ரயில் வண்டி போல முழு படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணம் ஆரம்பமானது. சோம்பல் கலையா ஆறு மணி தூக்கத்தில் தடாலென சத்தமும் சிதறிய கண்ணாடித் துண்டுகளின் தழுவலும் தூக்கத்தைக் கலைத்தன. எதிரே வந்த ட்ரக் ஒன்று எங்கள் பேருந்தின் பக்கவாட்டில் இடித்துக் கண்ணாடிகளை உடைத்து உள்ளே தள்ளிச் சென்றது. உடைந்த தூக்கத்துடனும், குத்தியக் கண்ணாடித் துண்டுகளுடனும் எழுந்து மீதி ஒரு மணி நேரப் பயணம் தொடர்ந்தது. கட்ரா (Katra) வைஷ்ணு தேவியின் அடிவாரத்திலிருக்கும் ஊர். அங்கு குளித்துத் தயாராகி ஆரம்பமானது பயணம்.
கட்ராவிலிருந்து ஒன்றரை கி.மீ.லிருக்கும் பாலகங்காவிற்கு ஆட்டோவிலும், பாலகங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கும் செல்ல வேண்டும். பால கங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு 14 கி.மீ. தொலைவு. நடந்தும், குதிரையிலும், நால்வர் தூக்கிச் செல்லும் பல்லக்கிலும் செல்லலாம். யோகியின் திட்டப்படி எங்கள் பயணம் நடைப் பயணம். இல்லை மலையேறும் பயணம் எனலாம்.
அடர்த்தியான மலைகள், பாதைகளை மறைக்கும் பனி, “ஜெய் மாதா தி” என முழங்கும் பக்தர் கூட்டம், சோர்ந்த முகங்கள், தளர்ந்த நடை என வழி முழுக்க வித்தியாச அனுபவம். கைக்குழந்தைகளைக் கொண்டு செல்லும் தம்பதிகளிலிருந்து, தளர்ந்து மூன்று காலில் செல்லும் வயதானவர்கள் வரை பார்க்க முடிந்தது. வாழ்க்கையின் மீதான பற்றுதலும், கடவுளின் மீதான நம்பிக்கையும் எந்தளவு நம்மைக் கொண்டு செல்கின்றன என்னும் வியப்பு சூழ்ந்தே சென்றது என் பயணமும்.
மதியம் 2 மணிக்கு கட்ராவிலிருந்து ஆரம்பித்தோம். மலையை சென்று சேர்கையில் மணி நள்ளிரவு பனிரெண்டரை. பத்து மணி நேரத்திற்கும் மேலான நடை. அதுவும் ஊட்டி போன்றதொரு 60 டிகிரி சாலையில். சில இடங்களில் இந்தப் பாகை இன்னும் உயர்ந்தது. நடந்து, அமர்ந்து, களைப்பாறி, உண்டு, தாகம் தீர்த்து, வியர்வை துடைத்து, குளிரில் நடுங்கி கோவிலை அடைந்து விட்ட பொழுதில் தங்குமிடம் சேர இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் ஏற வேண்டுமென்ற போது தொண்டை கிழிய கத்தி அழ வேண்டும் போலிருந்தது.
பனிரெண்டரைக்கு அறை அடைந்து கோவில் செல்லத் திரானியில்லாததால் தூங்கிப் போனேன். 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு உண்டு. காலை ஏழு மணிக்குத் துயில் களைந்து தயாராகி கீழே இறங்கிக் கோயிலை அடைகையில் மணி 10. ஒரு மணி நேரம் பொருட்களை பாதுகாக்குமிடத்தில் பாதணிகளை வைக்கக் காத்திருந்து, பதினொரு மணிக்கு பக்தர் வரிசையில் சங்கமித்தோம். எனக்கு எப்போதும் ஆகாதது கூட்டம். அதுவும் கடவுள் பெயர் சொல்லி மனிதம் மறந்த கூட்டம். வரிசையின் பின்னாலிருந்து சக மனிதனை ஏமாற்றி முந்திச் செல்லும் கூட்டத்தைப் பார்க்கையில் பொங்கி வந்தது கோபம். ஒருவர் மட்டுமே செல்ல முடிந்த ஒரு படிக்கட்டில் இறங்கும் பொழுது கடைசி படிக்கு முந்திய படியை அடைகையில் “கொஞ்சம் நின்னு வாப்பா” எனச் சொல்லிக் கேட்காத ஒருவனின் நெஞ்சைப் பிடித்துத் தள்ளுகையில் “நீயெல்லாம் எதுக்குடா கோவிலுக்கு வர்ற”ன்னு கேட்க நினைத்து நிராகரித்தேன்.
ஒரு மணி நேரக் காத்திருத்தலின் வலியுடன் செல்லுகையிலேயே யோகி சொன்னது நினைவிலைருந்தது. உள்ளே 2 நொடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடியுமெனவும், உள்ளே எந்த உருவமும் கிடையாது, பூமியிலிருந்து சுயமாய் வந்த கல் பிண்டங்களைத் தொழுகிறார்களெனவும் அறிகையில் “இதுக்கா இவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்தோம்” என்ற எண்ணத்தோடு அரை மன நிலையிலேயே தரிசனம் செய்ய சென்றேன். ஆனால் 5 நொடி தரிசனத்திற்குப் பின் வெளிவருகையில் ஏதோ வாழ்க்கையின் பெரும் லட்சியத்தை அடைந்து விட்ட மன நிறைவு இருந்தது. நடந்த நடைக்கான களைப்பு நீங்கி மனமகிழ்வாயிருந்தது.
