Wednesday, November 9, 2011

அம்ம்ம்ம்மா....




கன்றீனும் பசுவின் அரற்றலை
அவள் புடவைத் தலைப்பிலொளிந்து
மிரண்டு கண்ட பொழுது-

கண்ணாமூச்சி விளையாட்டின் 
கை சிராய்ப்பில்
அவள் பதறிக் கண்ணீர் துளிர்க்க
மருந்திட்ட பொழுது-

மதிப்பெண் குறைந்த
தேர்வட்டையை
அப்பாவிடம் நேரம் பார்த்து சொல்லி
கனமில்லா திட்டுகளுடன்
கையெழுத்து வாங்கித் தந்த பொழுது-

பள்ளித் தோழியுடன் 
அதிகம் பகிர்கையில்
தன் ஏமாற்றம் மறைத்து
அவளை வரவேற்ற பொழுது-

என் நண்பனை 
நண்பனாகவே 
ஏற்றுக் கொண்ட 
சினேகத்தின் பொழுது-

மகளின் காதல் 
சரியாயிருக்க வேண்டுமேயெனும்
தவிப்புடன் கூடிய
திருமண ஏற்பாட்டின் போது-

முன்னெப்போதையும் விட
மசக்கை உடல் மலர்த்த 
ஒருக்களிக்கக் கூடாமல்
ஈருடலாய் ஆனபோதே
இன்னும் பெருகுகிறது
நெஞ்சுக்கூட்டு ஈரம் 
இரைக்க இரைக்க 
அம்மாவெனும் போது...

திரிசக்தி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை.

Monday, October 24, 2011

தீபாவளி


தீபாவளி தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது இந்துக்கள் பண்டிகையென பலரும் நினைத்துள்ளார்கள். இந்துக்கள் மட்டும் இல்லை, பல மதத்தவரும், பல்வேறு மாநிலத்தவரும் தீபாவளி கொண்டாடும் முறையும் விதமும் வேறு, சிறப்பானது. அது ஒரு தொகுப்பாக இங்கே.

=> தீபங்களின் ஆவளியான தீபாவளியை நம்மவர்கள் விளக்குகளால் அலங்காரம் செய்து கொண்டாடவில்லையெனினும் வட நாட்டவர் மாலை நேரங்களில் விளக்குகளால் வீடு முழுவதும் அலங்கரித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னதிருந்தே மின் விளக்கு சரங்களால் வீடுகள் அலங்கரிக்கப்பட்டுவிடுன்றன.

=> நமது பொங்கல் பண்டிகை போலானது வடக்கிந்திய தீபாவளி. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாள் வீடை சுத்தம் செய்து பழைய சாமான்களை எரிப்பதாகும். இந்த நாள் நரக்சௌதஸ் என அழைக்கப்படுகிறது. வீட்டின் பழைய பொருட்களை வெளியேற்றி வீட்டு வாசலில் சிறு அகல் தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும் நாளிது.

=> இதே முதல் நாள் ரூப்சௌதஸ் என மார்வாடி குடும்பங்களால் கொண்டாடப்படுகிறது. பெண் அழகாகும் நாள் எனப் பொருள்பட அந்த நாள் பெண்கள் முகம், கைகளில் கடலைமாவு மற்றும் இன்ன பிற அலங்காரப் பத்துகளையும் இட்டு அழகுறும் நாள்.

=> தீபாவளிக்கு இருவாரங்களுக்கு முன்னால் துர்கா பூஜா வட இந்திய வீடுகளில் கொண்டாடப்படும். இது நவராத்திரியின் கடைசி நாள்.

=> துர்கா பூஜாவிலிருந்து பதினைந்து முதல் இருபது நாட்களுக்குப் பின் தீபாவளி தினத்தன்று கொண்டாடப்படுவது லக்ஷ்மி பூஜா. தீபாவளி தினத்தன்று காலை உறவினர்களுக்குள் பரிசுகள் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடி மாலை குடும்பம் முழுக்கக் கூடி லட்சுமி தேவியை வணங்கும் நன்னாள்.

=> தீபாவளியன்று லட்சுமி பூஜை சிறப்பிக்கப்படுவதால் அன்றிரவு லட்சுமி தேவி தங்கள் வீட்டிற்கு வருவதாக எண்ணப்பட்டு இரவு முழுக்கக் கதவை மூடாது இருப்பார்கள். வீடு பூட்டியிருந்தால் வரும் லட்சுமி (செல்வம்) திரும்பிப் போய்விடுவதாக ஐதீகம்.

=> பனியா எனப்படும் வாணிபக் குடும்பங்களில் தீபாவளி இரவன்று அனைவரும் விழித்து சீட்டுக் கட்டுகள் கொண்டு பணம் வைத்து விளையாடுவது வழக்கம். இது சூதாட்டம் என நம்மால் அறியப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை தீபாவளியன்று பணம் வரும் விளையாட்டாகக் கருதப்பட்டு இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது.

=> தசரா தினத்தன்று ராவணனை அழித்து, இலங்கையிலிருந்து சீதையை அழைத்துக் கொண்டு ராமன் அயோத்தியை அடையும் தினத்தன்று அவர்களை வரவேற்கும் விதமாக அனைவரும் தீபமேற்றி இனிப்புகள் பகிர்ந்து மகிழும் நாளே வடக்கில் தீபாவளி.

=> ஆனால் தென்னிந்தியர்கள் மத்தியில் கிருஷ்ணன் தன் மாமன் கம்சனை வதம் செய்யும் நாள் தீபாவளி என அறியப்படுகிறது. இதன் மூலம் நம்மவர்கள் கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டும், வடக்கிந்தியர்கள் ராம அவதாரத்தைக் கொண்டு தீபாவளி கொண்டாடுகிறார்கள் எனும் முரணறியலாம்.

=> மூன்று நாட்கள் தீபாவளியில் மூன்றாம் நாள் பசுக்களுக்கும் கன்றுகளுக்குமானது. மார்வாடி கலாச்சாரத்தில் அன்று பசுச்சாணத்தால் விளக்கு செய்து அவ்விளக்கைக் கொண்டு பசுவையும், கன்றுகளையும் தொழுது வீட்டிற்குக் கன்றை அழைத்து அந்த விளக்கை மிதிக்கச் செய்து அதன் மூலம் நற்பலன் வருவதாகக் கருதுகின்றனர்.

=> தீபாவளிக்கு அடுத்த நாள் அன்னகூட். இது பெரும்பாலும் அனைத்து வடக்கிந்தியக் குடும்பங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஏழு வகைக்காய்கறிகள் கலந்த சத்சாகா எனும் கூட்டும், கூடவே முப்பது முதல் நாற்பது வகை உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அன்னபூர்ணி மாதாவை வணங்கி உணவு உண்ணப்படுகிறது.

