Wednesday, December 22, 2010
நாள்தோறும் நாடோடி
Tuesday, December 21, 2010
இனிது இனிது காதல் இனிது

இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.
Tuesday, November 23, 2010
மிஸ்டர் ஆஃப் த மிஸஸ்

Monday, November 15, 2010
ஒரு மாலை இளங்குளிர் நேரம்
Friday, October 22, 2010
என் இனிய நட்புகளுக்கு..
Tuesday, October 12, 2010
மழை மரப் பறவைகள்
Wednesday, September 22, 2010
நண்பேன்டா!
Friday, September 10, 2010
பழக்கத்தில் வந்தது
பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)
*************************************************************************************************************
கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )
*************************************************************************************************************
க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் “மஞ்சள் வெயில்”ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)
*************************************************************************************************************
லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)
நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)
*************************************************************************************************************
வாசிப்பில் கவர்ந்தது
பழக்கத்தில் வந்தது..
பள்ளியே எனக்காகக்
கைதட்டியபோது
ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..
மக்கு என்றார்கள் அவளை!
மேலே படிக்க
நான் கெஞ்சி நின்ற போது
தவறிய பேப்பர் எழுத
முரண்டு பிடித்தாள்..
ஞான சூன்யம் என்றார்கள் அவளை!
அரசு வேலைக்காக
நான் தேர்வெழுதிய போது
அம்மாவுக்குப் போட்டியாக
வீட்டு வேலை செய்தாள்..
இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!
போஸ்டிங் வாங்கியதும்
என்னைப்
பெண் கேட்டு வந்தார்கள்..
இதுவும் இருக்கே என
அவளைத் தான் முறைத்தார்கள்!
யாருமே எதிர்பார்க்கவில்லை..
ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு
அவளுக்குக் காதல் வருமென்று!
சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு
ஃபாரின் பறந்தவள்
அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..
படித்து சேகரித்த ஆங்கிலத்தை
விழுங்கி செரிக்கிறது
பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!
- கோ. தமிழ்ச்செல்வி
*************************************************************************************************************
யோகி டைம்ஸ்
யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.
20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.
“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )