Wednesday, December 16, 2009

திருப்பூரில் பதிவர் சந்திப்பு

சனிக்கிழமை கரோல்பாகின் நீண்ட பஜாரில் ஷாப்பிங். இரவு வீடு திரும்பி, சமைத்து, சாப்பிட்டு, பேக் செய்து, அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து வைத்து, காலையில் நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்று அயர்ந்த கண்களுடன் ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் ஏற்று ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப் போன அசதியுடன் கோவை வந்திறங்கினேன். கோவையிலிருந்து திருப்பூருக்கான ஒரு மணி நேரப் பயணம் மிகுந்த அயற்சியைத் தந்தது. ஆனால், அந்த அலுப்பே தெரியா வண்ணம் அந்த இள மாலைப் பொழுதைப் பொன் மாலையாய் மாற்றிய பதிவ நண்பர்களுக்கு மிகப் பெரிய நன்றியைப் பகிர்ந்து பதிவைத் தொடங்குகிறேன்.

"ஞாயிற்றுக் கிழமை மதியம் திருப்பூர் வருகிறேன் பதிவர்களை சந்திக்க முடியுமா" என்று கேட்டதற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் எப்படி என யோசித்தாலும் தலைவரே மகிழும் அளவிற்கு பிரமாதமாக நடத்தி விட்டார் "திருப்பூர் பதிவர் பேரவைப் பொருளாளர்" சுவாமிநாதன். (நீங்க வாங்கிக் குடுத்த சாப்பாட்டிற்கு பட்டம் போதுமா...)

உண்மையிலேயே எதிர்பாரா வண்ணம் பல நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியே.

கோவையிலிருந்து விஜி, தாரணிப் பிரியா, வடகரை வேலன் வர, கதவு திறந்து வரவேற்ற என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனாலும் சுதாரித்து சிரித்ததற்கு நன்றி. (தூங்கிட்டிருக்கும் போது எழுப்பினா என்ன பண்ண...)

முதல் அரை மணி நேரம் மூன்று பெண்களின் பாக்கியத்தால் வடகரை வேலன், "அண்ணாச்சி"யிலிருந்து பதவி உயர்வு பெற்று "சித்தப்பு"வானார். (இன்னும் எத்தனை நாளைக்கு தான் வயசு கேட்டா பேச்சை மாத்துவீங்க சித்தப்பு...)

விஜியின் கைப்பக்குவத்தில் சாம்பார் சாதம் அருமை. (ராம்க்கு நல்ல ட்ரைனிங் குடுத்திருக்கீங்க விஜி.)

அமைதியாக இருந்தாலும் தேவைப்படும் நேரங்களில் அரட்டையடிக்கவும், கலாய்க்கவும் மறக்கவில்லை தாரணி. அவரின் ஒன்னாம் தேதி சபதம் வெற்றியடைய வாழ்த்துக்கள். (அது உண்மையிலேயே நடந்தா சொல்லுங்க தாரணி.)

அடுத்ததாய் உள்நுழைந்தார் பொருளாளர் சுவாமிநாதன். திருப்பூர் வரும் பதிவர்களைக் கவனித்தே அவர் இளைத்து விட்டதை உணர முடிந்தது. "ஆமா, அறை எண் 308 தான்" என அவர் மற்ற பதிவர்களுக்கு கைபேசியில் வழி சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், சித்தப்பு "அறை என 308 இல் பிசாசு" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டது அவரின் எளிமையைக் காட்டுகிறது.

அடுத்ததாக ராமன் வந்தார். விஜி அவரை கலாய்க்கிறார் என்று கூட தெரியாமல் அவரின் நக்கல்களுக்கும் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த நல்லவர் அவர். அவர் டயட்டீசியன் என அவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்தது. (உங்க கம்பெனிக்கு நீங்க தாங்க மாடல்)

இவர்களின் சுவாரசியக் காலாய்த்தல்களுக்கு நடுவே அறையில் நுழைந்தார் ஒரு ஐயப்ப சாமி. நம் முரளிகுமார் பத்மநாபன். கொஞ்ச நேரம் எல்லார் பேசுவதையும் உட்கிரகித்து விட்டு பின் பேச ஆரம்பித்தவர் பல விஷயங்களைப் பேசினாலும், மற்றவர் கருத்துகளை ஆமோதித்தும், பேச விட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் ஹீரோவான எஸ்.ரா.வைப் பற்றிய பேச்சும், அவர் மீதான பதிவர்களின் பார்வையும் வித்தியாசமானது. அதையடுத்து, சித்தப்புவிடம் "இலக்கியம் என்றால் என்ன" என்றெல்லாம் கேள்விகளை அவர் ஆரம்பித்த நேரத்தில் மகளிரணி அறையை விட்டு வெளிநடப்பு செய்தது. (இலக்கியமா..... பைத்தியக்காரன் கிட்ட போய் கேளுங்க முரளி. ஒரு பட்டறை போட்டு விளக்குவார்).

விஜி வெளியேறிய போது ராமன் கொடுத்த எபெக்ட் தான் அந்த நாளின் டாப் ஆக்ஷன். (ஆனால் அவர் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பது அவரின் தனிப்பட்ட சோகம்)

இதனிடையே ஓஷோவைப் பற்றி பேச அடுத்ததாக அறைப் பிரவேசம் செய்தார் பேரரசன். எல்லோரையும் அழ வைத்த விஜி, இவரையும் விடவில்லை. ஆனாலும் கன்னக் குழி சிரிப்புடனும், "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...." என்ற ஒரே பிரம்மாஸ்திரத்தாலும் (ஏன் இந்த நடிப்பு பேரரசன்?) விஜியின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட்டார். ஆனால், என்னை தமிழச்சி என இவர் நம்ப மறுத்தது தான் சோகம். (உங்களுக்கு வரும் மனைவியின் தமிழ் உச்சரிப்புகள் தாறுமாறாகப் போக என சபிக்கப்படுகிறீர்கள் என்னால் :) )

Last but not Least என்ற தலைவரின் வசனப்படி தலைவரின் ரசிகர் கிருஷ்ண குமார் (பரிசல்காரன்) குடும்பத்தோடு வந்தது அன்றைய போனஸ். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தது போல் வித்தியாசமாக வந்தார் நண்பர். அவரின் குட்டீஸ் அவரைப் போலல்லாமல் ரொம்ப ஸ்வீட். ஏங்க கிருஷ்ண குமார், சாயங்காலம் ஏழு மணிக்கு மேல கார்ல போறதுக்கு எதுக்குங்க தொப்பி? (என்னா அலும்பலு.... )

ஒரு வழியாக வெளியில் சாப்பிட செல்லலாமென அனைவரும் அவரவர் வாகனங்களில் கிளம்பினர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அதே திருப்பூர். பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே உடைந்த ரோடுகள், நெரிசலான போக்குவரத்து, போக்குவரத்து விதிகள் என்றால் என்ன எனக் கேட்கும் திருப்பூர்வாசிகள். ஒரு வேளை இது தான் திருப்பூருக்கு அழகோ?

நல்ல தென்னிந்திய சாப்பாடு வேண்டுமென்றதால் தேர்வானது ரமணாஸ். அங்கேயும் யாரும் பேசுவதை நிறுத்தவில்லை. எங்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு விதமாக முழித்தது தனி கதை. ரமணாசில் காத்திருந்தது அடுத்த மகிழ்ச்சி: சுவாமிநாதனின் மனைவியும், குழந்தையும். முதலில் அம்மாவைப் போல் அடக்கமாக அமைதியாக இருந்த குழந்தை, அடுத்த டேபிளுக்கு ஒரு சக வயது சிறுவன் வந்ததும் என்னா லுக்கு, சைட்டு.... இந்த டேபிளிருந்து அங்கு தாவி விழாத குறை. "சுவாமி, பொண்ணுக்கும் இப்போவே ட்ரைனிங்கா" என்றதைக் கேட்டு அவர் அசடு வழிந்தது ஒரு புறம்.

சாப்பிட்டு வெளியில் வந்தால் எங்களைப் போலவே மகிழ்ச்சியாய், மலர்ச்சியாய்த் தெரிந்தது வானம். லேசான தூறலுடன் திருப்பூருக்கு வித்தியாசமான காலநிலை. அனைவரும் அதே புன்னகையுடன் விடை கொடுத்துப் பிரிந்தோம். அனைவர் மனதிலும் ஒரு அழகான பொழுதிற்கான நாளேடுக் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.


குறிப்பு: புகைப்படங்களை சீக்கிரமே தலைவரோ, செயலாளரோ, பொருளாளரோ வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் :) .

Friday, December 11, 2009

நன்றி மக்கா



பத்து நாட்களாகப் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. ஆனாலும், தொடர்ந்து மெயிலனுப்பி விசாரித்த நண்பர்களை எனக்குத் தந்த இந்தப் பதிவுலகிற்கு மிக்க நன்றி.

சுசி அழைத்திருந்த ஒரு தொடர் பதிவு ரொம்ப நாளா பெண்டிங். இன்னிக்கு அதை முடிச்சிடுவோம்.
நான் பதிவெழுத வந்த கதை. (எழுதுற கொடுமை போதாதுன்னு அதை எப்படி எழுத வந்தன்னு கதை வேறவான்னு மனசுக்குள்ள திட்டாதீங்க மக்கா....)