=> தீபாவளிக்கு அடுத்த நாள் பௌர்ணமி. பௌர்ணமியின் இரண்டாம் நாள் பாய்தூஜ். இது சகோதர சகோதரிகளுக்கான நாள். சகோதரிகள் சகோதரனுக்கு நெற்றியில் டீக்கா எனப்படும் குங்குமம், அரிசி, குங்குமப்பூ கலந்த திலகமிட்டுப் பரிசுகள் வழங்குவர். பதிலுக்கு சகோதரரும் சகோதரிகளுக்கு இனிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்குவர். அந்த நாள் முழுக்க சகோதரனும் சகோதரியும் ஒன்றாக உணவருந்திப் பேசிக் களிப்பதற்கான நாள்.

=> தலை தீபாவளி கொண்டாடும் பெண் கணவன் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனும் முறை பஞ்சாபில் உள்ளது. திருமணமான தம்பதிகளின் முதல் தீபாவளியும் குழந்தையின் முதல் தீபாவளியும் மிக முக்கியமானது. இரண்டுமே கணவன் வீட்டிலேயே கொண்டாடப்பட வேண்டியவையும் கூட.

=> பீகாரில் தீபாவளி அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தீபாவளியின் ஆறாம் நாளான “சட் பூஜா”(Chhath Pooja). ஆறு நிலைகள் எனப் பொருள்படும் இந்நாளின் முக்கியத்துவம் சூரியனை ஆறு நிலைகளில் வழிபடுவதாகும். இது தாலா சட் எனவும் அழைக்கப்படுகிறது.

=> தீபாவளி முதல் சட் தினம் வரை கடும் விரதமிருந்து சூரியனை வணங்குகின்றனர். சட் தினத்தன்று சூரியோதயத்திற்கு முன்னும், சூரிய அஸ்தமனத்தின் பொழுதும் இரு வேளைகள் நீர்நிலைகளுக்கு சென்று மலர்கள், இனிப்புகளைத் தண்ணீரில் விட்டு சூரியனைப் பார்த்துத் தொழுது கோரிக்கைகள் வைக்கின்றனர். நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் சட் பூஜையைக் கடைபிடிக்கின்றனர்.

=> கல்கத்தா மற்றும் வங்காளத்தில் காளி மாதாவைத் தரிசித்துப் பூஜித்து தீபாவளி தினத்தைத் தொடங்குகின்றனர். காளி மாதா மிகவும் உக்கிரமானவளென்பதால் அவள் துணையிருந்தால் எல்லா தீய சக்திகளும் அழிபட்டுத் தொடரும் நாட்கள் இனிதாய் இருக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக தீபாவளி தினத்தன்று புத்தாடையோ அல்லது புதுப் பொருட்களோ வாங்கும் வழக்கம் பெங்காலில் இல்லை. இனிப்புகள் மட்டுமே வாங்கப்படுகின்றன.

=> ஜம்மு அண்ட் காஷ்மீரில் பெங்காலுக்கு நேரெதிர்க் கொண்டாட்டங்கள். பொதுவாக வாங்கப்படும் அனைத்துப் புதிய பொருட்களும் தீபாவளி தினத்தன்று வாங்குவதாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆடைகள், தங்கம், வாகனங்கள், வீடு எனப் பெரும்பாலான வரவுகள் தீபாவளியன்றே நிகழ்கின்றன.

=> ஜம்முவில் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே அக்‌ஷய திருதியையும் தீபாவளிக்கு முன்னரே வருவது. இதன் காரணம் தீப நாளில் தங்கமும் பெருக வேண்டுமென்பதே.

=> களிமண்வீடுகள் அதிகளவிலிருக்கும் ஹிமாச்சலில் வீடுகள் சாணத்தால் மெழுகப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. பொதுவாக மூதாதையர்களை நினைவு கூறும் தினமாக தீபாவளி தினம் சிறப்பிக்கப்படுகிறது. சிறுமிகள் களிமண் பொம்மைகள் அல்லது பானைகள் செய்து அதற்கு சிவப்பு நிற வண்ணமிட்டுத் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிப்பது வழக்கம்.

=> ராஜஸ்தானிகளுக்கும் மிகச் சிறப்பான தினமாக தீபாவளி நாள் உள்ளது. ராஜஸ்தானிகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாலாடை கச்சோரி, எள்ளுருண்டை, சோன்பப்டி, ஜிலேபி, பிஸ்தா பர்ஃபி போன்ற பலகாரங்கள் வீட்டிலேயே செய்யப்பட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகிக்கப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், புதிதாய்ப் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு தீபாவளி மிகச்சிறப்பானது. தவிர, குளிர்காலத்தை வரவேற்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

=> தீபாவளியிலிருந்து எட்டாம் நாள் கோவர்த்தன பூஜை தினமாக வழிபடப்படுகிறது. வட நாடுகளில் கிருஷ்ண பகவான் இந்திரனைத் தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக் கிராம மக்களை மழையிலிருந்து காத்த திருநாள் கோவர்த்தன பூஜா தினம். இது குஜராத்தின் விக்ரம் சம்வத் காலண்டரின் முதல் நாள்.

=> தீபாவளிக்கு அடுத்த நாள் விஷ்வகர்மா தினம். அனைத்து தொழில் செய்வோரும் தங்கள் எந்திரங்களுக்கு பூஜை செய்யும் நாளிது. பொதுவாக புதுக்கணக்குகள் இந்த நாளிலேயே தொடங்கப்படுகிறது. இத்தினத்தன்று எந்த தொழிலதிபரும் தொழிலுக்கு விடுமுறையளித்து மூடுவதில்லை.

=> இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் மற்றும் ஜெய்ன் சமயத்தவரும் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டாடுவதற்கான காரணங்கள் வெவ்வேறானவை.

=> ஜெய்ன் சமய குரு மஹாவீரர் முக்தி / மோட்சம் அடைந்த நாளாக தீபாவளி ஜெய்ன் சமயத்தினரால் வழிபடப்படுகிறது. இது ஜெய்ன் மக்களிடையே துக்க நாளாக அனுஷ்டிக்கப்படாமல் அவர்களின் குரு ஞானஒளி அடைந்த புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.

=> முகலாய மன்னர் ஜஹாங்கிரால் சிறையிலடைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாம் குரு ஹர்கோபிந்த் சிங் குவாலியர் கோட்டையிலிருந்து 1916இல் விடுதலை செய்யப்பட்ட நாளாக தீபாவளி நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நாளில் அம்ரிஸ்தரின் பொற்கோவில் முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அவற்றின் ஒளி சுற்றியுள்ள நீரில் பட்டு ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சி.

=> நரகாசுர வத நாளாகத் தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிக்கு முந்திய நாள் லட்சுமி பூஜாவாகக் கர்நாடகாவில் துதிக்கப்பட்டு மறுநாள் தீபாவளி நரசதுர்தசியாக வழங்கப்படுகிறது.

=> மூன்று நாட்கள் விழாவாகக் கர்நாடகாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாளன்று வீடை சுத்தம் செய்து அலங்கரிப்பதும், இரண்டாம் நாள் அமாவாசை தினத்தில் பூஜையும், மூன்றாம் நாள் மஹாபலி சக்கரவர்த்தியை வென்ற வாமனனைப் பூஜிக்கும் பலிபடையாமியாகவும் கொண்டாடப்படுகிறது.

=> ஆந்திராவில் ஹரி கதா எனப்படும் மேடைப் பிரசங்கங்கள் தீபாவளியன்று பிரபலம். அத்தோடு நரகாசுரன் உருவ பொம்மைகள் வைத்து அதைக் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்களைக் கொண்டு எரித்து மகிழப்படுகிறது.

=> இந்தியாவில் மட்டுமின்றி பூர்வீக இந்திய வழிக் குடிகள் அதிகமிருக்கும் சிங்கப்பூரிலும் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே நகரமெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுவிடும். தீபாவளிக்கு விடுமுறை மட்டுமின்றி பல கலை நிகழ்ச்சிகளையும், பொருட்காட்சிகளையும் ஏற்பாடு செய்து பூர்வீக இந்தியக் குடிகளை மகிழ்விக்கிறது அந்நாட்டரசு.

=> சிங்கப்பூர் தவிர்த்து மற்ற நாடுகளில் குடும்பங்களுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் கொண்டாடும் ஒரு நாளே தீபாவளி. அதையும் மீறிய கொஞ்சம் பெரிய கூட்டமெனில் தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள். அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் பட்டாசு வெடிக்கத் தடையிருப்பதால் நம் மக்கள் தமிழ் சங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியும், கோவில்களுக்குச் சென்றும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீபாவளி 2010 - தேவதை இதழில் வெளிவந்த எனது கட்டுரை.

Monday, August 15, 2011

ஸ்திர பந்தமிது


சிறகுகளின்றிப் பறந்த கல்லூரி நாட்களின் வண்ணங்கள் நிறைந்த ஒரு ஹோலி தினத்தில் தான் அவனும் நானும் நண்பர்களானோம். ஒருவர் மேலொருவர் வண்ணங்கள் தூவி முகம் அடையாளமழிந்த பூதாகரத் தோற்றத்தில் பூத்தது அந்நட்பு. சரியாக அந்நட்பு சகோதரப் பாசமாய்ப் பரிணமிக்க எத்தனை நாட்களானதென்து என் மூளையின் ஹிப்பகேம்பஸில் சேமிக்கப்படவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பான “அண்ணா” எனும் உறவை எளிதில் யாரிடமும் உபயோகிக்கத் தயக்கம் கொண்டவள் நான். ஆனால் இவன் என் சகோதரன் என்பது மட்டும் எப்படியோ பதிந்து போனது என்னுள். அவனுள்ளும். என் நல்தோழியான அம்மாவுடனான உரையாடல்களில் “ஜனாண்ணா” அதிகமிருந்தான்.

கல்லூரி முடிந்து திரும்பும் மாலைகளில் பேருந்தைத் தவிர்த்து ஒன்றாய் நடக்கத் தொடங்கினோம். அவனுடைய பேட்மிண்ட்டன் முடியும் வரை நானும் சில நாட்களில் என் வகுப்பில் ப்ரசண்டேஷன் முடியும் வரை அவனும் காத்திருப்பது இருவருக்கும் பிடித்தமாகிப் போனது. நிறைய ரசனை பகிர்ந்தோம். ஒருவருக்கொருவர் புத்தகங்கள் பரிந்துரைத்தோம். கடைசி செமஸ்டரில் கிட்டத்தட்ட எல்லா மதிய உணவு வேளையும், மாலை நேரங்களும் ஒன்றாகவே கழிந்தன. ஒன்றாய்ப் படிக்க வேண்டுமென அமர்ந்த நேரங்களும் ஜே.கே. வின் எழுத்துகள் பற்றிய பேச்சிலேயே கரைந்து போயின. செல்ஃபோனில் அவனுக்கெனத் தனி ரிங்டோன் சேமிக்கப்பட்டது. அந்த இசை வருகையிலெல்லாம் அனிச்சையாய் “சொல்லுடா ஜனாண்ணா” என்றன உதடுகள். அவனைச் சுற்றி வந்த பெண்கள் எனக்கு அண்ணிகளாயினர். அவன் பிறந்த நாளுக்காய்ப் பகலிரவு அமர்ந்து ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்தேன். திடீரெனக் கிளம்பி நெடும்பயணம் செய்தோம். கோவில்களில் ஒன்றாய் சுற்றினோம். திரைப்படங்கள் ஒன்றாய் ரசித்தோம். கொஞ்சமாய் சண்டையிட்டோம். அதிகம் புரிந்தோம்.

“ஏய் விக்கி, நேத்து ஜனாகூட எங்கேடி போன... நீங்க அண்ணன் தங்கைன்னு எனக்குத் தெரியும். பாக்கற எல்லாரும் அப்படி நினைப்பாங்களாடி” என அரற்றிய தோழியை “சொந்த அண்ணன் கூடப் போனாலே பாய்ஃப்ரெண்டான்னு கேக்கறவங்க எங்களை மட்டும் நல்லாவா நினைச்சிடப் போறாங்க... விடுடி.. அடுத்தவங்களுக்காக வேண்டாம், நமக்காக வாழலாம். அவன் என் அண்ணன்”, தீர்க்கமாய் சொல்லிப் போனேன்.

ரக்‌ஷா பந்தன் தினத்திற்கு ஒரு வாரம் முன்பே அவன் கைகளுக்கேற்ற ராக்கி தேடியலைந்தேன். சகோதரர்களுடன் பிறந்திராத எனக்கு முதல் சகோதரனான ஜனாவுடனான அந்த ராக்கி நாளில் அலுவலகத்திற்கு விடுமுறையெடுத்து நாள் முழுவதும் அவனுடன் கொண்டாடினேன். ஆர்ச்சீஸ் பரிசுகளும், கேட்பெரீஸுமாய் கை நிறைய மனம் நிறையக் கொண்டாடினோம்.

என் அம்மாவின் சுவீகரிக்கப்பட்ட மகனானான். திருமணத்திற்கு முன்னரே என்னவரின் பெயர் தவிர்த்து “மாப்பிள்ளை”யென அழைத்தான்.

வாழ்க்கைப் பயணத்தில் இரு வேறு திசைகளில் பயணமானோம். எந்தப் போலி முகங்களுமின்றி இயல்பாய் விடைபெற்றோம். எப்போதாவது நடக்கும் தொலைபேசி உரையாடல்களும் வாழ்க்கை, பொறுப்பு, வேலை என்பதைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்தன.வாழ்வோட்டத்தில் ரசனைகளுக்கு நேரமின்றிப் போனது.
“ஏண்டா ஜனாண்ணா அப்பா சொல்ற மாதிரி வேலைக்குப் போயேண்டா”
“இல்லடா.. நான் பிசினஸ் தான் பண்ணப் போறேன். எனக்கு வேலையெல்லாம் சரிப்படாது”
“சரிடா, அதையும் கத்துக்கிட்டு செய்யுன்னு தான அப்பா சொல்றாரு”
“நீச்சலடிக்கணும்னு சொல்றேன். அதை புக்கைப் பாத்துக் கத்துக்கோங்கறாரு அவரு. நீயும் அவருக்கு சப்போர்ட் பண்றியா..”
எனத்தொடங்கும் உரையாடல் வசைகளிலும், அறிவுரைகளிலும் காரமேறிப் போகும்.
வருடம் முழுவதும் பேசாமலிருந்துவிட்டு ரக்‌ஷாபந்தனன்று வாழ்த்திக் கொள்வோம். என் ராக்கி அவனைத் தேடிச் சேர்ந்தது.

ஒரு ரக்‌ஷாபந்தனன்று காலை கைபேசியில் வாழ்த்திவிட்டு நேரமில்லா நாளின் மாலை நேரம் வேலை முடித்துப் பேருந்து நிலையம் விரைகையில் அங்கு வந்து நின்றான் என் அண்ணன். நெகிழ்ந்து போனேன். அங்கேயே ராக்கி கட்டி இனிப்புகள் பகிர்ந்து கொண்டோம்.

அவனைப் பார்க்க முடியா வருடங்களிலும் அவனுக்கென வாங்கி ராக்கிகள் சேமித்து வைத்தேன். ஒரு மாதம் முன்பழைத்து சொன்னான். “ஹேய், டெல்லில இருக்கேண்டா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு வீட்டுக்கு வரேன்.” தரைக்கும் வானுக்குமாய்க் குதித்தேன். அந்நாள் முழுதும் அவன் கதை பேசினேன் என்னவரிடம். ரக்‌ஷா பந்தனன்று பயணிக்கும்படி அலுவல் வேலை அழுத்தியது. எவ்வளவோ மறுத்தும் வேறு வழியின்றிப் போக வேண்டியிருந்தது. ஜனாவை ஒரு வாரம் முன்பே அழைத்து “நீ வந்து ராக்கி வாங்கிட்டுப் போடா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு நீயே என் பேர் சொல்லிக் கட்டிக்கோ. நான் டெல்லி ரிட்டர்னானதும் ஒரு வீக்கெண்ட் பார்த்து செலப்ரேட் பண்ணிக்கலாம்” என சோகமாய் சொன்னேன். வீடு வந்து ராக்கி வாங்கிச் சென்றான். கூடவே என் அலமாரி திறந்து புத்தகங்களும் எடுத்துக் கொண்டான். பஞ்சாபி முறைப்படி ராக்கியுடனிருக்க வேண்டிய சில பொருட்களையும் கொடுத்தனுப்பி அதைக் கட்டிக் கொள்ளும் முறையைப் பத்து தடவைகளுக்கு மேல் விளக்கிச் சொல்லியனுப்பினேன். நம்மூரில் பலருக்கும் விளையாட்டாய்த் தெரியும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை உண்மையில் விளையாட்டான விஷயமில்லை. ஒவ்வொரு உறவுக்கும் வலிமை, உண்மை இருப்பது போல் இதற்கும் ஒரு உறுதியுண்டு. அண்ணன்-தங்கை உறவும் புனிதமானதே. அதை யாரேனும் கேலியாக்குகையில் கோபம் பொங்குகிறது.

இந்த ரக்‌ஷா பந்தனன்று நான் கொடுத்த ராக்கியை முறைப்படிக் கட்டிக் கொண்டானாம். எந்த முறைகளும் தெரியாமல் கோவையில் கொண்டாடி மகிழ்ந்த ரக்‌ஷாபந்தனின் இனிமை இப்போது ஏனோ இல்லை. எனக்கு ஏனோ இவ்வருடம் இன்னும் ரக்‌ஷா பந்தன் வரவில்லை. என் அண்ணன் கேட்பெரீஸூடன் வரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்.

மிஸ் யூ ஜனாண்ணா.

Sunday, March 27, 2011

Our Moms always rock

ஒரு மாதம் அம்மா வீட்டில். வருடம் இப்படி ஒரு மாதம் கிடைத்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால் எப்போதும் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டுமெனவா பிரார்தித்துக் கொள்ள முடியும்.. ஒவ்வொரு பயணமும் தூக்க முடிந்த பெரு மூட்டையளவு அனுபவங்களைத் தருகிறது. அவைகளுக்கு இப்பயணத்திலும் குறைவில்லை.

இப்பயணத்தின் எதிர்பாரா சந்திப்பு கவிஞர் நேசமித்திரனுடனானது. "ஹலோ, சொல்லுங்ண்ணே..” என அவர் பேசிப் பார்க்கையில் அவர் எழுத்தையும் பேச்சையும் இணைத்துப் பார்த்து வரும் மிரட்சி முதன்முறை பார்க்கும் யாருக்கும் வருவதுண்டு. அப்படி ஒரு எளிமையான நட்பான மனிதர். பதிவ நண்பர் சிவாவையும், கூடவே தோழியையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு நேசமித்ரனுடன் ஆண்டாள் கோவிலடைந்தோம்.

நான் நடை பயின்றதே ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் எனலாம். தடுக்கி விழுந்தால் கோவிலென ஆண்டாள் கோவில் என் வீட்டு முற்றமாயிருந்த காலமுண்டு. நேராகப் போய் ஆண்டாளின் அழகில் மயங்கி எழுந்து வருவதே பெருங்காரியம். ஆனால் அழகு ஆண்டாளிடம் மட்டுமல்ல, அக்கோவிலின் ஒவ்வொரு தூணிலுமென சொல்லிக் கற்றுத் தந்தார் கவிஞர்.