மறுபடியும் மதியம் ஒரு மணிக்கு மேலிருந்து இறங்க ஆரம்பித்தோம். இறக்கத்தில் இறங்குவதொன்றும் அவ்வளவு எளிதாயில்லை. தவிர ஐநூறு, ஐநூறாக இருந்த செங்குத்துப் படிக்கட்டுகளைக் கடக்கையில் முட்டியின் வலி, கண்களில் கண்ணீராய்ப் பொங்கியது. என் நிலை புரிந்து பாதி வழியில் குதிரையை ஏற்பாடு செய்தார் யோகி. 3 கி.மீ. தூரம் குதிரையில் கடந்தேன். யோகி பின்னால் நடந்து வந்தார். குதிரையைப் பார்க்கும் நேரமெல்லாம் ஜான்ஸிராணியாய் மாற நினைத்த கனவு, உண்மையில் ஏறுகையில் எவ்வளவு பயம் நிறைந்தது. குதிரை நடக்கையில் அதன் மேலிருக்கும் நாம் அசைகையில், கீழே விழுந்து “இருண்ட வீடு” கதையில் வரும் பையன் போல் முன் பல் போய் விட்டால் எப்படி இருக்குமென்ற நினைவு வர கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
குதிரையிலிருந்து இறங்கி மறுபடியும் ஆயிரம் படிகள். நெஞ்சில் கல்லைத் தூக்கி வைத்தது போலிருந்தது. ஆனாலும் ஒரு கையில் தடியும், மறுகையில் என்னவரின் கரமும் இருக்கையில் படியைக் கடக்கும் நம்பிக்கை வர ஐந்தரை மணிக்கு அடிவாரமடைந்து விட்டோம். நாலரை மணி நேரத்தில் கீழே இறங்கியது சாதனை தான். எது எப்படியோ, இறங்கியதும் உடல் எடை பார்த்தேன். இரண்டு கிலோ குறைந்திருந்தது.
உதிரி:
> கீழிருந்து மேலேயும், மேலிருந்து கீழேயும் நம் சுமைகளையும், குழந்தைகளையும் தூக்கி வர “பிட்டு” என அழைக்கப்படும் கூலித் தொழிலாளிகள் கிடைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முறைக்கான கூலி இருநூற்று ஐம்பது ரூபாயும், ஒரு வேளை சாப்பாடும். அதிலும் பேரம் பேசும் மனிதர்களைப் பார்க்கையில் அருவெறுப்பாய் இருந்தது.
> இந்தப் பிட்டுகள் பொதுவாக ஜம்முவிலிருக்கும் கிராமத்துவாசிகள். அவர்களின் ஊர்கள் மலைப்பகுதியிலிருப்பதால் மலையேறி இறங்கிப் பழக்கமுடையவர்கள். இந்த வேலை செய்வதற்கு வைஷ்ணு தேவி கோவில் நிர்வாகத்திடமிருந்து அவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும்.
> நான்கு பிட்டுகள் சேர்ந்து முன்னிருவர் பின்னிருவராய் நடுவில் இருக்கையில் அமர்ந்திருக்கும் மனிதர்களை சுமந்து செல்கிறார்கள். இதற்கு “பால்கி” (பல்லக்கு) என்று பெயர். ஆத்குவாரி (பாதி தூரம்) எனும் இடத்திலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்கள் சென்றாலும் அவை அரசின் பொறுப்பிலிருப்பதால் மிக மோசமான சர்வீஸ்.
> கால் கிலோ மீட்டருக்கு ஒரு அமருமிடம், அரை கிலோ மீட்டரில் தண்ணீர்க் குழாய் வசதி, ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் உணவு விடுதிகள் என பயணிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவு நியாயமான விலையில் உள்ளது. தவிர வெளியே பலகையில் “நாங்கள் லாபமுமின்றி, நஷ்டமுமின்றி இச்சேவையை உங்களுக்களிக்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய சேவையது.
> கட்ராவிலும், வைஷ்ணு தேவி மலையிலும் அரசாங்கத்தின் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் இருப்பது சிறப்பு. தரமான சேவை, நியாயமான கட்டணத்தால் பயணிகளைக் கவர்கின்றனர்.
> பால்கியையும், குதிரையையும் அதிகம் உபயோகப்படுத்துபவர்கள் தென்னிந்தியர்களாக உள்ளனர். தென்னிந்தியர்களில் அதிகம் ஆந்திர மக்களைக் காண முடிந்தது. மொத்தக் கூட்டத்தில் அதிகம் பஞ்சாபிகளிருந்தனர். ஜம்மு பஞ்சாபிற்கு அருகிலிருப்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.
> வைஷ்ணு தேவி மலைக்கு அக்பர் நடந்து வந்து சென்றுள்ளதாகவும், தங்கக் குடையைக் கோவிலுக்கு அளித்ததாகவும் வரலாறு சொல்கிறது.
> வித்தியாசமான அனுபவத்திற்கும், நிறைவான விடுமுறைக்கும் வைஷ்ணு தேவி அவசியம் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்.