Wednesday, November 9, 2011

அம்ம்ம்ம்மா....




கன்றீனும் பசுவின் அரற்றலை
அவள் புடவைத் தலைப்பிலொளிந்து
மிரண்டு கண்ட பொழுது-

கண்ணாமூச்சி விளையாட்டின் 
கை சிராய்ப்பில்
அவள் பதறிக் கண்ணீர் துளிர்க்க
மருந்திட்ட பொழுது-

மதிப்பெண் குறைந்த
தேர்வட்டையை
அப்பாவிடம் நேரம் பார்த்து சொல்லி
கனமில்லா திட்டுகளுடன்
கையெழுத்து வாங்கித் தந்த பொழுது-

பள்ளித் தோழியுடன் 
அதிகம் பகிர்கையில்
தன் ஏமாற்றம் மறைத்து
அவளை வரவேற்ற பொழுது-

என் நண்பனை 
நண்பனாகவே 
ஏற்றுக் கொண்ட 
சினேகத்தின் பொழுது-

மகளின் காதல் 
சரியாயிருக்க வேண்டுமேயெனும்
தவிப்புடன் கூடிய
திருமண ஏற்பாட்டின் போது-

முன்னெப்போதையும் விட
மசக்கை உடல் மலர்த்த 
ஒருக்களிக்கக் கூடாமல்
ஈருடலாய் ஆனபோதே
இன்னும் பெருகுகிறது
நெஞ்சுக்கூட்டு ஈரம் 
இரைக்க இரைக்க 
அம்மாவெனும் போது...

திரிசக்தி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை.