு இப்படி வித்தியாசமா இருக்குறதை தான் நான் விரும்புகிறேன்.

அவன் எங்களிடம் சொல்லும் போதே
நாங்கள் பயந்து விட்டோம். //

நீங்கள் எழுதியதைப் படித்த பின் நானும் பயந்து விட்டேன். வீட்டுல தனியா இருக்குற சில சமயங்கள்ல பயமா இருக்கு ஜெட்லி.

நன்றி வசந்த் ஆதிமூலம்.

விக்னேஷ்வரி said...

வருகைக்கு நன்றி பாஸ்கி. இதில் எதுவுமே மிகைப்படுத்தப்படவில்லை. நான் டெல்லியில் உக்காந்திட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு காசு குடுக்கப் போறாங்க.
போன மாதம் பெரியம்மாவிடம் போனில் பேசும் போது செத்துப் போன பெரியப்பாவிற்கும் சேர்த்து பணம் கொடுக்கப்பட்டதாக சொன்னார். இதே போல் எனது அம்மா மதுரையில் இருந்த போது பணம் வாங்கியதை கண்ணால் பார்த்து சொன்னதாலே நான் எழுதினேன். நான் அ.தி.மு.க. பணம் கொடுக்கவில்லை என சொல்லவில்லை. அழகிரி கொடுத்தார் எனும் விவரம் அறிந்தே சொல்கிறேன்.

விக்னேஷ்வரி said...

Thanks Kripa.

Sanjai Gandhi said...

//போன மாதம் பெரியம்மாவிடம் போனில் பேசும் போது செத்துப் போன பெரியப்பாவிற்கும் சேர்த்து பணம் கொடுக்கப்பட்டதாக சொன்னார்.//

உங்க பெரியப்பா பேர் சீதக்காதியா? :))

( செத்தும் கொடுத்தார் சீதக்காதின்னு சொல்வாங்களே. :) )

Admin said...

உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள் என்றுதான் உங்கள் பக்கம் வர முடிந்தது இனி அடிக்கடி உங்கள் பக்கம் வருகிறேன்...

priyamudan bala said...

என் ஊர் மதுரை .
மிக தாமதமாகதான் உங்கள் பதிவை இன்று பார்த்தேன்
சரியான பதிவு .
உண்மையை உரக்க சொல்லும் பதிவு.

மதுரையில் அழகிரி தன் தேர்தல் வெற்றிக்கு எட்டு லட்சம் பேருக்கு ரூபாய் ஐநூறு வீதம் வழங்கி வெற்றிஐ வாங்கினர் .
ஆனால் இன்று தெரு எங்கும் ப்ளெக்ஸ் பானேர் , போஸ்டர் , ரௌடிதன் ,
என்ன சொல்ல கலெக்டர் கூட வரமறுக்கும் மதுரை .
என் இப்படி ஒரு நிலை
இரண்டு ஆயிரம் ஆண்டு
பெருமை மிகு மதுரைக்கு .
நாங்கள் யாரும் பணம் கேட்டகவில்லை .
விடு வீடாக வந்தார்கள்.
மிரட்டும் தொனியில் கேட்டார்கள் .
எத்தினை ஒட்டு என்று பணம் விசிரினர்கள் .
தட்டி கேட்டவர்களை வெட்டினார்கள் .
காவல் துரை கைது செய்தனர் யாரை நியயம் கேட்ட வர்களை .
வெற்றியை வாங்கி விட்டார்கள் . ஆனால் உண்மை வீழ்த்த பட்டது .
மதுரை ஒரு நாள் இதுக்கு நீதி வழங்கும் .

பின் குறிப்பு ;பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க பல கோடி .,
அணுசக்தி மசோதாவிற்கு வாக்களிக்க பல ஆயிரம் கோடி என எம்பி மிக அதிகம் மதிப்பு .
ஆனால் ஏழை நாடு .
உண்மை என்ன உலக பணக்காரர்கள் வாழும் நாடு .
அதனால் இது ஏழை நாடு அல்ல. ஏழைகளின் நாடு .
பின் குறிப்பு ;தண்ணீரை காசுக்கு விற்றதை தட்டிகேட்ட லீலாவதி, முன்னால அமைச்சர் தா .கிருஷ்ண தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரித்து கொலை இவை அனைவரும் தெரிந்த விஷயம் .

commomeega said...

எனக்கு தமிழ் இல் மட்டுமல்ல ஹிந்தி , தெலுகு ,மலையாளம், கன்னடம். துளு ஆகிய மொழி சீரியல்களும் பிடிக்காது.

commomeega said...

பணம் கொடுத்து வோட் வாங்குவதை அழகிரி தான் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் படுத்தினர் போல் உள்ளது உங்கள் பதிவும் ,பின்னுட்டம்களும். இந்த கலாச்சாரம் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஜனநாயகம் பணநாயகம் ஆன பல கந்தல் நிகழ்சிகள் நடந்து உள்ளது.இதை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து புத்தகமாய் போடும் அளவு என்னிடம் தகவல்கள் உள்ளது . தேவை உள்ளவர்கள் என்னை இ-மெயில் இல் தொடர்பு கொள்ளவும். கூட US$100 அனுப்பவும்