பதிவெழுத நான் ஆரம்பித்தது மார்ச் 2008. நான் தமிழை மிகவும் இழந்த நேரமது. தமிழ்ப் பேச்சு, நண்பர்கள், புத்தகங்கள் என எதுவுமில்லாமல் ஆங்கிலமே தாய் மொழியாகி விடுமே என்ற அச்சம் கொண்ட நேரத்தில் நண்பர் செல்வேந்திரனின் பதிவுகள் படிக்க நேர்ந்தது. அவர் பதிவுகளை பல நாட்களாக வாசித்து வந்த நிலையில், சரி நாமும் எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தின் உருவாக்கமே vigneshwari.blogspot.com. அப்போது தோழியின் காதல் பிரிவு நிகழவே அதை வைத்து எனக்குத் தெரிந்த எளிமையான வார்த்தைக் கோர்வைகளுடன் எழுதப்பட்டதே என் முதல் பதிவு. ஆனால் அதற்குப் பின் இரண்டு மாதங்களுக்கு ஒன்றும் எழுதவில்லை. அப்போதெல்லாம் பதிவுலக வாசிப்பு மிகக் குறைவு.

பின் ஆணிகள் இல்லாத நாளொன்றில் வெட்டியாக ஒரு பதிவை ஜூலையில் எழுதினேன். அதற்குப் பின் வேலை, வெளியூர் பயணம் என தொடர் காரணங்களால் பதிவுலகை மறந்து போனேன். இதற்கு நடுவே திருமணமாகி மொத்த பஞ்சாபியாக மாறிய பின், தமிழை இழந்து விட்ட வேதனை அதிகமாகியது. அப்போது தான் நிறைய நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். எப்படியெல்லாம் எழுதலாமென்ற ஐடியா கிடைத்தது. எழுத ஆரம்பித்து என்னவெல்லாமோ கிறுக்கித் தள்ளினேன். என்னாலே சகிக்க முடியாமல் போன போது அதை மாற்ற முயற்சித்தேன்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதக் கற்று, எல்லாரும் இருநூறு, ஐநூறு என போய்க் கொண்டிருக்க நான் ஐம்பது பதிவுகள் மட்டுமே ஒப்பேத்தியுள்ளேன்.

எழுத ஆரம்பித்தது தமிழைத் தக்க வைக்க மட்டுமே. ஆனால், பதிவுலகம் எனக்குப் பல விலைமதிக்க முடியாத நண்பர்களைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கவுமில்லை. இப்போது பல நாடுகளில், பல மாநிலங்களில், பல ஊர்களிலிருந்து நட்புகள் இந்தப் பதிவுலகத்தின் மூலம் கிடைத்துள்ளன. அந்த நட்புகளின் பாராட்டுகளாலும், விமர்சங்னகளாலும் தான் இன்னும் எழுதும் ஆர்வம் குறையாமல் போய்க் கொண்டுள்ளது. ஆனாலும், எழுத நேரம் தான் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் எனது மொக்கைப் பணியை செவ்வனே செய்து வருகிறேன்.
(இதை நீ சொல்லித் தான் தெரியனுமா...) நண்பர்களும் தவறாமல் பின்னூடங்களில் ஊக்கமளித்து வருகிறீர்கள், திட்டுகிறீர்கள், பாராட்டுகிறீர்கள். அதுவே நல்ல எழுத்தை என்னிலிருந்து இன்னும் கொண்டு வரும் என நம்புகிறேன். (விதி வலியது)

பதிவுலகம் பற்றி எழுதும் இந்த நேரத்தை மிக நெகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நண்பர்களின் அங்கீகாரங்கள் பின்னூட்டங்களாகவும், தொடர் பதிவுகளாகவும், மின் மடல்களாகவும், விருதுகளாகவும் என்னை வந்து சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி மக்கா.

சுசி - என் வரலாறு உங்க அளவுக்கு இல்லைங்க. நான் எப்போவுமே வரலாறுல வீக். இப்போ இந்த வரலாறைத் தொடர நான் அழைப்பது Scribblings வித்யா.
மோகன் குமார் - தனிப் பதிவெழுதி என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
கோபிநாத் - விருதுகளுக்கு நன்றி கோபி. வாங்கின விருதை இவர்களுக்கெல்லாம் அளிக்கிறேன்.

ஏற்கனவே வாங்கியிருந்தாலும் பரவாயில்ல. இன்னொன்னும் சேர்த்து வெச்சுக்கோங்க.

சுசி - மின்னும் நகைச்சுவைக்காக.
நேசமித்திரன் - நிறைய யோசிக்க வைப்பதற்காக.
குறும்பன் - குறும்பு தெறிக்கும் எழுத்திற்காக.

மறுபடியும் நன்றி மக்கா.
அடுத்த வாரம் திருப்பூரிலிருந்து சந்திக்கிறேன்.

