அங்கே போய் நல்லா அருவியிலேயும், காட்டுலேயும் ஆட்டம் போட்டு ரிசல்ட் டைம்ல வீடு வந்து சேர்ந்தா நம்ம குடும்பமே பாச மலர் சிவாஜி ரேஞ்சுக்கு பீலிங்ல உக்காந்து இருப்பாங்க. "என்ன மார்க் எடுக்கப் போறாளோ, நம்மள தலை நிமிர வைப்பாளா அல்லது ஒரேடியா குனிஞ்சே நடக்க வச்சிருவாளா.... அடுத்து படிக்க வைக்க நல்ல ஸ்கூல் அல்லது காலேஜ் கிடைக்குமா.... " இது போன்ற வசனங்களைத் தாங்க வேண்டியிருக்கும். இதுக்கு நடுவுல தங்கச்சி வேற இளிப்சைக் குடுத்திட்டு நிப்பா.
எனக்கும் ரிசல்ட் வந்தது. 2 முறை. முதல்ல பத்தாம் வகுப்புல. பள்ளிக்குப் பக்கத்திலேயே என் வீடு. அப்போவெல்லாம் இன்டர்நெட்ல மார்க் பாக்குறது குறைவு. நான் என் அண்ணா கிட்ட நம்பர் குடுத்து, அவன் அதை எடுத்துட்டு சிவகாசி போய்ட்டான் மார்க் பார்க்க. வீட்டுல ஒரே டென்ஷன். ஐயோ, என்ன மார்க் வரப் போகுதோ. மாமா பையன விட குறைய எடுத்திட்டா அம்மா கேசரி பண்ணித் தர மாட்டாளே. சித்தி பொண்ணை விட குறைஞ்சிட்டா, அவ அதை சொல்லிக் காமிப்பாளோனு என்னென்னவோ மனசில ஓடுது. ரிசல்ட் வந்திடுச்சு. விக்னா 92% னு அண்ணன் போன் பண்ணி சொல்லிட்டான். மாமாவும் போன் பண்ணி வாழ்த்திட்டார். இருந்தாலும் மருமகள நேர்ல வந்து வாழ்த்துறேன்னு அம்மா கிட்ட கேசரி பண்ண சொல்லிட்டு குடும்பத்தோட வந்திட்டார். அம்மா கேசரி பண்ணி, எல்லாரும் சாப்பிட்டு பயங்கர புகழ்ச்சி வேற. (புகழ்ச்சி கேசரிக்கு இல்ல, எனக்கு) அது கேசரிய விட இனிமையா இருந்தது. அப்படியே வாய மூடிட்டு சாப்பிட்டு இருந்திருக்கலாம். "அம்மா, வாங்களேன். ஸ்கூல் வரைக்கும் போய் எல்லாரையும் பார்த்திட்டு வரலாம்" னு நான் சொல்ல, அம்மாவும் சரினு கிளம்பிட்டாங்க. ஆனா, அங்கே தான் சனி என்னை எதிர்பார்த்துக் காத்திட்டிருக்குனு எனக்கு தெரியாம போச்சு.
போனதும் தமிழ் மிஸ்ஸின் வாயிலிருந்து நல்வார்த்தை. "நாயே நாயே ஒரு மார்க் கூட எடுத்திருந்தா நீயும் தமிழ்ல ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கியிருக்கலாம்ல. அதை ஏண்டி விட்ட வெங்காயம்" எங்க தமிழ் மிஸ் எப்போவுமே இப்படி தான் தூய தமிழ்ல பேசுவாங்க. பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு அந்த பக்கம் போனா மேத்ஸ் மிஸ். "என்ன விக்னேஷ்வரி, சென்டம் இல்லையா...." லேசாக அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டேன். இதையெல்லாம் அடுத்து க்ளாஸ் மிஸ்ஸும், என் ஏழாம் வகுப்பு தமிழ் மிஸ்ஸும் வந்தனர். "என்ன விக்னேஷ்வரி, நீ தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்னு மார்க் சீட் வந்ததும் உன் பேரைத் தான் பார்த்தோம். ஆனா, இப்படி பண்ணிட்டியேமா" எனக்கு ஏதோ பெரும் தவறு செய்து விட்டதைப் போன்ற எண்ணம். இருந்தும் "மிஸ், ஸ்கூல் பர்ஸ்ட் யாரு?" "ரம்யா" இது மிஸ். "அவ வருவான்னு நாங்க நெனைக்கவே இல்ல." இதுவும் அவரே.
"ஓகே மிஸ். நான் கிளம்புறேன்"
முல்லை சொன்ன ஹேமாவும் ஞானசௌந்தரியும் போல் என் வாழ்விலும் ரம்யாவும் சரண்யாவும் அதிகமாகவே விளையாடினர். பயந்து கொண்டே வீட்டிற்கு வந்தால், அடுத்து பத்து நாட்களுக்கு வீட்டில் பூகம்பம் தான். ஒரு நாளும் இரவு கண்ணீரில்லாமல் தூங்கியதில்லை. சரியாக தூங்கும் நேரம் தான் அம்மா ஆரம்பிப்பார். "எடுத்திருக்கா பாரு மார்க். யார் கிட்டேயாவது சொல்ல முடியுதா.... ஸ்கூல் பக்கம் தலை காட்ட முடியல. அடுத்து நீ அந்த ஸ்கூல்ல படிக்க வேணாம். எனக்கு மானமே போகுது" என்ன சொல்லவெனத் தெரியாமல் கண்ணீரிலேயே தூங்கிப் போனேன். ஆனா, அப்பாவின் சப்போர்ட் உண்டு.
இப்படியாக வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் +1, +2 க்கு. அங்கு போனதிலிருந்து பயங்கர ஜாலி, நல்ல பிரெண்ட்ஸ் வட்டம் என்று படிப்பு குறைந்தது. ட்யூஷன் அனுப்பினர். அங்கு குல்பி சாப்பிடுவது, கடலை போடுவது என ஆட்டம். எல்லாம் முடிந்து ஒரு சுபயோக சுப தினத்தில் எமகண்ட நேரத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் வந்தன. அதையும் தாண்டிக் குதித்தேன். ரிசல்ட் நாளும் வந்தது. இந்த முறை நோ ரியாக்ஷன்.
"இன்னிக்கு ரிசல்ட். உன் கிளாஸ் மேட்ஸ், பிரெண்ட்ஸ் எல்லோரும் ரிசல்ட் பார்க்க ப்ரொவ்சிங் சென்டெர் போயாச்சு. நீயும் போனா என்னம்மா....." - அம்மா.
அகைன், நோ ரியாக்ஷன்.
"செல்லம், போய் ரிசல்ட் பார்த்திட்டு வாடா".
"வேணாம்மா... "
"போடா குட்டி"
"நான் நேத்தே நம்ம தெருல என்னை சைட்டடிச்சிட்டு இருப்பானே அந்த வளந்தவன் கிட்ட சொல்லிட்டேன். அவன் பார்த்திட்டு வந்து சொல்லுவான்மா..."
"ஏண்டி இப்படிப் பொறுப்பில்லாம இருக்க. நீ போய் பார்க்க மேல் வலிக்குதா.. நான் இங்க டென்ஷன்ல இருக்கேன். உனக்கு அந்த கவலையே இல்லையே"
இதற்கு மேல் வீட்டிலிருந்தால் சுப்ரபாதம் கந்த சஷ்டியாக மாறி இறுதியாக மகிசாஷுர மர்த்தினியாக உருவெடுக்கும் எனத் தெரிந்து அங்கிருந்து கிளம்பி டிப்ளோமா படிக்கும் என் பிரென்ட் வீட்டிற்குப் போனேன். அவளும் ரிசல்ட் என்னடி என்ற கேள்வியை அம்மாவை மாதிரியே கேட்க, அங்கிருந்து கிளம்பி மற்றொரு தோழி வீடு. அவளுக்கு ரிசல்ட் வந்து விட்டது. வீட்டு வாசல் வரை அழுகைச் சத்தம். அவள் அம்மா என்னைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தும்படி கூறினார். இப்போது எனக்கும் பீதி வந்து விட்டது. விரைந்தேன் ப்ரொவ்சிங் சென்டருக்கு. வழியில் வளர்ந்தவன். என்னை வழிமறித்து நிறுத்தினான். சரி, ரிசல்ட் வந்துவிட்டது என தெரிந்து விட்டது.