அவர் சொல்லச் சொல்ல இத்தனை நாளாய் இவையெதையும் கண்டுணராத குற்றவுணர்ச்சியும், அவர் சொல்லும் விஷயங்களின் ஆழமும் புதுமையும் அவை மீதான சிறுபிள்ளைத் தனமான சந்தேகங்களுமென ஒரு கலக்கல் மாலை அனுபவம்.

முதன் முறையாக கற்சிற்பங்களின் அழகில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லயித்திருந்தேன். ஒவ்வொரு விஷயத்திலுமிருக்கிற கற்றலை அவர் மூலமறிய முடிந்தது. மதுரை சாயலில் பேசிக்கொண்டேயிருக்கையில் இலக்கியம் பேசுகிறார்; கவிதை கிறுக்குகிறார். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் கவிதையுடன் எவ்வளவு நேரம் வாழ முடியும். இவரின் ஒவ்வொரு வினாடியும் கவிதையுடனேயே ஆரம்பித்து முடிகிறது. கொஞ்சம் மிரட்சியுடனும் அதிக மரியாதையுடனுமே அவர் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னை விட அதிகமான ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிவா அடுத்து ஒரு நாள் முழுக்கக் கவிஞர் பற்றியும் அவரிடம் விவாதித்த விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். (கவிஞன்யா!)
*************************************************************************************************************

ஏற்கனவே யோகிக்கும் எனக்கும் புத்தக அலமாரியால் வரும் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தடிமனான என்சைக்ளோபீடியாக்களும், டெக்ஸ்டைல் மற்றும் ஐடி ரெஃபெரென்ஸ் புத்தகங்களும் அவற்றின் பரிமாணங்களையொத்த நாவல்களுமென ஆறடுக்கு அலமாரியின் நான்கடுக்குகளை எடுத்துக் கொண்டு விட்டார். மீதியிருக்கும் என் இரு அடுக்குகளிலும் அவ்வப்போது வாடகைக்கு அவர் புத்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை எடுத்து த்ரோபால் விளையாடுவது என் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இனி அது முடியாதெனும் அளவுக்கு அவ்வடுக்குகளை நிறைக்க புத்தகங்களை ஊரிலிருந்து வாரி வந்துள்ளேன். நான் வாங்கிய புத்தகங்கள் போதாதென நண்பர்களிடமிருந்தும் பரிசாகப் புத்தகங்கள். மொத்தம் பதினைந்து கிலோவுக்கு. இனி யோகி ஒரு துண்டு காகிதம் வைக்க வேண்டுமென்றாலும் கூட இடமில்லை.
(வழக்கம் போல வாங்கிட்டு வந்தாச்சு. வாசிக்கறது எப்போதுன்னு தான் தெரியல..)

*************************************************************************************************************

சென்னை - எனக்கு மிகப் பிடித்த ஊர். காரணம் இதுதானெனக் குறிப்பிட்டுச் சொல்ல சிறுவயதிலிருந்து தெரியவில்லை. எல்லோருமாய் குடும்பத்துடன் மஹாபலிபுரம் போனோம். அங்கே இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 ரூபாயெனவும், வெளிநாட்டவருக்கு 250 ரூபாயெனவும் எழுதப்பட்டிருந்தது. நான் பார்த்த வரையில் இம்மாதிரியான கட்டண வித்தியாசம் எல்லா இந்திய நகரங்களிலும் உள்ளது.
உடனிருந்த அங்கிள் டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டார்..
“ஏங்க, நமக்கு மட்டும் 10 ரூபா.. வெளிநாட்டுக்காரங்களுக்கு 250?”
பதில் சொன்னவர் தெரியாதென சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அவர் சொன்ன பதில்...

“ஏன்னா அவங்க வெளிநாட்டுக்காரங்க”
”போயாங்......” மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

*************************************************************************************************************

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல் பதிவுலகம் அதிக உற்சாகத்துடனும், சுவாரஸ்யப் பதிவுகளுடனும் இனி எப்போதிருக்கும் என்ற ஏக்கமும் கேள்வியும் தொக்கி நிற்கின்றன. ஒரு வேளை பதிவுலகம் அப்படியே தானிருக்கு, நான் தான் எழுதலையோங்கற கேள்வியும் அடிக்கடி வந்து போகுது. ரெண்டும் தான்னும் தோணுது. ஏன்.. ஏன்... அப்படின்னு கேள்வி உள்ளுக்குள்ள எக்கோ ஆகறதுக்கு முன்னாடி வாசிப்பு அதிகரிக்கையில் எழுத்து குறையுமெனும் தர்க்கமும் வருது. இல்ல, யஹூ, ஆர்குட், ஃபேஸ்புக் மாதிரி ப்ளாகும் சீசனல் தானான்னும் தெரியல. இருந்தாலும் அடிக்கடி நிகழும் பதிவர் சந்திப்புகளும், வாசித்த புத்தகங்கள் மனதிற்குள் ஏற்படுத்தும் தாக்கமும் ப்ளாகை இன்னும் கொஞ்ச நாட்கள் கொண்டு போகுமெனத் தோன்றுகிறது. (எழுதாம இருக்கற சோம்பேறித்தனத்துக்கு என்னெல்லாம் சாக்கு..)

*************************************************************************************************************

மெயிலில் ரசித்தது:

2011 வேர்ல்ட் கப்பை இந்திய அணி 100% நிச்சயம் ஜெயிக்கும். ஏன்னா...


















virenderR shewag
sachin tendulk
Ar
yuvra
J singh
gaut
Am gambhir
yusuf patha
N
ms dhon
I
virat
Kohli
harbh
Ajan singh
zaheer kha
N
s sreesan
Th
r as
Hwin

(எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க :) )

*************************************************************************************************************

அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கையில் தங்கை என்ன செய்கிறாளெனக் கேட்டேன்.
அம்மாவின் பதில் “அவ சங்கீத பரம்பரைல இருந்து வந்திருக்காள்ல. அதனால காலைல எழுந்ததுல இருந்து காலேஜ் போற வரை டிவி அல்லது சிடி ப்ளேயர்ல பாட்டு ஓடணும். சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து படுக்கப் போற வரைக்குமும் அதே தான்.”
பாட்டுக் கேக்கறது குத்தமாய்யா.. எப்போதோ வாசித்த ஒரு குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது.