Wednesday, December 2, 2009

பிரெஞ்சு முத்தக் காற்றும் ஐரிஷ் காஃபியும்


அழகான மாலைப் பொழுதில் கடற்கரையில் சந்திப்பாதாய் முடிவு செய்தோம். மற்ற நாட்களை விட அன்று உனக்குப் பிடித்த உடையில் நானும், எனக்குப் பிடித்த உடையில் நீயும். (நீ எது அணிந்திருந்தாலும் எனக்குப் பிடிக்கும் தானே.)

முதன் முறை உன்னுடன் பைக்கில். நகரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்க, எல்லாமே நின்று போனதாய் எனக்கு மட்டும். உன் நெருக்கத்தை உணர்ந்த தருணமது. சில நிமிடங்களில் கடற்கரை. சில்லென்ற காற்று கேசம் கலைக்க, சிலையாய் நின்று நான் உன்னை ரசிக்க ரம்மியமான மாலை அது.

ஏதோ கடற்கரை மணலில் நடை பழகுவது போல கால்களை மணலுக்குள் புதைத்து முழித்து நான் நிற்க, என் செல்லக் குறும்பைப் புரிந்தவனாய் உன் கைகள் கொடுத்தாய். அதன் பின் மலர்கள் மீது நடப்பது போன்றிருந்தும், முட்கள் மேல் நடப்பது போல் நான் சிரமப்பட உன் பிடிமானம் இறுகியது என் கைகளில். கடல் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா என் ஏங்கியது மனது.

லேசானத் தூறலுக்கு எழுந்து ஓடும் சிலர், தூறல் விழுவதே தெரியாமல் காதலில் விழுந்திருக்கும் பலர் இருக்கும் கடற்கரையில் அலைகளுக்கு சில அடிகள் தூரத்தில் அமர்ந்தோம். மயக்கும்
உன் சட்டை வாசம், அந்த வாசனையை உணரும் நெருக்கம், நமக்குத் துணையாய் முழு நிலவு, என் அண்மைக்குப் போட்டியாய் உன்னைத் தொட ஆர்ப்பரிக்கும் அலைகள், அவற்றைப் பெருமிதப் பார்வையுடன் பார்க்கும் நான், என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்!

ஏதோ முக்கியக் கருத்தரங்கின் நாயகன் போல பேசிக் கொண்டே....... போகிறாய். கடல், அலை, நிலா, காற்று, மேகம், வைரமுத்து, காதல், கமலஹாசன் என
முடிவற்றுப் போகின்றது என்னை மயக்கும் உன் நீண்ட உரையாடல். "போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" என்று நடுவே நான் சொன்னதை நீ மதித்ததாகவே தெரியவில்லை.

"உனக்கான வெளி மிகப் பெரியது, வான் போல. அதில் எனக்கான இடம் சிறு விண்மீனது" என்றேன். "விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்.

பதிலாய் நீ சிரிப்பை உதிர்க்க காஃபி ஷாப் நோக்கிச் சென்றன இரு ஜோடிக் கால்களும். வரும் போது கைபிடிக்கத் தயங்கிய உன் கைகளில் ஒன்று என் இடையிலும், மற்றொன்று எனது கைகளுக்குள்ளும். கடற்கரை மணல் ஒன்று விடாது அனைத்திலும் நம் பாதம் பதிய நடை பயின்றோம். ஒன்றரை மணி நேர நடை ஒரு சில வினாடிகளாக உருக, மீதி நேரம் காஃபி ஷாப்பிற்குள்.

சுற்றிலும் காற்றும், கடலும் மட்டுமே இருந்த வெளியை விட்டு வெளிவந்தோம். அதாவது காஃபி ஷாப்பின் உள்ளே வந்தோம். என்ன வேண்டுமென்பது போல் நான் பார்க்க, நீதான் என்பது போல் நீயும் பார்க்க, "What would you like to have mam?" என்றவனை சிரித்தபடி முறைத்துக் கொண்டிருந்தாய். ஐரிஷ் காஃபி என்று முடிவானதும்தான் நகர்ந்தான் அவன்.

பேசிப்பேசியே கடற்கரையில் கடந்த நேரம், இங்கு பேசாமலே போனது. அடுத்தடுத்து அமர்ந்திருந்ததால் முகம் பார்க்க முடியாமல் போனதாய் சொன்னாய். இங்கே முகம் மட்டுமே பார்த்தபடி இருக்கிறோம். "முகம் பார்த்தபடி பேச எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க எத்தனித்த நேரம் ஐரிஷ் காஃபி வந்தது. காதலால் கரைந்த நாம் காஃபியிலும் கரைந்தோம். "சர்க்கரை போடவில்லையோ.." என்றாய். கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.