Wednesday, December 22, 2010

நாள்தோறும் நாடோடி


இருவாரங்களாக டெல்லிக் குளிரிலிருந்து தப்பித்திருந்தேன். வேலை காரணமாக மஹாராஷ்ட்ரா பயணம். புனேவுக்கும், மும்பைக்கும் அருகிலிருக்கும் வளர்ந்து வரும் தொழில் நகரமான கோலாப்பூருக்கு ட்ரிப். கோலாப்பூரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எப்போதும் மிதமான வெயில், மாலையானால் லேசான தூறல், அடிக்கடி பெருமழை, எப்போதாவது ஆலங்கட்டி மழை, எதற்கும் பதற்றமில்லாத நிதானமான மக்கள், சீராகி வரும் நகரின் உள்கட்டமைப்புகள், பெருகி வரும் தொழில், வேலை வாய்ப்புகள் என அருமையான நகரம். இந்நகரின் மஹாலக்ஷ்மி கோவில் மிகச் சிறப்பு. அத்துடன் இவ்வூரின் குடிசைத் தொழிலான தோல் செருப்புகள் தயாரித்தல் தற்போது அருகி வந்தாலும் கையால் தயாரிக்கப்படும் செருப்பிற்கென இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசாங்கம் பெருமுயற்சியெடுத்து வருகிறது. கோலாப்பூரின் செருப்புகளுக்கு உடல் வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையிருப்பதாய் சொல்கிறார்கள்.


கோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்துத் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)

*************************************************************************************************************


மும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்!” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)

*************************************************************************************************************

தமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...

*************************************************************************************************************

டெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)

*************************************************************************************************************

இரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.

நண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.

அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே!)

*************************************************************************************************************

கோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்
முன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”
நான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.
“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”
(ஙே!)

Tuesday, December 21, 2010

இனிது இனிது காதல் இனிது


இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.

காதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.

காதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.

அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.

புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.

பாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.

காதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.

பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.

புத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)
ஆசிரியர் - பாலகுமாரன்.
வெளியீடு - விசா பதிப்பகம்.
விலை - ரூ. 75 + ரூ. 68/-
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.

Tuesday, November 23, 2010

மிஸ்டர் ஆஃப் த மிஸஸ்


நம்ம மிஸ்டர்ஸோட குணங்களைப் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா.. அதுனாலதான் அடுத்த பகுதி. உங்ககிட்ட/உங்க மிஸ்டர் கிட்ட எல்லாத் தகுதிகளும் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க.

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...

=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.

=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...

=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

(மிஸ்டரின் அட்டூழியங்கள் தொடரும்)

Monday, November 15, 2010

ஒரு மாலை இளங்குளிர் நேரம்


ஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

தீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.

ஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)



*************************************************************************************************************

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.

மிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.

இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா நேரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)


*************************************************************************************************************

ஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ!)

*************************************************************************************************************

இன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி!?) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)

*************************************************************************************************************

எழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)

*************************************************************************************************************

பதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.

# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்ரேஸி சொஸைட்டி!

# ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.
“ங்கொய்யால உன் தப்புதான்டா”
அப்படிங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல
“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது.

நண்பேன்டா!

# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?

# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)

# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.

# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...

# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...

(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

தமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”
“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”
முதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்?” என்றேன் அவரிடம்.
பின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்
“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.
எல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(
(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.)

Friday, October 22, 2010

என் இனிய நட்புகளுக்கு..

ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.

இடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.

ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.

நண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.


Tuesday, October 12, 2010

மழை மரப் பறவைகள்

அன்றைய நாளின் அத்துணை இறுக்கத்தையும் நெகிழ்த்துவதாய் ஜன்னல் வழி பூமிக்கு நிழல் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது ஆகாயத்தின் துளிகள். மழை! மருதாணி கழுவிய உள்ளங்கையாய் பளிச்சென புதுசாக்கிக் கொண்டிருந்தது பெருங்குரலில்.

கூரையால் பாதுகாக்கப்பட்ட மாடித் தளத்திலிருந்து மழையைப் பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது. கீழே உற்றுப் பார்க்கும் தூரத்தில் செடியருகே ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு மரவட்டை. நீரைப் போலவே கரை புரளும் தாறுமாறான சிந்தனைகள். அலுமினியப் பாத்திரங்கள் வைத்துத் தொட்டி நிறைத்துத் தருவதாய் போலி சொற்களால் அனுமதி பெற்று, நீரூற்றாய்ப் பெருகி வரும் தற்காலிக மழையருவியில் ஆடிய ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஜோடி விடுமுறை நாட்களும் நினைவில் வந்து போயின. மழையை ரசித்துத் தொடர்ந்த உரையாடல்கள், பெரு மழை நாளில் தொடர்ந்தொலித்த வானொலி மழைப்பாடல்கள், குடையையும், ரெய்ன் கோட்டையும் வேண்டுமென்றே மறந்து வைத்து விடும் குறும்பு நாட்களென ஒவ்வொரு மழை நாளும் நினைவுகளில் ஆர்ப்பாட்டமானது.

பல வருடப் பின்னோக்கிய சிந்தனைகளிலிருந்து இருந்த நிமிடத்திற்கழைத்து வந்தது மழையின் காரணமாய்க் கேட்காமலே வந்த ப்ளாக் காஃபி. மழை ஒரு ரசனையெனில் கையில் புகையெழும்பும் காஃபிக் கோப்பை அதனினும் ரசனை. கண் மூடி மழை சத்தத்தை செவிகளுக்களித்து உதடுகளுடன் ஒண்டவிருக்கும் காஃபிக் கோப்பை அதற்கும் முன்னால் தன் வாசத்தை நாசிக்குள் இழுத்து செல்வதென நொடிப் பொழுது சுகம். காஃபிக் கோப்பையைக் காலி செய்த நேரம் மழை விட்டு சேய்த்தூறல் மிச்சமிருந்தது. தனியே விளையாடும் குழந்தை பார்ப்பவர்களையெல்லாம் விளையாட உடனழைப்பதைப் போல் என் மேலும் விழுந்தழைத்தது அத்தூறல்.

அதியுற்சாகமாக உடை மாற்றிக் கிளம்பினேன். தெரியா ஊரில் தொலைந்து விட்டால் திரும்பி வர கையில் கைபேசியும், பாக்கெட்டில் சில நூறுகளையும் திணித்துக் கொண்டேன். எங்கே போகிறேனெனத் தெரியாது. தெரிந்து போகும் பயணங்களை விட இலக்கில்லாப் பயணங்கள் சுவாரசியமெனக் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அனுபவித்து மகிழ ஆயத்தமாகிவிட்டேன். உடன் யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. நிலா வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் மாலை.

வழியெங்கும் சகதி. திரும்பிவிடலாமா? கருமேக முகடுகளைப் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்த வேளை, தெருவோரக் கல்லிலிருந்து எதிரேயிருந்த தண்ணீர்த் தேங்கலை நோக்கிக் குதித்தது தவளையொன்று. பறவையின் சிலும்பலிலிருந்து தெளித்த நீர் விழுந்து தலை தாழ்ந்தது அருகிலிருந்த செடியின் இலை. தெரிந்தவனைத்து ராகங்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன மழை ஈசல்கள். இவற்றின் துணையுடன் நடப்பது பரமசாத்தியமானதாக இருந்தது.

மணல் வழியெங்கும் மழை விட்டுச் சென்ற காகிதக் கப்பலுக்கான சிறு குளங்கள். எதிர் வரும் வாகனங்களில் பட்டுத் தெறிக்கும் தண்ணீர்த் துளிகளில் மின்கம்பங்களின் ஒளி பட்டு மிளிரும் தங்கத் துளிகள், புது முக மனிதர்கள், புரியாத பாஷை, திக்குக்கொன்றாய் பல இனங்களின் இரவுக் கூச்சலென பரவச உணர்வுகள் பூத்துச் சொரிந்திருந்த நேரம். எல்லாம் நல்லதாய் நடப்பதாகவே ஒரு தோணல்.

