கன்றீனும் பசுவின் அரற்றலை
அவள் புடவைத் தலைப்பிலொளிந்து
மிரண்டு கண்ட பொழுது-
கண்ணாமூச்சி விளையாட்டின்
கை சிராய்ப்பில்
அவள் பதறிக் கண்ணீர் துளிர்க்க
மருந்திட்ட பொழுது-
மதிப்பெண் குறைந்த
தேர்வட்டையை
அப்பாவிடம் நேரம் பார்த்து சொல்லி
கனமில்லா திட்டுகளுடன்
கையெழுத்து வாங்கித் தந்த பொழுது-
பள்ளித் தோழியுடன்
அதிகம் பகிர்கையில்
தன் ஏமாற்றம் மறைத்து
அவளை வரவேற்ற பொழுது-
என் நண்பனை
நண்பனாகவே
ஏற்றுக் கொண்ட
சினேகத்தின் பொழுது-
மகளின் காதல்
சரியாயிருக்க வேண்டுமேயெனும்
தவிப்புடன் கூடிய
திருமண ஏற்பாட்டின் போது-
முன்னெப்போதையும் விட
மசக்கை உடல் மலர்த்த
ஒருக்களிக்கக் கூடாமல்
ஈருடலாய் ஆனபோதே
இன்னும் பெருகுகிறது
நெஞ்சுக்கூட்டு ஈரம்
இரைக்க இரைக்க
அம்மாவெனும் போது...
திரிசக்தி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை.