Thursday, March 13, 2008

தேடுகிறேன் என்னை...

ஒரு கணம்,
ஒரு ஊடுருவல்,
உனது பார்வை!

இதயத்தில் பல பட்டாம்பூச்சிகள்
நீ என்னை தொடர்ந்து பார்த்த போது!

எனக்கு
வெட்கப்படத் தெரியும் என்பதை
கற்றுத் தந்தது உன் கண்கள் தான்!

கடும் வெயிலிலும்
என்னை நடுங்க வைத்தது
உன் முதல் தொடுகை!

சரியா, தவறா என
யோசித்து முடிக்கும் முன்னரே
சேர்ந்து பிரிந்தன
நம் இதழ்கள்!

நீ
என்னுடன் இல்லாத நேரங்கள்
நரகமாயின!

பேசாத நிமிடங்களில்
பைத்தியமானேன்!

நீ
எனதே எனதானவன்
என்ற அகந்தையில்
நான் இருந்த போது,
என்னை -
சிதைத்து சின்னாபின்னமாகின,
"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்"
என்ற உன் வார்த்தைகள்.

அன்று உடைந்தவள்,
இனி -
மீட்க முடியாது எனத் தெரிந்தும்
தேடுகிறேன்,

உன்னுள் தொலைந்த
என்னை!