அம்மாக்கள் குழந்தைகள் இரவு படுக்கப் போகும் முன்:

England Mom: Good Night Dear
Gujrathi Mom: Shubh Raat Beta
Pakistani Mom: Shaba Khair
Tamil Mom: நான் அந்த மொபைலை தூக்கி அடுப்புல போடப் போறேன் பாரு. தூங்கப் போறியா இல்லையா.. (Our moms always rock. :) )

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைய எத்தனித்த பொழுது வழக்கமான சாவி தேடும் படலம் ஆரம்பமானது. யோகி உதவுவதாய் ஹேண்ட்பேக்கைப் பார்வையிட்டார்.
ஒரு அலட்சியப் பார்வையுடன், “Its not that easy to find something from a lady's purse" என்றவாறே அவர் பக்கமிருந்து பையை என் பக்கமிழுத்தேன்.
சட்டென்று சாவியை எடுத்து விட்டுச் சொன்னார் “For that you need to have a man's eye"
(அட! )

Monday, February 14, 2011

குட்லக் பாய்ஸ்!!!


காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது. இந்தக் காதல்ல இருக்குறவங்க எப்போ பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா அலையுறாங்களே அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு நம்ம காதைத் தீட்டி ஒட்டுக் கேட்டோம்ன்னா பெரும்பாலும் “ம்” தான் இருக்கும். ரெண்டு பேரும் மாறி மாறி “ம்” கொட்டிப்பாங்க. அடிக்கடி “வேற” அப்படிம்பாங்க. அப்படின்னா பேச ஒண்ணுமில்லை ஃபோனை வைப்பாங்கன்னு அர்த்தமில்லை. பேச ஒண்ணுமே இல்லைன்னாலும் பேசுறதுல ரொம்ப சிரத்தையா உலகத்தையே மறந்து பேசிக்கிட்டிருக்குற இவங்களைப் பார்த்தா வினோதமா இருக்கும்.


காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.


1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.


2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.


3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ அல்லது அலுவலகத்துல யார்கிட்டேயாவது டோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டாலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.


4. உங்க காதலியோட எப்போ வெளில போனாலும் அவங்க கைல இருக்குற பெரிய பேகை நம்பிப் போகாதீங்க. அதுல பணம் தவிர எல்லாக் குப்பையும் இருக்கும். ஆனாலும் அவங்க எல்லாத்துக்கும் தானே பே பண்ற மாதிரி சீன் போடுவாங்க. ம்ஹூம், 2 ரூபாய் ஹேர்ப்பின்ல இருந்து 2000 ரூபாய் டெட்டி பியர் வரைக்கும் நீங்களே தான் செலவு பண்ணனும். பண்ணுங்க. எல்லாத்தையும் மொத்தமா அவங்கப்பா கிட்ட பின்னாடி வாங்கிக்கலாம் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா.


5. காதலியை வெளில சாப்பிடக் கூட்டிட்டுப் போய் நீங்க வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விடாதீங்க. அப்புறம் அம்மணி உங்ககிட்ட இருந்து ஆறடி தள்ளிப் போயிடும்.


6. முடியும் போதெல்லாம் “ஐ லவ் யூ” சொல்லுங்க. பல நாட்கள் இது மட்டுமே பேச்சா ஓடலாம். உங்களுக்கு சொல்ல போரடிச்சா ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு அவங்க ஃபோன் பண்ணும் போது போட்டு விட்டுடுங்க. அந்த ஒரே டயலாக் கேட்டே அவங்க மனசு குளிர்ந்துரும்.


7. எப்போவுமே உங்க குடும்பத்தைப் பத்திப் பேசாதீங்க. அவ்ளோ தான். இப்போவே மாமியார் துவேஷம், நாத்தனார் கடுப்பெல்லாம் ஆரம்பமாகிடும். ஆனா அவங்க குடும்பத்தைப் பத்தி அவங்க சொல்லும் போது பொறுமையா கேளுங்க. முடிஞ்சா அவங்க கையைப் பிடிச்சுகிட்டோ இல்லைன்னா தலையைத் தடவிட்டோ கேளுங்க. அப்பப்போ ஒரு “ம்” மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.


8. அவங்க என்ன ட்ரெஸ் போட்டிருந்தாலும், என்ன மேக்கப் போட்டிருந்தாலும் “வாவ்”ன்னு ஒரு வார்த்தை சொல்ல மறக்காதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கூட. ஆனா உங்க ட்ரெஸ் நல்லா இல்லைன்னு அவங்க சொன்னா அதை ஏத்துக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்கு ரசனை அதிகமாம்.


9. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க. கல்யாணத்துக்கப்புறம் தவறிக் கூட சமையலறை பக்கம் போக மாட்டாங்க. போனாலும் நீங்களே வேண்டாம்ன்னு தடுக்குற அளவுக்கு டெரரா சமைப்பாங்க.


10. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.


11. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....


12. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை வாங்குறதோட பர்ஸ் காலியாகுற அளவுக்கு ஐட்டங்களும் வாங்கிக் குடுக்கணும். ஏன்னா பொண்ணுங்க கெமிஸ்ட்ரி உங்க கூட ஒத்துப் போகுதோ இல்லையோ, தங்கம், வைரம்ன்னு நகைகள் கூட நல்லா ஒத்துப் போகும். ஆனா அவங்களுக்காக நீங்க மணிக்கணக்குல காத்திருக்குறதோட இல்லாம அதை ஒரு தடவை கூட சொல்லிக் காட்டிடாதீங்க.


இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.

(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)

Wednesday, January 19, 2011

மதன்-மது-அது

அவளுக்காகவே அன்று அலுவலகத்தில் பாதி நாள் விடுமுறையெடுத்து வீடு திரும்பினான் மதன். சாவியின் ‘க்ளுக்’ சத்தம் கூடக் கேட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து அவளை ஆச்சரியப்படுத்த நுழைந்தவனின் உடல் அதிர்ந்து நடுங்கியது. ஹாலின் சுவர் ஓரமாய், முகம் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு உள்ளே மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தாள் மது. சுவாசமே ஒரு நொடி நின்று போயிருந்தவன் அவசரமாய் ஓடி அவளை விடுவித்துத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசிக்கையில் அவளை விட அவனுக்கு அதிகமாய் இதயம் படபடத்தது.

“என்னடா இதெல்லாம்” மதனின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
“சும்மா ஒரு முயற்சி தான், ஆனா சாக மாட்டேன்”
“.........ஆமா, இது நாலாவது தடவ. எனக்கென்னவோ பயமா இருக்கு”
“பயப்படாதீங்க, ஒண்ணும் ஆகாது. இந்த தடவை நிறைய எக்ஸ்பீரியன்ஸ்” அந்த சோர்விலும் சிரித்தபடி சொன்னாள்.