"எவ்வளவு" - நான்.
"நீங்களே பாருங்க" ஒரு துண்டு காகிதத்தை நீட்டினான்.
"இல்ல, சொல்லுங்க" ஒரு பயத்துடன்.
"ஆயிரத்து முப்பத்தி..... " அவன் அதை முடிக்கும் போது நான் அங்கு இல்லை.
நேராக சைக்கிளில் வீட்டிற்கு விரைந்து உள்ளே சென்று வீட்டின் நீளமான ஹாலில் உருண்டு அழ ஆரம்பித்து விட்டேன்.
"என்னாச்சு டா" அம்மா.
"ஐயோ அம்மா நான் உங்களை ஏமாத்திட்டேன் மா. நான் என்ன பண்ணுவேன். உங்க நம்பிக்கையெல்லாம் உடைய வெச்சிட்டேனே. என்னை மன்னிச்சிடுங்கமா...."
பாட்டி சமையலறையிலிருந்து வந்தவள் என்னைப் பார்த்து பயந்து விட்டாள்.
"விடுடி, எவனாவது தப்பா போட்டிருப்பான். இன்னொரு தடவை செக் பண்ணிப் பாரு" பாட்டியின் கமெண்டிற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டேன்.
அம்மா ரொம்பவே விறைத்து விட்டாள். "அம்மா, எந்த பாடத்திலேயும் போய்டுச்சோ என்னவோ" அம்மா பாட்டியிடம் சொன்னது தெளிவாகக் கேட்டது.
"சொல்லேன் விக்னாமா எவ்வளோனு" மறுபடியும் அம்மா கேட்க அழுகைச் சத்தம் முன்பை விட அதிகமானது.
காலிங் பெல் சத்தம் கேட்டு அம்மா போய்ப் பார்த்து வளந்தவனிடம் இருந்து மார்க் அறிந்து வந்தாள்.
"செல்லம் நல்ல மார்க் தான்டா எடுத்திருக்க. அழாதம்மா."
"இல்லம்மா, நீங்க என்னை நினச்சு எவ்ளோ கனவு கண்டீங்க. நான் எல்லாத்தையும் உடைச்சிட்டேனே. இனிமே உங்க முகத்துல எப்படி முழிப்பேன்."
"இல்ல டா. நீ பேஷன் டிசைனிங் தானே படிக்கப் போற. அதுக்கு இந்த மார்க் போதும்மா. அழாத டா"
இன்னும் அழுகை தொடர்கிறது. அம்மா ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி எழுப்பி, முகம் கழுவச் செய்து ஜூஸ் கொடுத்து என உபச்சாரம் தான். பின் அப்பாவிடம் மார்க் சொல்ல அம்மா போன் பக்கம் நகர்ந்த போது,
"என்ன பொண்ணைப் பெத்து வெச்சிருக்கா உங்க அம்மா. இப்படி ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் உருண்டு அழுதுக்கிட்டு" என பாட்டி புலம்ப.
"எங்க அம்மா பொண்ணை நல்லா தான் பெத்து வச்சிருக்கா. நீ தான் சரியா பெக்கல. பாரு போன முறை எல்லாரும் நல்ல மார்க்குன்னு பாராட்டினப்போ என்னை எவ்ளோ திட்டினா அம்மா. இந்த முறை நான் இப்படி சீனைப் போட்டதால எல்லார்கிட்டேயும் என்னைப் புகழ்ந்திட்டு இருக்கா. நடக்கட்டும். நீ எனக்கு அந்த பிஸ்கட்டை எடுத்துக் கொடு"
பாவம் என்ன சொல்வாள் பாட்டி. :)