நடந்து நடந்து எங்கு சென்றேனெனத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கடை தெரிந்தது. காஃபி ஷாப்பாக இருக்கலாம். நெருங்கிப் பார்க்கையில் தான் தெரிந்தது பேஸ்ட்ரி ஷாப்பென. எதையோ யோசித்துக் கொண்டே “ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்?” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.

மறுபடி பிடித்துக் கொண்டது மழை. பெருமழை. அறைக்குப் போய்ச் சேரும் வழியை மறந்து விட்டேன். வெளியில் கடந்த ஆட்டோவை அழைத்து விலாசம் சொல்லி சென்றடைந்ததும் எவ்வளவெனக் கேட்க, மிகப் பரிதாபமாய் 12 ரூபாய் எனக் காட்டிய மீட்டர் பார்த்து “பந்த்ரா ருப்யா தீஜியே மேடம்” என்றார் ஆட்டோ ஓட்டுனர். அதிசயமாயிருந்தது. 1 கிமீக்கு பதினைந்து ரூபாய், அதுவும் கொட்டும் மழையில். தவிர அதைக் கேட்ட விதம் மிக பவ்யமாயிருந்தது.

ஒரு மணி நேரம் எனக்கே எனக்காய் விருப்பமாய் செலவழித்து அறை நோக்கி நடக்கையில் துடைத்து சுத்தமாக்கப்பட்ட விஸ்தார வெளியில் பறந்து கொண்டிருந்தது மனது. “பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால் உடலுக்குள் பொருத்தி பறந்து விடு” தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

Wednesday, September 22, 2010

நண்பேன்டா!


அரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.

இவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.

இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.

இவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்!)

பேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”
“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.

எல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.

இவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.

நடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.

கார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.

ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.

Friday, September 10, 2010

பழக்கத்தில் வந்தது


பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)


*************************************************************************************************************


கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )


*************************************************************************************************************


க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் மஞ்சள் வெயில்ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)


*************************************************************************************************************


லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)


*************************************************************************************************************

நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)


*************************************************************************************************************


வாசிப்பில் கவர்ந்தது

பழக்கத்தில் வந்தது..

பள்ளியே எனக்காகக்

கைதட்டியபோது

ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..

மக்கு என்றார்கள் அவளை!


மேலே படிக்க

நான் கெஞ்சி நின்ற போது

தவறிய பேப்பர் எழுத

முரண்டு பிடித்தாள்..

ஞான சூன்யம் என்றார்கள் அவளை!


அரசு வேலைக்காக

நான் தேர்வெழுதிய போது

அம்மாவுக்குப் போட்டியாக

வீட்டு வேலை செய்தாள்..

இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!


போஸ்டிங் வாங்கியதும்

என்னைப்

பெண் கேட்டு வந்தார்கள்..

இதுவும் இருக்கே என

அவளைத் தான் முறைத்தார்கள்!


யாருமே எதிர்பார்க்கவில்லை..

ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு

அவளுக்குக் காதல் வருமென்று!


சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு

ஃபாரின் பறந்தவள்

அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

- கோ. தமிழ்ச்செல்வி


*************************************************************************************************************


யோகி டைம்ஸ்

யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.

20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.

“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

Monday, September 6, 2010

யாதுமாகி


“15 நாட்களுக்கு டெல்லியில் ட்ரெய்னிங்”
சலித்துக் கொண்டே உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளிடம்
“வெறும் 15 நாள் தானா..
அங்கேயே ஒரு பையனாப் பாத்து செட்டிலாகிடேன்.
நான் நிம்மதியாயிருப்பேன்”
என்றாள் அறைத் தோழி.
“ச்சீ, மீசையில்லாத பையனை சைட்டடிக்க கூட மாட்டேன்”
டெல்லி வந்தாயிற்று.

“இந்த சௌத் இண்டியன்ஸ் எப்போவுமே
குளிக்காதவங்க மாதிரியே இருக்காங்களே ஏன்..”
அப்பாவியாய் அவர் கேட்கையில்
கோபத்தை மீறி சிரிப்பும் வந்தது.

வாழ்வின் சுழலில், சூழலில் காதல் கொண்டு
மனவயப்பட்ட காதல் மணவறை சென்று
இன்றோடு இரு வருடங்கள்
இனிதாய் நிறைவடைகின்றன.


அதிகாலைத் துயிலெழ விருப்பம் எனக்கு.
9 மணி அலாரத்தை 10 முறை அணைத்து எழுகிறாய் நீ.

காலையில் பழங்கள் மட்டுமே உணவாக நான்.
“பரோட்டா எங்கே?” - இது நீ.

சுஜாதா, வண்ணதாசன், லா.சா.ரா.,
பெரியார், வைரமுத்து, பாஸ்கர் சக்தி,
தமிழினி, கல்குதிரை, ஆனந்த விகடன்
என எதாயிருந்தாலும் குறைந்தது
ஒரு மாதம் வாசிக்கிறேன்.

சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம்,
டேன் ப்ரௌன், ஜெஃப்ரி ஆர்சர்,
அகதா க்ரிஸ்டி, ஸ்டீக் லார்சன் என
யாவரின் எழுத்தையும் அதிகப்படியாக
இரண்டு நாட்களில் வாசித்து முடிக்கிறாய்.

எப்போதும் பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன் நான்.
பாடல்கள் எதுக்கு ஒரு படத்திலென
திரைப்படங்களை மட்டுமே விரும்புகிறாய் நீ.

என் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.
உன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.

“ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு அடை பண்ணட்டுமா?” கேட்கிறேன்.
“குல்சா பண்ணியும் ரொம்ப நாளாச்சுல்ல?” பதிலளிக்கிறாய்.

மனிதர்களை மறந்து வேலையில் மூழ்கிப் போகிறாய்.
எல்லா வேலைகளிலும் மனிதர்களைச் சுற்றியே வாழ்கிறேன் நான்.

வெகேஷனுக்கு மனாலி போகலாமென்கிறாய்.
அம்மா வீட்டிற்குப் போகலாமென்கிறேன் நான்.

செடிகளைத் தடவித் தழுவி வளர்க்கிறேன் நான்.
செயற்கைப் பூக்களை வீடெங்கும் வைத்து அழகு பார்க்கிறாய் நீ.

பெட் ரூமுக்கு பெயிண்ட்
பிங்க் கலர்?
ம், சன்செட் ஆரஞ்ச்?
இருவரின் எண்ணமும் வண்ணங்களாக.

“காஃபி தரட்டுமாப்பா”
“டீ கொடேண்டா”

ஹிந்தி படம் போவோம்ங்க.
ஆங்கிலப் படம் போகலாமே.

ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான்.

“ஏதாச்சும் எழுதட்டுமா...”
“ என் கூட கொஞ்சம் நேரம் உட்காறேன்”

வெவ்வேறு திசைகள்,
இரு வேறு எண்ணங்கள்,
எதிரெதிர் ரசனைகள்,
வித்தியாச வண்ணங்கள்...
எல்லாமே ஒருமிக்கிறது
காதலென்னும் புள்ளியில்.

எந்த ஊடலுமின்றி
மனக்கசப்புமின்றி
அழகாய்
அமைதியாய்
சீராய்
ரசனையாய் பயணிக்கிறோம்
வாழ்க்கைப் படகில்.
உன் ரசனைகளை
உன்னுடன் சேர்த்து
நான் ரசித்தவாறும்
என் தினசரியை
எப்போதும் நீ பாராட்டியவாறும்.

வாழ்க்கை வரமெனக்கு.