கூடவே அவள் கையில் ஒரு கடிதம்.

“தற்கொலைன்னா என்ன, அது எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கத் தான் முயற்சிக்கிறேன். இதுல எதுவும் விபரீதமாகி என் உயிர் போச்சுன்னா அதுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க என் மரணத்திற்கு நானே காரணம். - இப்படிக்கு மது.”

முறைத்த மதனைப் பார்த்துக் கெஞ்சலாக, “இல்லைங்க, உண்மையிலேயே உயிர் போய்டுச்சுன்னா என்னால உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்திடக் கூடாதுல்ல. அதான். சாரிப்பா” என்றவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது அவனுக்கு.

மது அழகில் குறைந்தவளில்லை. வளைந்த புருவங்கள், நீள மூக்கு, நேர்த்தியான பல்வரிசை, தொட்டாலே சிவக்கும் நிறம், சுண்டியிழுக்கும் அழகு. எம்.ஏ.சைக்காலஜி முடித்திருந்தவள், திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாததால் வீட்டிலிருந்தாள்.

இவளைத் தனிமையில் விட்டிருப்பது தவறோ? இவளுக்கு இப்படி ஒரு விபரீத சிந்தனை எப்படி வந்தது? மரணம் என்றால் என்ன, தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் ஒருவருக்கு வருகிறது, உண்மையில் தற்கொலையின் போது அதை மேற்கொள்பவரின் மனஓட்டம் எப்படி இருக்கும் என்ற விசித்திரக் கேள்விகளுக்கு விடை தேடுகிறாளாம். பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அவள் மீதான அதீத காதல் அவளைக் கடுமையாகக் கண்டிக்கவோ தண்டிக்கவோ தடுத்தது.

திருமணமான புதிதில் அவள் திடீரென ஆழ்ந்த யோசனைக்குப் போய்விடுவதை மதன் கவனிக்கத் தவறவில்லை. அதுவே படிப்படியாய் இப்படி சோதனை முயற்சிகளுக்கு வந்த போது அவன் ரொம்பத்தான் கலங்கிப் போனான். என்னதான் சைக்காலஜி படித்திருந்தாலும் இப்படித் தற்கொலை அனுபவத்தை உணர்ந்து பார்க்க வேண்டும் என்ற அவளது விபரீதமான ஆசை கொஞ்சம் அதிகம் தான். இதுவரை 4 வெவ்வேறு தற்கொலை முறைகளை முயற்சித்து விட்டாள்.

இரண்டாவது முறை முயற்சித்த போதே இந்த விஷயத்தை அவளது பெற்றோருக்கும் தெரிவித்துக் கண்டிக்க சொன்னான். ஆனால் “கல்யாணத்துக்கு முன்னாடியும் முயற்சி செஞ்சிருக்கா. இனி நீங்களே திருத்துங்க” என்பதே அவர்களின் பதிலாகவும் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

இருவரும் அப்படி ஒரு கச்சிதமான ஜோடியாகத் தான் இருந்தார்கள். விரைவாய் நகரும் பெங்களூரின் ஜெய் நகரிலிருக்கும் இந்த ஃப்ளாட்டிற்குக் குடி வந்து ஆறு மாதங்களாகின்றன. அமைதியான, சகல வசதிகளும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடம். ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் அவர்கள் திருமணம் பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு தஞ்சாவூரின் ஓரியண்டல் டவர்ஸ் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது. முதல் ஒரு வருடத்திற்குக் குழந்தை வேண்டாமென முதலிரவிலேயே தீர்மானித்து விட்டனர். வழக்கமான கொஞ்சல்களுடன் இனிமையாய்ப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. ஒரு முறை கூட அவளைப் பெயர் சொல்லி அழைத்திருக்க மாட்டானவன். செல்லம், அம்மு, குட்டி தான். அவ்வளவு நேசித்தான் அவளை.

ஐ.டி.கம்பெனியொன்றில் குறைவில்லாத சம்பளமும் கட்டுக்கடங்கா வசதிகளும் கொடுக்கப்பட்டிருந்த உயர் பதிவியிலிருந்தான் மதன். “டேய், நீ காக்க காக்க சூர்யா மாதிரி இருக்க. ஆஃபிஸ்ல எத்தனை பேர்டா சைட்டடிக்குறாளுங்க உன்னை” என அவன் மீசை இழுத்து அவள் கேட்கும் நேரங்களில் “அடியே, என்னால உன் ஒருத்தியையே சமாளிக்க முடியல. இன்னொன்னா... வேண்டாம்மா” என குறும்பாய்ச் சொல்லி அவள் காது கடிப்பான்.

பலதும் ஏனோ நினைவிற்கு வந்தது. அந்தப் பாலிதீன் பை குப்பைக்குப் போய் 3 மணி நேரமாகியும் மதன் அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் இருந்தான். எதுவுமே நடக்காதவளாய் மது படுக்கையில் ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

இப்படியே விட்டால் ஆபத்து என அடுத்த வாரமே அவளை கூர்க் அழைத்துச் சென்றான். இரண்டாவது தேனிலவு. மூன்று நாட்கள் முழுவதுமாய் அவளுடனிருந்தான். நிதானமாய் அவளிடம் பேசிப் புரிய வைத்தான். இனி இந்த விளையாட்டுத் தனங்களெல்லாம் கூடாது எனத் திட்டவட்டமாய்க் கூறினான். உறுதி வாங்கினான். “ப்ராமிஸ் டார்லிங்” என அவன் தலையிலடித்து அவள் சத்தியம் செய்த போது நெகிழ்ந்து போனான்.

அன்றிலிருந்து சரியாக ஆறு மாதம். அவர்களது திருமண நாள் அன்று. அவள் பரிசளித்த வெளிர் நீல நிற நேர்கோடுகளிட்ட சட்டையும், அடர் நீல நிற பேண்டும் அணிந்து கம்பீரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
“லுக்கிங் ஸ்மார்ட். ஹேப்பி வெட்டிங் அனிவெர்ஸரி. வேர் இஸ் த பார்ட்டி” என்ற நண்பனுக்குப் புன்னகைப் பரிசளித்தான்.

“பார்ட்டி இஸ் ஒன்லி வித் மை வொய்ஃப்” கண்ணடித்துப் பதிலளித்தான்.

