அன்புக் காதலா,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள், நான் உன்னுடன் கொண்டாடிய உன் பிறந்த நாள். உன்னுடன் நான் இருந்த முதல் மற்றும் கடைசிப் பிறந்த நாள். நினைக்கையில் லேசாக வலிக்கிறது. என் விடுதியின் visitor's room இல் உன் பிறந்த நாளை என் தோழிகளுடன் கொண்டாடினோம், நினைவிருக்கிறதா.... இன்றும் உன் பிறந்த நாளை நீ உன் மனைவியுடன் மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பாய்.
நீ முதல் முறை என்னிடம் காதலை சொன்ன போது, அதை ஏற்கவா, தவிர்க்கவா என நான் குழம்பியதால், நேரடியாக பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி, பின் காதலிக்க ஆரம்பித்தவர்கள் நாம். பெற்றோர் சம்மதித்து காதல் செய்த ஜோடி நாமாகத் தான் இருந்திருக்க முடியும்.
எப்படி மறக்க முடியும் அந்த நாட்களை. தினமும் மாலையில் ஒரு சிறிய சந்திப்பு, உடன் உணவருந்திய தருணங்கள், எப்போதாவது சென்ற திரைப்படங்கள், சேர்ந்து வணங்கிய கோவில்கள், இன்னும்....
ஒரு முறை நான் கல்லூரியில் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழ, என்னை மருத்துவமனையில் சேர்த்த என் தோழிகள், முதலில் அழைத்தது உன்னைத் தான். ஒரு வித படபடப்போடு வந்த நீ, எனக்கு ஆறுதலாய் தலை கோதி விட்டு, பின் என் அம்மாவை அழைத்து தெரிவித்தாய். அம்மா, கொஞ்சமும் பதற்றப்படவில்லை, நீ இருந்த தைரியத்தில். என் உடலும் சரியானது, உன் கவனிப்பில்.
யாரிடமும் என்னைத் தோழி என்றோ, தங்கை என்றோ சொன்னதில்லை நீ. எப்போதும், "நான் கட்டிக்கப் போறவ" என்று தானே சொன்னாய். பின் ஏன் இப்படி பாதியில் விட்டுச் சென்றாய்.
ஒரு முறை நாம் இருவரும் கோவிலுக்கு சென்ற போது மறித்த காவலர் யாரெனக் கேட்க, அப்போதும் இதையே சொல்லி, உன் அப்பாவுக்கு போன் செய்து பேச வைத்தது நினைவிருக்கிறதா.... காதலர் தினத்தன்று நீயே சமைத்து எனக்கு எடுத்து வந்திருந்தாய். அதை விட வேறு எந்த பரிசும் எனக்கு பெரிசாய் தெரியவில்லை.
ஒரு நாள் நான் உன்னை பார்க்க வேண்டும் என சொல்ல, இரவு எட்டு மணிக்கு கிளம்பி என்னை வந்து பார்த்து சென்றாய். என் கைபேசியில் எப்போதும் உன் குரல் கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. இதனாலே எனக்கு தோழிகள் மிகக் குறைவு. எனது நேரம் உனக்கே போதுமானதாய் இல்லை.
உன் நண்பர்கள் எனக்கு நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் இருந்து எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்தவர்கள். இப்போதும், உன் நினைவு வந்தால் புலம்ப உன் நண்பர் தான் உள்ளார்.
நீ டெல்லி சென்று எனக்காக வாங்கி வந்த மிக்கி மவுஸ் தான் என் Best Friend. அதை விட்டு, நான் ஒரு நாளும் தூங்கியதில்லை. எப்போதாவது நமக்குள் ஏற்படும் சிறு சண்டைகளின் போது, நான் அழுதது அதனிடம் தான். நான் வெளியூர் செல்லும் போது உனக்கென்று ஏதாவது வாங்கி வராமல் இருந்ததில்லை. சொல்லப் போனால், உனக்கு மட்டுமே ஏதாவது வாங்கி வருவேன். நீயும் தான். பரிசுப் பொருட்கள் கொடுப்பது நமக்குப் பிடிக்காதென்றாலும், அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து, "எப்போதாவது நான் உனக்கு இது வாங்கித் தரவில்லை என்ற எண்ணம் உனக்கு வரக் கூடாது" என்றாய்.
என் பிறந்த நாள் பரிசாய் நீ தந்த பச்சைப் புடவை, இன்னும் பத்திரமாய் இருக்கிறது, என் வீட்டுப் பணிப்பெண் அலமாரியில்.
உனக்கென்று நான் எழுதிய டைரி இப்போது ஏதாவது குப்பையில் உள்ளதோ, அல்லது மக்கி மரித்து விட்டதோ.... நான் உனக்கு கொடுத்த பொருட்களை நீ என்ன செய்தாய் எனத் தெரியவில்லை. ஆனால், நீ எனக்கு கொடுத்தவை மிக பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. என்ன செய்ய, உன்னை காதலித்ததைப் போலவே, என் கணவரையும் காதலிக்க வேண்டுமே. நீயும் அதே காதலுடன் உன் மனைவியை நேசிப்பாய் என எனக்குத் தெரியும். ஏனெனில் நீ எப்போதும் பெண்களை மதிப்பவன்.
நாம் பிரிந்தத்தின் காரணமாய், நம் பெற்றோரை மிகக் காயப்படுத்தி விட்டோம். உன்னை மறக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் உன் நினைவு அநியாயத்திற்கு அதிகமாகிறது. என்றாவது ஒரு நாள் நான் உன்னை நினைக்காதிருப்பேனானால், அது தான் என் சாதனை. ஆனால், இன்று வரை முடியவில்லை.
நீயும் நம் நினைவுகளை சேர்த்து வைத்துக் கொள். சில காலங்களுக்குப் பிறகு, உன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ஏதாச்சும் கதை சொல்லு தாத்தா" என வரும் உன் பேரக் குழந்தைகளுக்கு சொல்ல.