மதிய சாப்பாடை முடித்து விட்டு அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் அவனது ப்ளாக்பெரி சிணுங்கியது.
“சார் இல்லி ஜெய்நகர் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமேஷா மத்தாடுத்தாயிதினி”

மதனின் கண்கள் பெரிதாயின. கைகள் விறைத்தன. செய்தி கேட்டு சுற்றி இருந்தவர்களும் அதிர்ந்தனர்.

“பை டார்லிங்” எனக் காலையில் முத்தமிட்டு வழியனுப்பியவளின் உடலைச் சுற்றி கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர் ரமேஷ், “நஞ்சு தாகொண்டிதானே” என்றவாறு அவளருகிலிருந்த கடிதத்தை அவனிடம் காண்பித்தார். முதல் முறை எழுதியிருந்த அதே வாசகங்களுடனும் அவளின் அழகிய கையொப்பத்துடனும். “பாவி கல்யாண நாளன்னிக்கா இப்படிப் பண்ணி வைக்கணும்” ஃப்ளாட்டில் பலரின் முணுமுணுப்பாக இருந்தது.

ஓங்கிக் குரலெடுத்து அழுத மதனை நண்பர்கள் தேற்ற முயற்சித்துத் தோற்றனர். மறுநாள் உறவினர் அனைவரும் வந்து சேர எலெக்ட்ரிக் க்ரிமேஷன் மூலம் பஸ்பமாகிப் போனாள் மது.

ஒரே மாதம். திட்டவட்டமாகத் தற்கொலை, அதுவும் சைக்கோத் தனமான தற்கொலை. இதற்கு யாரும் காரணமல்ல என அப்பெண்ணே கைப்பட எழுதிய கடிதம். அவளின் பெற்றோரே அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததாய் வாக்குமூலமளிக்க, மதுவின் கேஸ் மூடப்பட்டு ஃபைல் அலமாரிக்குப் போனது.

ஆனால் மதனால் தான் மதுவின் நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை. அவற்றில் பலவும் இனித்தன. கடைசியாய் ஒன்று மட்டும் அவன் மனதை ரம்பமாக அறுத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் கல்யாண நாளாச்சே என்று அவளை ஆச்சர்யப்படுத்த, ரகசியமாய் அவளுக்கு வாங்கி வந்திருந்த அந்த வைர நெக்லஸை அவளது பீரோவில் ஒளித்து வைக்கும்போதுதான் அங்கே ஏற்கனவே ஒளிந்திருந்த அந்த டைரி ஒரு பூனைக்குட்டியாய் வெளிவந்து விழுந்தது.. யதேச்சையாய் அதைப் புரட்டியவன் சில பக்கங்களில் அதிர்ந்து போனான். படித்தவனின் மனசெல்லாம் ரத்தம்.

அவளது கல்லூரிக் காதலன் யுவனைப் பற்றிய ரகசிய பரிமாற்றங்கள், சந்திப்புகள், திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்கிற திட்டமிட்ட நுணுக்கம்.... மதன் உடைந்தே போனான். என் மதுவா? ஆனால்... கூடவே யுவனுடான கலர் கலர் படங்கள் ‘ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ?’ என்று கேட்டு அவனைப் பார்த்து பல்லிளித்து நகைத்தன.

விடிந்தால் முதல் திருமண நாள். இப்படி ஒரு ஏமாற்றமா? மதன் முடிவு செய்து விட்டான்.

கையிலிருந்த வில்ஸ் சுடுகையில் தன்னிலைக்கு வந்தான். அவளின் நினைவுகளால் ஆக்கிரமித்திருந்த அந்த தனிமையான மாலையில் தன்னறையிலிருந்த அவளின் டைரியை இறுதியாய் ஒரு முறை பார்த்து, எரித்து ஃப்ளஷ் செய்தான். கரும் திப்பிகளாய்க் கரைந்தன யுவனுடனான மதுவின் தொடர்ந்த காதலும் மதனை ஏமாற்றி அவர்கள் சந்தித்ததன் அடையாளங்களும். வேர்ல்பூலிலிருந்து குளிர்ந்த நீர் எடுக்கப் போனவனுக்குக் கண்ணில் பட்டது கடைசியாய் அவளுக்கு மட்டும் கலந்து கொடுத்த ரோஸ்மில்க் எசன்ஸ். சலனமற்றிருந்த வீட்டில் இவன் காதுகளில் மட்டும் அவளின் முத்த சத்தம்.

Wednesday, January 5, 2011

முத்த மார்கழி



காகிதத்தில்
காதல் செதுக்கி
நீட்டினேன் கிறுக்கலாய்.
எனக்காகவா எழுதினாய் என்கிறாய்.
என் மொழியே நீயாகிவிட்ட பின்
வார்த்தைகள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும்...

****************************************************************************************************

முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை எப்போதும்.
அதிகாலை விழிப்பு
தேனீர் வெதுப்பு
ஈரக்கூந்தல் துவட்டல்
விரையும் அலுவல் போது
வீடடையும் அந்தி
கொட்டும் இரவுப் பனி
கூடிக்களையும் சாமம்
சாத்தியம் எதுவாயினும்
உன் வன்முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை
ஒரு போதும்

****************************************************************************************************

அசந்து உறங்கிக் கொண்டிருந்த
பின்னிரவில் அழைத்தாய்
நீளாத முன் தூறல் பேச்சு
ஒற்றைக் கன முத்தத்துடன்
துண்டித்தாய் தூரபேசியை.
நீ தூங்கிப் போனாய்.
நான் தான்-
இரவின் வளர்சிதை மாற்றத்திற்கு
விடியல் வரை சாட்சியாய்.

****************************************************************************************************

எந்தப் பூவெனத் தெரியவில்லை.
தெருவோரத்து மரத்திலிருந்து
வீதியெங்கும் வாசம் நிறைக்கிறது.
உயிருருக்கும்
மார்கழி வைகறைக் குளிரில்
மொட்டை மாடி பிறை சந்திரனுக்குத் துணையாய்
தனிமையை ரசிக்கிறேன்.
விழிமூடித் தலையுயர்த்துகிறேன்.
கூடவே-
உன் வெம்முத்தத்தை
நினைத்துக் கொள்கிறேன்.

****************************************************************************************************

எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.

****************************************************************************************************

மீண்டெழும் இடம் தான்
வெவ்வேறாய் இருக்கிறது
ஈர்க்கும் உன் விழிகளில்
அணைக்கும் உன் கரங்களில்
ஊண் உறைக்கும் உன் முத்தங்களில்
உயிர் வாங்கும் உன் ஸ்பரிசத்தில்.
விரும்பித் தொலைகிறேன்
ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்.